ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
6 கார்த்திகை 2025 வியாழன் 08:10 | பார்வைகள் : 100
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டதாகவும், மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது என்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.
பீஹார் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கான பிரசாரம் ஓய்ந்திருக்கும் நிலையில், நாளை ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்குத்திருட்டு பற்றி இன்று (நவ.,05) ராகுல் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருடப்பட்டு இருக்கிறது. மொத்தம் உள்ள ஓட்டுகளில் 8ல் ஒன்று போலியானது. 5 லட்சத்து 21 ஆயிரத்து 619 ஓட்டுக்கள் போலி வாக்காளர்கள். 93 ஆயிரத்து 174 ஓட்டுக்கள் போலியான முகவரியை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்க் வாக்காளர்கள் (ஒரே முகவரியில் பல வாக்காளர்கள்) 19 லட்சம் பேர் உள்ளனர். ஓட்டுப்பதிவுக்குப் பிறகான தேர்தல் கருத்துக்கணிப்புகள், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என கூறியிருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் மாறி வந்தது.
மிகப்பெரிய சதி
ஓட்டு எண்ணிக்கைக்கு 2 தினங்களுக்கு முன்பாக, முதல்வர் வேட்பாளராக இருந்த நயாப் சிங் சைனி பாஜ கண்டிப்பாக ஹரியானாவில் ஆட்சியைப் பிடிக்கும், அதற்கான வேலைகளை செய்து விட்டோம் என சிரித்தபடியே கூறுகிறார். அந்த சிரிப்பின் பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது.
நாட்டின் இளைஞர்கள் நான் சொல்வதை கவனமாக கேளுங்கள். ஏனென்றால் உங்களது எதிர்காலத்தை பற்றி தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காக தான் பேசுகிறேன்.
பிரேசில் மாடல் அழகி
பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநில தேர்தலில் ஓட்டு செலுத்தி இருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் பெயர் ஹரியானா மாநில வேட்பாளர் பட்டியலில் சேர்த்தது எப்படி? இவ்வாறு ராகுல் பேசினார்.
சிசிடிவி காட்சிகள்
மேலும் ராகுல் கூறியதாவது: பெண்மணி ஒருவர் இரண்டு வாக்குப்பதிவு மையங்களில் 223 முறை தனித்தனியாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார். இந்த பெண் நினைத்து இருந்தால் எத்தனை முறை வேண்டுமானாலும் ஓட்டளித்து இருக்க முடியும். இதனால் வாக்குச்சாவடிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை தேர்தல் கமிஷன் வெளியிடாமல் வைத்து இருக்கிறது. ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் லட்சக்கணக்கான போலி ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது.
ஒரே நபர் 14 முறை!
சஷா கிரி என்பவர் பதாஸ் பூர் என்ற இடத்தில் 14 முறை ஓட்டளித்து இருக்கிறார். ருத்ர அபிஷேக், நமன் ஜெயின் என்ற நபர்கள் இதே இடத்தில் 18 ஓட்டுக்களை செலுத்தி இருக்கிறார்கள். பாஜவின் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள், தலைவர்கள் ஹரியானாவிலும் ஓட்டு அளித்து இருக்கின்றனர். உத்தர பிரதேசத்திலும் ஓட்டளித்து இருக்கிறார்கள்.
3.5 லட்சம் ஓட்டுக்கள்
பாஜ நிர்வாகியான உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரகலாத் என்பவர் மதுரா தொகுதியில் முதலில் ஓட்டளித்து இருக்கிறார். பிறகு ஹரியானாவின் நோத்தல் சட்டசபை தொகுதியிலும் ஓட்டளித்து இருக்கிறார். ஹரியானாவில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக 3.5 லட்சம் ஓட்டுக்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் அனைவரும் முந்தைய லோக்சபா தேர்தலில் ஓட்டளித்தவர்கள். ஆனால் பாஜ தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, இத்தனை பேரையும் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
ஒரே வீட்டில் 501 ஓட்டுக்கள்
ஹரியானாவின் ஹோடல் தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாக கூறி மாபெரும் மோசடி செய்து உள்ளனர். ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள், பாஜ நிர்வாகி வீட்டில் 66 ஓட்டுக்கள் உள்ளதாக மோசடி நடந்துள்ளது. ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைத்து ஒரு தொகுதியில் 100 ஓட்டுக்கள் திருடப்பட்டு உள்ளது. ஹரியானா தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாலேயே காங்கிரஸ் வெற்றி பெற முடியவில்லை. இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan