Paristamil Navigation Paristamil advert login

மாநிலங்களே இருக்க கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்

மாநிலங்களே இருக்க கூடாது என பா.ஜ., அரசு செயல்படுகிறது: முதல்வர் ஸ்டாலின்

4 ஐப்பசி 2025 சனி 14:05 | பார்வைகள் : 106


ராமநாதபுரத்தில் நடந்த அரசு விழாவில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்ட உதவிகளை வழங்கியும்

முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

தமிழக மீனவர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை இலங்கை கடற்படை தாக்குதல். இதனை தொடர்ந்து கண்டிக்கிறோம். போராட்டம் நடத்துறோம். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு, நம் மீனவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யவில்லை. கச்சத்தீவை மீட்பதுதான் சரியான தீர்வாக அமையும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளோம்.

இதை வைத்து இலங்கை அரசுக்கு மத்திய அரசு ஒரு கோரிக்கை வைத்திருக்க வேண்டும்; அதை செய்யக் கூட பா.ஜ., அரசு மறுக்கிறது. இலங்கை சென்ற பிரதமர் மோடியும் இதை வலியுறுத்த மறுக்கிறார். தமிழக மீனவர்கள் என்றால் மட்டும் அவர்களுக்கு இளக்காரமாக போய்விட்டது.

நாம் இந்தியர்கள் இல்லையா. தமிழர்கள் என்றாலே பா.ஜ அரசுக்கு ஏன் கசக்கிறது. ஜி.எஸ்.டி.,யால் நிதி உரிமை போய்விட்டது. நிதிப் பகிர்விலும் ஓரவஞ்சனை. சிறப்புத் திட்டம் எதையும் அறிவிக்க மாட்டார்கள். பள்ளிக் கல்விக்கான நிதியை தரமாட்டார்கள். பிரதமர் பெயரில் இருக்கின்ற மத்திய அரசு திட்டங்களுக்கும் நாம் தான் படியளக்க வேண்டும்.

இதெல்லாம் போதாது என்று நீட், தேசிய கல்விக் கொள்கை என்று கல்வி வளர்ச்சிக்கும் தடை, கீழடி அறிக்கைக்கு தடை, எல்லாவற்றிற்கும் மேல் தொகுதி மறுவரையறை, இப்படி தமிழகத்துக்கு வஞ்சகம் செய்வதையே மத்திய அரசு வழக்கமாக செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தை மூன்று முறை பேரிடர் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் வராத, நிதி தராத மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூருக்கு மட்டும் உடனே வருகிறார். மணிப்பூர் கலவரம், குஜராத் விபத்துகளுக்கெல்லாம் உடனே விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ., கரூருக்கு மட்டும் உடனே அனுப்புகிறது என்றால், தமிழக மக்கள் மீது இருக்கின்ற அக்கறையால் கிடையாது.

அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இதில் ஏதாவது அரசியல் ஆதாயம் கிடைக்குமா,இதை வைத்து யாரையாவது மிரட்டலாமா, உருட்டலாமா என்று பார்க்கின்றனர். மாநில நலன்களை புறக்கணித்து, மாநில உரிமைகளை பறித்து, இன்னும் சொல்ல வேண்டும் என்றால் மாநிலங்களே இருக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு மத்திய அரசு செயல்படுகிறது.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு கூட்டத்திற்கு கூட்டம், மேடைக்கு மேடை, தெருவுக்கு தெரு சென்று கூட்டணிக்கு ஆள் சேர்ப்பதற்கான அசைன்மென்ட்டை பா.ஜ., வழங்கி உள்ளது. அவரோ மைக் கிடைத்தால் போதும் என்று தங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் விருப்பம் போல திட்டிக் கொண்டிருக்கிறார்.

தமிழக மக்களின் மேல் உண்மையாக அக்கறை கொண்ட யாரும் பா.ஜ.,வுடன் கூட்டணிக்கு சேர மாட்டார்கள். அதிலும், மூன்றாவது முறை மக்களின் ஆதரவு குறைந்து ஒரு சிலரின் ஆதரவோடு ஆட்சி அமைத்த பிறகு, ஆர்.எஸ்.எஸ்., பாதையில் வேகமாக நடைபோட ஆரம்பித்திருக்கிறது மத்திய பா.ஜ., அரசு. இவ்வாறு முதல்வர் பேசினார்.

மயங்கி விழுந்த போலீஸ்காரர்

ராமநாதபுரத்தில் முதல்வரின் வருகையை முன்னிட்டு துாத்துக்குடி, திருநெல்வேலி, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் மட்டும் 1,500 போலீசார் ஈடுபட்டனர். விழா பகுதியில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சரவணக்குமார், 30, என்ற போலீஸ்காரர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். காலை 10:30 மணிக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சரவணக்குமார் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த மருத்துவ குழுவினர் அவருக்கு முதலுதவி அளித்து ஆம்புலன்சில் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்