CSK அணியில் இணைந்த பின்னர் புகைபிடிக்க ஆரம்பித்தேன் - உத்தப்பாவின் காரணம்

18 புரட்டாசி 2025 வியாழன் 11:04 | பார்வைகள் : 109
CSK அணியில் இணைந்த பின்னர் புகைபிடிக்க ஆரம்பித்தாக உத்தப்பா பேசியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, 2021 மற்றும் 2022 ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடினார்.
இந்த 2021 ஐபிஎல் தொடரில், CSK அணிக்கு கோப்பை வென்றாலும், 4 போட்டிகளில் மட்டுமே விளையாட உத்தப்பாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
4 போட்டிகளில் விளையாடிய உத்தப்பா, ஒரு அரைசதம் உட்பட 115 ஓட்டங்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில், பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய அவர், 2021 ஐபிஎல் தொடரில் CSK அணிக்காக விளையாடிய போதே புகைப்பிடிக்க தொடங்கினேன் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் இருந்த போது எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அது எனக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தியது.
மிகவும் வேதனையில் இருந்த நான், அதனை சமாளிக்க முடியாமல் புகைபிடிக்க தொடங்கினேன். ஒரு சிகரெட், நான்காக மாற தொடங்கியது.
மகனால் நிறுத்தினேன் 26 டிசம்பர் 2023 அன்று எனது மகன் நீல் ஏன் அப்பா புகைபிடிக்கிறாய் எனக் கேட்டான். எனக்கு இது பிடிக்கவில்லை, இருந்தாலும் இதை செய்கிறேன். ஏன் என்ன ஆனது என கேட்டேன்.
நன்றாக வாசிக்க பழகியிருந்த அவன், சிகெரெட் பேட்டியின் அட்டையின் மேல் இருந்த எச்சரிக்கை வாசகத்தை வாசித்தான்.
அதன் பின்னர், "நீ சாக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தயவுசெய்து புகைப்பதை நிறுத்து" என கூறினான்.
டிசம்பர் 31 ஆம் திகதி நிறுத்திவிடுவேன் அதன் பிறகு புகைக்க மாட்டேன் என கூறினேன். அதேபோல், டிசம்பர் 31 ஆம் திகதி அவனை அழைத்து, சிகரெட் மற்றும் லைட்டரை குப்பை தொட்டியில் போடுமாறு கூறினேன். அவனும் அதை குப்பை தொட்டியின் உள்ளே போட்டான். அதன் பிறகு இன்று வரை நான் புகைப்பதில்லை" என கூறினார்.