பிரபல இயக்குநருடன் 3வது முறையாக இணையும் ரஜினி?

12 ஐப்பசி 2025 ஞாயிறு 18:11 | பார்வைகள் : 163
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'கூலி' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.
இதன் முதல் பாகமான ‘ஜெயிலர்’ திரைப்படம் 2023ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு வசூல் சாதனைகளைப் படைத்தது. ரஜினிகாந்தின் சினிமா கெரியரில் 2.0 படத்துக்கு அடுத்தபடியாக மிகப் பெரும் வெற்றியை ஜெயிலர் திரைப்படம் கொடுத்தது. இந்தப் படத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருந்தார்.
ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.
அடுத்த வருடம் இந்த படம் வெளியாகும் என்று ரஜினிகாந்த் அண்மையில் அறிவித்தார். அதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் 12ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகும் எனத் தெரிவித்தார்.
அடுத்ததாக பல வருட இடைவெளிக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஒரு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவரின் எல்சியூவின் ஒரு அங்கமாக இந்த திரைப்படம் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதற்கிடையே தான், ரஜினிகாந்தும் நெல்சனும் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்ற உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினிகாந்திடம் ஒரு ஸ்கிரிப்டை நெல்சன் கூறியதாகவும், அதற்கு ரஜினி சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
'ஜெயிலர் 2' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆருடன் நெல்சன் இணையவிருக்கிறார். 2026-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இதன் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் படத்தை நெல்சன் முடித்த பின், அதேவேளையில் கமலுடன் இணையும் படத்தை ரஜினிகாந்த் முடிந்த பின் நெல்சன் - ரஜினி காம்போ மூன்றாம் முறையாக இணையும் எனத் தெரிகிறது.