பரிஸ் மற்றும் மடகஸ்கார் இடையிலான எயர் பிரான்ஸ் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!!

17 ஐப்பசி 2025 வெள்ளி 23:13 | பார்வைகள் : 312
மடகஸ்காரில் கடந்த சில வாரங்களாக நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்கள் காரணமாக, முன்னாள் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜொலினா (Andry Rajoelina) பதவி விலகினார். அதன் பின்னர், கர்னல் மைக்கேல் ராண்டிரியரினா (colonel Michaël Randrianirina) புதிய ஜனாதிபதியாக அக்டோபர் 17 அன்று பதவியேற்றார். பாதுகாப்பு காரணமாக எயர் பிரான்ஸ் கடந்த அக்டோபர் 11 அன்று பரிஸ் மற்றும் அன்டனனரிவோ (Antananarivo) இடையிலான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
இப்போது, சூழ்நிலை சீரடைந்துள்ளதால், எயர் பிரான்ஸ் அக்டோபர் 18 சனிக்கிழமை முதல் அந்த சேவையை மீண்டும் தொடங்க உள்ளது. வாரத்திற்கு ஆறு விமானங்கள் இயக்கப்படும். இரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கான பயணிகள் இலவசமாக தங்களது பயணத்தை மாற்றவோ, பணத்தை முழுமையாக திரும்ப பெறவோ முடியும் என எயர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.