விண்வெளி ஆய்வில் இது ஒரு பொற்காலம்; இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா பெருமிதம்

20 புரட்டாசி 2025 சனி 13:01 | பார்வைகள் : 107
விண்வெளி ஆய்வை பொறுத்தவரை இது நமக்கு ஒரு பொற்காலம் என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா தெரிவித்தார்.
டில்லியில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா கூறியதாவது: விண்வெளி நிலையத்திலிருந்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய அனுபவம் எனக்கு சிறப்பு வாய்ந்தது. எனக்கு கிடைத்த அன்பும் ஆதரவும் எனது மனதை மிகவும் கவர்ந்துள்ளது. 2023ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ககன்யான் திட்டம் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. இந்தத் திட்டத்தின் நோக்கம் ஒரு மனிதனை விண்வெளிக்கு அனுப்பி பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வருவது தான். அதைத்தொடர்ந்து விண்வெளி நிலையம் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அனுபவம்
ககன்யான் திட்டம் மாபெரும் இலட்சியக் கனவுடன் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் வெற்றிக்கான பாதையை நோக்கி எனது பணி இருந்து வருகிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ததன் மூலம் நான் பெற்ற அனுபவம் நமது சொந்த திட்டத்திற்கு பயன்படுத்த உதவியாக இருக்கும். நமது எதிர்காலத்தின் தலைமுறையையும் ஊக்குவிக்கும். இதற்கு பங்களிக்க எனக்கு ஆர்வமும் விருப்பமும் ஏற்கனவே உள்ளன. மீதமுள்ளவை நாம் அதை எவ்வாறு செயல்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது.
பொற்காலம்
விண்வெளி ஆய்வைப் பொறுத்தவரை இது உண்மையில் நமக்கு ஒரு பொற்காலம். சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் தான் உள்ளது. ஆனால் எனது பயணம் இந்த 400 கிலோமீட்டர்களை கடந்து செல்வது மட்டுமல்ல. அது அதை விட மிக நீண்டது. இந்தப் பயணத்தில், நான் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். உண்மையிலேயே மனிதகுலத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு சுபான்ஷூ சுக்லா கூறினார்.