எச்1பி விசாவில் ஊழியர்களை நியமித்தோருக்கு அவசரநிலை; தலா ரூ.88 லட்சம் கட்டணம் விதித்து டிரம்ப் உத்தரவு

21 புரட்டாசி 2025 ஞாயிறு 07:35 | பார்வைகள் : 146
அமெரிக்காவுக்கான 'எச்1பி' விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் 88 லட்சம் ரூபாயாக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் இருந்து ஏற்கனவே விசா வைத்திருப்போருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ள இந்தியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
அமெரிக்காவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் மென்பொருள் உள்ளிட்ட திறன் வாய்ந்த துறைகளுக்கு தேவையானவர்கள் கிடைக்காத நிலையில், 1990களில் அறிமுகம் செய்யப்பட்டது தான், எச்1பி விசா முறை. இதன்படி, இந்தியா, சீனா உட்பட வெளிநாடுகளில் இருந்து திறன் வாய்ந்தவர்கள் வேலைக்கு கிடைத்தனர். இவ்வாறு குறிப்பிட்ட காலம் தங்கியிருந்து வேலை பார்த்த வெளிநாட்டவருக்கு, 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியிருக்கும் உரிமை கிடைக்கும்.
6 ஆண்டுகள்
சாதாரணமாக எச்1பி விசா என்பது முதலில் மூன்று ஆண்டுக்கு வழங்கப்படும்; அதன்பின், ஆறு ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படும். ஜனவரியில் அதிபராக பதவியேற்ற டிரம்ப், சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவரை திருப்பி அனுப்ப முடிவு செய்தார்.
4 லட்சம் ரூபாய்
புதிதாக வருபவர்களையும் குறைக்க விசா நடைமுறைகளை கடுமையாக்கினார். குறைந்த ஊதியம், குறைந்த திறன் கொண்ட பணியாளர்களை நிரப்புவதற்காக எச்1பி விசாவை தவறாக பயன்படுத்தி, அமெரிக்கர்களின் பணி வாய்ப்புகள் சுரண்டப்பட்டு வருவதாக டிரம்ப் அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இந்நிலையில், புதிய உத்தரவு மூலமாக எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 1 லட்சம் டாலராக (ரூ. 88 லட்சம்) உயர்த்தியுள்ளார். தற்போது இந்த கட்டணம் 4 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே உள்ளது.
அமெரிக்கா விளக்கம்
இந்த முடிவு, இந்தியர்களை பணிக்கு அமர்த்தி இருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை குறி வைத்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில், எச்1பி அதிகம் பயன்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது. புதிய உத்தரவின் மூலம் தற்போது H1B விசா வைத்திருக்கும் யாருக்கும் பாதிப்பு இல்லை. ஒரு லட்சம் டாலர் கட்டணம் என்பது புதிய விசா கோரும் விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமெரிக்கா தெளிவுபடுத்தி உள்ளது.
டிரம்ப் உத்தரவு
கடந்தாண்டு வழங்கிய எச்1பி விசாக்களில், 71 சதவீதம் இந்தியர்களே பெற்றனர். அடுத்து, சீனர்கள் 11.7 சதவீதம் பெற்றனர். இப்படி அங்கு வந்தோருக்கு, அமெரிக்கர்களுக்கு வழங்கப்படும் அதே அளவு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இன்று (21ம் தேதி) அமலுக்கு வரும் என்பதால், மெட்டா, மைக்ரோசாப்ட் போன்ற பெரும் நிறுவனங்கள், எச்1பி விசா வைத்துள்ள பணியாளர்கள் 14 நாட்களுக்கு அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்; சொந்த நாடு சென்றுள்ள பணியாளர்கள் 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்ப வேண்டும் என அறிவித்துள்ளன.
இதற்கும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. H1B விசா வைத்திருப்பவர்கள், வெளிநாடு சுற்றுலா சென்றவர்கள், எப்போதும் போல் அமெரிக்காவுக்கு மீண்டும் திரும்பி வரலாம். அவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஜூன் 30ம் தேதி வழங்கப்பட்ட விசாக்களில் 13 சதவீதத்தை, இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெற்றுள்ளன.
* டி.சி.எஸ். 5,505;
* இன்போசிஸ் 2,004;
* எல்.டி.ஐ. மைண்டுட்ரீ 1,807;
* எச்.சி.எல். 1,728;
* விப்ரோ 1,523;
* டெக் மஹிந்திரா 951;
* எல் அண்ட் டி 352 பெற்றுள்ளன. எனினும், முந்தைய ஆண்டை விட இது குறைவு.
அமெரிக்காவுக்கே பாதிப்பு
நிடி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாகி அமிதாப் காந்த் கூறியதாவது: எச்1பி விசா கட்டண உயர்வால், இந்தியாவுக்கு பாதிப்பு வராது. அங்கு செல்லும் இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் இனி நம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க வாய்ப்புள்ளது. அமெரிக்காவுக்கு தான் இழப்பு.