ஆசிய கோப்பை இந்தியாவிற்கு வருவதில் சிக்கல் - நிபந்தனை விதித்துள்ள நக்வி

23 ஐப்பசி 2025 வியாழன் 07:53 | பார்வைகள் : 118
நக்வி விதித்துள்ள நிபந்தனையால், ஆசிய கோப்பை இந்தியாவிற்கு வருவதில் சிக்கல் நிலவுகிறது.
கடந்த மாதம் நடைபெற்ற 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
ஆனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரான மொஹ்சின் நக்வியிடமிருந்து(mohsin naqvi) கோப்பையை பெற முடியாது என இந்திய அணியின் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் உறுதியாக இருந்தார்.
பகல்ஹாம் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடவே எதிர்ப்பு இருந்த நிலையில், பிசிசிஐ மற்றும் அரசின் அறிவுறுத்தலின் படி, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான நக்வியிடமிருந்து கோப்பையை பெற மறுத்தார்.
அதேபோல், கோப்பையை என் கையால் தான் வழங்குவேன் என மொஹ்சின் நக்வியும் உறுதியாக உள்ளதால், தற்போது வரை ஆசிய கோப்பை இந்திய அணியின் கைக்கு வராமல், துபாயில் உள்ள ஆசிய கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் உள்ளது.
இது தொடர்பாக, மொஹ்சின் நக்வி மீது ஐசிசியிடம் பிசிசிஐ புகார் அளித்துள்ளது.
இந்நிலையில், ஆசிய கோப்பையை இந்திய அணிக்கு வழங்குவது தொடர்பாக பிசிசிஐக்கு நக்வி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இந்த கடிதத்தில், இந்திய அணிக்கு கோப்பை வேண்டுமென்றால் அதனை நவம்பர் 10 ஆம் திகதி துபாயில் விழா நடத்தி அதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரின் கையால் கோப்பையை பெற்றுகொள்ளலாம்.
ஆனால், அதில் இந்திய அணி வீரர்களும், இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவும் கலந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நக்வி கையால் கோப்பையை பெற முடியாத என்ற முடிவில் இந்திய அணி உறுதியாக உள்ள நிலையில், நக்வி மீண்டும் அதை நிபந்தனையாக விதித்துள்ள நிலையில் இந்திய அணியின் கைக்கு கோப்பை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.