Storm Shadow ஏவுகணை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்

22 ஐப்பசி 2025 புதன் 12:28 | பார்வைகள் : 363
பிரித்தானியாவின் ஸ்டோரம் ஷேடோ(Storm Shadow) ஏவுகணை பயன்படுத்தி ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் அவ்வப்போது தீவிரமடைந்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் ரஷ்யாவின் உட்புற பகுதிகளை குறிவைத்து உக்ரைன் வான்வழித் தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இந்த தாக்குதலில் உக்ரைன் பிரித்தானியாவின் ஸ்டோரம் ஷேடோ(Storm Shadow) ஏவுகணை பயன்படுத்தி இருப்பது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் வழங்கிய தகவலில், ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள ரஷ்ய வெடிபொருள் ஆலை மீது இந்த தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
உக்ரைனின் இராணுவ பொதுப் பணியாளர் குழு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன்னதாக பிரித்தானிய பாதுகாப்பு செயலர் ஜான் ஹீலி திங்கட்கிழமை வழங்கிய தகவலில், ரஷ்யா உடனான போரில் உக்ரைனுக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும், இதன் காரணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிரித்தானியாவை முதல் எதிரியாக கருதுவார் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.