Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அனுமதி

தமிழகத்தில் பட்டாசு வெடிக்க காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் அனுமதி

15 ஐப்பசி 2025 புதன் 12:40 | பார்வைகள் : 145


தீபாவளி  முன்னிட்டு டில்லியில் 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. குழந்தைகளின் மகிழ்ச்சியை கருத்தில் கொண்டு, மூன்று நாட்கள் காலை 3 மணி நேரம் மாலை 3 மணி நேரம் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும்.

வரும் அக்டோபர் 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி அன்று பட்டாசு வெடித்து, புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். தீபாவளி நாளில் காலை, 6:00 முதல் 7:00 மணி வரை, இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்' என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:பட்டாசுகள் வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிக ஒலி மற்றும் காற்று மாசால் குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள், உடல் மற்றும் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பட்டாசு உற்பத்தி, விற்பனைக்கு தடை கோரிய பொதுநல வழக்கில், 2018 அக்டோபர், 23ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 'சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்ப டுத்தி, பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும். வருங்காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும்.

'பட்டாசுகள் வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து, போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே, பட்டாசுகளை வெடிக்க, மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், 2018 முதல் தீபாவளி பண்டிகையன்று, காலை, 6:00 முதல் 7:00 மணி வரையும். இரவு 7:00 முதல் 8:00 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி தினத்தன்றும், அந்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உடல் நல பாதிப்புகள் குறித்து போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பேணிக்காப்பது, நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்புமாகும். இதை கருத்தில் வைத்து, பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக தீபாவளி கொண்டாட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசுபடுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

* மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், திறந்தவெளியில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் வாயிலாக முயற்சிக்க வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை

* மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ள இரண்டு மணி நேரம் தவிர, மற்ற நேரங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

* அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் மற்றும் சரவெடிகளையும் தவிர்க்க வேண்டும்.

* மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.

* குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிக்கக்கூடாது.

வர்த்தக‌ விளம்பரங்கள்