நியூசிலாந்தில் 2 குழந்தைகளைக் கொன்று பெட்டியில் மறைத்து வைத்த தாய் !

23 புரட்டாசி 2025 செவ்வாய் 11:16 | பார்வைகள் : 245
நியூசிலாந்தில் தாயொருவர், தனது இரண்டு குழந்தைகளைக் கொன்று, அவர்களின் உடல்களை பெட்டியொன்றில் மறைத்து வைத்தமை தொடர்பில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு உயர்மட்ட வழக்காக பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் இரண்டு வருடங்கள் நீடித்த விசாரணைக்குப் பின்னர், செவ்வாய்க்கிழமை 23.09.2025 இன்று ஆக்லாந்து உயர் நீதிமன்றத்தினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில், 44 வயதான ஹக்கியுங் லீ என்ற பெண் கொலைக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவரது கணவர் புற்றுநோயால் உயிரிழந்த சில மாதங்களுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்த கொலையின் போது அவர் மனநலம் பாதிக்கப்படடிருந்ததாக அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் இந்த செயல்கள் திட்டமிட்டு செய்யப்பட்டவை என வாதிடப்பட்டது.
ஆக்லாந்தில் நடந்த ஏலத்தில் கைவிடப்பட்ட சேமிப்புப் பகுதியின் ஒரு பகுதியை வாங்கிய ஒரு குடும்பத்தினரால் அவரது குழந்தைகளின் எச்சங்கள் 2022 இல் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.