இலங்கையில் ஐஸ் கலந்த நீரை பருகிய நாய்கள் மரணம்

21 ஐப்பசி 2025 செவ்வாய் 10:11 | பார்வைகள் : 188
தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் 'ஐஸ்' போதைப் பொருட்கள் கலந்த நீரை பருகிய ஐந்து நாய்களில் இரு நாய்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
தெற்கு கடலில் மிதந்த நிலையில், சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட போதை பொருட்கள் அடங்கிய 51 பொதிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள நீரை பருகிய ஐந்து நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி சுற்றிச் வழமைக்கு மாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன.இந்த நாய்களை கொண்டு செல்வதற்கு அரச மிருக வைத்தியர்கள் வராததால் மிருக வைத்திய தனியார் நிறுவனம் அந்த நாய்களுக்கு மருந்து கொடுத்து பராமரித்து வந்துள்ளது.
கடந்த 14ஆம் திகதியே ஐஸ் போதை பொருட்கள் அடங்கிய பொதிகள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த நிலையில் 15 ஆம் திகதி தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் வழமையாக சுற்றித் திரியும் நாய்கள் வழமைக்கு மாறாக செயற்பட்ட நிலையில் ஐந்து நாய்கள் ஒரே இடத்தில் சுற்றி திரிந்துள்ளன. இதில் இரு நாய்கள் நேற்று முன்தினம் (19) மரணமடைந்துள்ளதாக தங்காலை மிருக வைத்தியசாலை நிறுவனத்தின் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன. அத்துடன் ஏனைய நாய்களின் இரத்தம் எடுக்கப்பட்டு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தங்காலை ருக வைத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.