டாஸ்மாக் வழக்கில் தடை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தகவல்

18 புரட்டாசி 2025 வியாழன் 12:37 | பார்வைகள் : 105
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க விதித்த தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்துள்ளது.
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, கடந்த மே 16ல், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில், அமலாக்கத் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டு, அமலாக்கத் துறை நடவடிக்கைகளுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என, தடை விதித்த பின்னும், டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை உதவி இயக்குனர் விகாஸ்குமாரை, நேற்று ஆஜராக உத்தரவிட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.சவுந்தர் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமலாக்கத் துறை உதவி இயக்குனர் விகாஸ்குமார் நேரில் ஆஜராகியிருந்தார். இதையடுத்து, அமலாக்கத் துறை தரப்பில் வாதாடியதாவது:
ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் விக்ரம் ரவீந்திரனுக்கு எதிராக மேல் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. பதில் மனு தாக்கல் செய்யாததற்காக, அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்த்தும், மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், 'அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவு பிறப்பித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு தான், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, ஏற்கனவே விசாரித்த அமர்வில் பட்டியலிட உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.