ஹமாஸ் படைகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை

17 ஐப்பசி 2025 வெள்ளி 12:59 | பார்வைகள் : 412
காஸாவில் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கியுள்ள நிலையிலேயே ட்ரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். ஹமாஸ் படைகள் தங்கள் எதிரிகள் மற்றும் சந்தேக நபர்களை பொதுவெளியில் படுகொலை செய்யும் சம்பவம் வெளியாகியுள்ளதை அடுத்தே ட்ரம்பிடம் இருந்து மிரட்டல் வந்துள்ளது.
ஹமாஸ் படைகளின் நடவடிக்கைகள் தம்மை வெகுவாக பாதித்ததில்லை, ஆனால் சமீபத்தில் அவர்கள் பொதுவெளியில் எதிரிகளை படுகொலை செய்துள்ளது மிக மோசமான நடவடிக்கை என்றார்.
அவர்கள் ஆயுதங்களைக் கைவிடவில்லை என்றால், அமெரிக்கா அவர்களை அதற்கு கட்டாயப்படுத்தும் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். காஸாவில் நிலைமைகள் சீரடையவில்லை என்றால், வேறு வழியில்லை, உள்ளே புகுந்து தாக்குதல் நடத்துவது தான் முறை என்றார்.
ஹமாஸ் தெரிவிக்கையில், தங்களின் பாதுகாப்பு படைகளுக்கு அழைப்பு விடுத்ததாகவும், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக பெரும்பாலானோர் சிதறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஹமாஸ் படைகளுக்கு எதிரான சில குழுக்கள் தற்போது இஸ்ரேல் ஆதரவு நிலை எடுத்துள்ளதாகவும், அவர்களை இனம் கண்டு ஒழிக்கவும் ஹமாஸ் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையில், மேலும் பணயக்கைதிகளின் உடல்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஹமாஸ் கூறியதைத் தொடர்ந்து, மீண்டும் சண்டையைத் தொடங்குவோம், அமைதி ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வோம் என்று இஸ்ரேல் அச்சுறுத்தியுள்ளது.
திட்டமிட்டபடி திங்களன்று 28 இஸ்ரேலியர்களின் சடலங்களையும் ஒப்படைக்க வேண்டும், ஆனால் தரைமட்டமாக்கப்பட்டுள்ள காஸாவின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்க முடியவில்லை என்றே ஹமாஸ் விளக்கமளித்துள்ளது.