சூர்யாவின் ‘அஞ்சான்’ ரீ – ரிலீஸ் …. ‘கருப்பு’ படத்துக்கு சிக்கலாக மாறுமா?

15 ஐப்பசி 2025 புதன் 13:47 | பார்வைகள் : 159
கடந்த 2015 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் ‘அஞ்சான்’ திரைப்படம் வெளியானது. இந்த படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தார். இதில் சூர்யா, சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி மற்றும் பலர் நடித்திருந்தனர். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். ஆக்ஷன் கலந்த கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. திரைக்கதை வலுவாக இல்லாததால் இந்த படம் படுதோல்வி படமாக அமைந்தது.
அது மட்டும் இல்லாமல் இயக்குனர் லிங்குசாமியின் சினிமா கேரியரில் மிகப்பெரிய அடியாக அமைந்தது. பலரும் இந்த படத்தையும், லிங்குசாமியையும் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படம் மறு படத்தொகுப்பு செய்யப்பட்டு விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி இந்த படம் ரீ-ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இந்த படம் இந்தியில் ரீ- எடிட்டிங் செய்யப்பட்டு யூடியூபில் வெளியிடப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 2 கோடி பார்வையாளர்களை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இருப்பினும் சூர்யாவின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறாமல் இருப்பதால் அடுத்தது ரசிகர்கள் கருப்பு திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சமயத்தில் அஞ்சான் திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படுவது ‘கருப்பு’ படத்திற்கு சிக்கலாக மாறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து ரீ- எடிட்டிங் செய்யப்பட்டு வெளியிடப்படும் ‘அஞ்சான்’ திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தினால் ஓகே. ஆனால் மீண்டும் ட்ரோல் செய்யப்பட்டால் அது ‘கருப்பு’ படத்தையும் பாதிக்கும் என சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.