மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது ! தர்மேந்திர பிரதான்

22 புரட்டாசி 2025 திங்கள் 08:48 | பார்வைகள் : 101
மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது என தமிழக அரசுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை ஐஐடியில் நிருபர்களிடம் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: கல்வி நிதி விவகாரம் குறித்து இரண்டு வருடமாக நான் பேசி வருகிறேன். மீண்டும் சொல்கிறேன். இந்த விஷயத்தை தமிழக அரசு அரசியல் விவகாரமாக பார்க்கிறது. இது குறித்து பார்லிமென்டில் நான் பேசி இருக்கிறேன். தேசிய கல்விக்கொள்கையை நாடே ஏற்றுக்கொண்டது. மத்திய அரசு தமிழகத்தில் கல்விக்கு ஆண்டுதோறும் நிதி வழங்கி வருகிறது.
கல்வி நிதி
மதிய உணவு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி வழங்கி உள்ளது. இந்த ஆண்டு வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய கல்வி சார்ந்த நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. கல்வி நிதி விவகாரம் தொடர்பாக தமிழக கல்வித்துறை அமைச்சர் மகேஷ், திமுக எம்பி கனிமொழி என்னை சந்தித்தனர். அவர்களிடம் நான் தெளிவாக கூறிவிட்டேன். மத்திய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியை மத்திய அரசு வழங்கும்.
அரசியல் நிலைப்பாடு
இது மாணவர்களின் நலனுக்கான விஷயம். இதில் அரசியல் கூடாது. இருதரப்பும் பஸ்பர மரியாதையுடன் செயல்பட வேண்டும். தமிழகத்தில் அரசு மும்மொழி கொள்கையை அரசியலாக்கிக் கொண்டிருக்கிறது. மும்மொழி கற்பதில் என்ன பிரச்னை? தமிழக அரசு தனது அரசியல் நிலைப்பாட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்க கூடாது. இருமொழிக் கொள்கை என்பதை அரசியல் நிலைப்பாடாக திமுக வைத்துள்ளது. தமிழக மாநில பாடத்திட்ட பள்ளிகளில் தெலுங்கு, உருது, மலையாளம் என பல மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
3வது மொழி
தாய்மொழியுடன் ஏதாவது இரு மொழிகளை கற்கலாம் என்பதே தேசிய கல்விக்கொள்கையின் நோக்கம். 3வது மொழியாக ஏதாவது ஒரு மொழியை படிக்க சொல்கிறோம். மத்திய அரசு எந்த மாநிலத்திலும் எந்த மொழியையும் திணிக்கவில்லை. தேசியக்கல்வி 3வது மொழியை ஊக்குவிக்கிறது. மும்மொழி கொள்கையில் அரசியல் நிலைப்பாடு கூடாது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மாணவர்கள் 10 மொழிகள் கற்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவ்வாறு தர்மேந்திர பிரதான் கூறினார்.
தமிழ் கற்கணும்!
சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சியில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது: காசி முதல், தென்காசி வரை உள்ள மக்கள் ஒரே கலாசாரத்தை பின்பற்றுகின்றனர். நான் தமிழ் மொழி கற்க விரும்புகிறேன். அது ஒரு துடிப்பான மொழி. பல மொழிகளை கற்றுக் கொள்வதற்கு தாய்மொழியில் புலமை பெற்று இருப்பது அவசியம்.
நம் நாட்டில் 30 கோடி மாணவர்கள் இருக்கின்றனர். 12ம் வகுப்பு படிக்கும்போது 30% மாணவர்கள் படிப்பினை தொடர்வதில்லை. அனைத்து மாணவர்களும் கல்லூரிகளில் சேர்வதில்லை. பள்ளிக்கல்வியில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.