Paristamil Navigation Paristamil advert login

கட்டுரை நோட்டைத் திருத்தியபோது..!

கட்டுரை நோட்டைத் திருத்தியபோது..!

15 பங்குனி 2022 செவ்வாய் 10:34 | பார்வைகள் : 13182


நேரம் ராத்திரி பத்து மணி இருக்கும். கமலா தன்னோட அறையிருந்து புயல் போல வெளியே வந்தா... முன்னறையில கணவன் ராகேஷ் தொலைக்காட்சியிலெ ஏதோ ஒரு தொடர் பாத்திட்டிருந்தான்.
 
வெளியே வந்த கமலாவோட கையிலெ ஒரு கத்தரிக்கோல் இருந்திச்சு. டக்குண்ணு டீவியோ வயரைப் படக்குணு இழுத்தா. கையில இருந்த கத்திரக்கோலால அந்த வயரை கசமுசாண்ணு வெட்டினா.
 
"ஏய் கமலா ஊனக்கென்ன பைத்தியம் புடிச்சிருச்சா?'' என்று கத்திக்கொண்டே கமலாவோட முகத்தைப் பார்த்தவன் ஒரு நிமிடம் கலங்கிப் போய்ட்டான். கமலாவேட மொகம் அழுது அழுது வீங்கிக் கெடக்கு. கண்கள் செவந்து கெடக்கு. இப்பவும் கண்ணீர் வழிஞ்சுகிட்டே இருக்கு.
 
"ஏய் என்னாச்சு உனக்கு? என் இப்படி அழுதிருக்கே?'' ராகேஷ் கேட்டான்.
 
கமலா அழுது கலங்குனதுக்கான காரணம் சொல்றதுக்கு முன்னாடி அவங்க யார்? எப்படி வாழறாங்க அப்படீங்கறது பாக்கலாம்.
 
கமலா ஒரு தனியார் பள்ளியிலே ஆசிரியையா வேல செய்யறாங்க ராகேஷ் ஒரு தனியார் கம்பனியில் கணினிப் பிரிவிலே வேலை செய்யறாரு. அவரு காலையில் எட்டு எட்டரைக்கு வீட்டிருந்து கிளம்பினா இரவு ஒன்பது மணியளவிலதான் வீடு திரும்புவாரு. கமலா ராகேஷ் தம்பதியருக்கு ஒரே மகள் மதுமிதா ஐந்தாம் வகுப்பில படிக்கறாங்க. அம்மா அவங்களுக்கு பாடம் நடத்தறாங்க.
 
ஐந்தாம் வகுப்பில் படிக்கிற மதுமிதாவும் பள்ளியை விட்டு வீட்டுக்கு வர்றதுக்கு எட்டு மணியாயிரும் ஏன்ணு கேட்கிறீங்களா. அவளுக்கு மூணு டுயூஷன் இருக்கு.
 
மட்டுமல்ல வீட்டுக்கு வந்தா நேரா நோட்டுப் புக்குகளை தெறந்து வச்சிட்டு வீட்டுப்பாடம் செய்யத் தொடங்கீருவா. பள்ளிக்கூடத்திலெ கொடுக்கற வீட்டுப்பாடம் அப்புறம் டூயூஷன்ல கொடுக்கற வீட்டுப்பாடம் அப்படி ரெண்டு வகையான வீட்டுப்பாடம் செய்யறதுக்குள்ளே கொழந்து தளந்து போயிரும். அம்மா கொடுக்கறத எதையாவது வாரித்தின்னிட்டு படுத்தருவா? சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகள்ல நீச்சல் நடனம்ணு அதுவேற தனியாக இருக்கும்.
 
பள்ளிக்கூடத்தில வகுப்புக்குப் பிறகு கமலாவும் கொழந்தைகளுக்கு டூயூஷன் எடுக்கறாங்க. டூயூஷனை முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து  பாத்திரங்களெல்லாம் கழுவி வச்சு ராத்திரிக்குத் தேவையான சாப்பாடு சமைச்சு துணிமணியெல்லாம் தொவைச்சு எல்லாருக்கும் சாப்பாடு குடுத்து... இப்படித்தான் நாட்கள் போயிட்டிருக்கு. இப்ப கமலா அழுததுக்கான காரணத்தைப் பாப்போம். அன்னைக்கு ராத்திரி மகள் மதுமதிக்குச் சாப்பாடு கொடுத்து, படுக்கையை சரி செய்து கொடுத்து, ராகேஷூக்கும் சாப்பாடு கொடுத்து தானும் கொஞ்சம் சாப்பிட்டு தன்னோட அறைக்குள் நுழைஞ்சா. ராகேஷ் டிவியிலே ஏதோ தொடர் பாக்கத் தொடங்கிட்டார். மதுமிதா அவளோட அறைக்குள்ளே தூக்கத்தின் மடியில் வீழ்ந்திருந்தா.
 
கமலாவோட மேசைமேலே கட்டுரை நோட்டுக அடுக்கி வச்சிருந்தது.  ஒவ்வொண்ணா எடுத்துத் திருத்தீட்டி இருந்தாங்க. கடவுள்கிட்ட கடிதம் மூலம் உங்க ஆசையைச் சொல்வதுதான் கட்டுரையோடு சுருக்கம்.
 
ஒவ்வொரு நோட்டாப் படிச்சிட்டு தவறுகளுக்கு அடிக்கோடு போட்டு, இடப்பக்கம் ஓரமாக மதிப்பெண் போட்டுட்டு இருந்தாங்க. சில நோட்டுகளைப்படிச்சு கமலா டீச்சரோட மொகத்திலே புன்சிரிப்பு மின்னி மறஞ்சுச்சு.
 
அடுத்தது மதுமிதாவோட குறிப்பேடு. பெயரைப் படிச்சதும் கமலா டீச்சர் ஒண்ணு நிமிந்து உக்காந்தாங்க. மக எப்படி எழுதியிருக்கா? எத்தனை தப்பு வந்திருக்கு?
 
அப்படீங்கறதெ நெனச்சுகிட்டே குறிப்பேட்டைத் திறந்து கட்டுரையைப் படிக்க ஆரம்பிச்சாங்க.
 
சிரிச்ச மொகத்தோட வாசிக்க ஆரம்பிச்ச டீச்சரோடு மொகம் வாசிக்க வாசிக்க அப்படியே வாடிப்போயிருச்சு, கட்டுரையிருக்கிற தவறுகளைத் திருத்தி மதிப்பெண் போட தயாரா இருந்தவங்க கண்ணிருந்து தாரை தாரையாக கண்ணீர் ஒழுகிச்சு.
 
குறிப்பேடு மேலே மொகத்தை வச்சுகிட்டு விம்மி விம்மி அழுதாங்க. நோட்டு புக்கெல்லாம் கண்ணீராலே நனைஞ்சு, அதிலுள்ள எழுத்துகளெல்லாம் அழிஞ்சு போச்சு. அப்ப ஏற்பட்ட கோபத்திலேதான் கையிலே கத்தரிக்கோலோட ஓடிவந்து டிவியோட வயரைக் கசமுசாண்ணு வெட்டக்காரணம்.
 
கோபமும் வருத்தமும் வந்தா எதுக்கு டிவியோட வயரை வெட்டணும்ணு கேட்கிறீங்களா. அதுக்கு மதுமிதாவோட கட்டுரைதான் காரணம். கடவுளுக்கு ஆவ எழுதின கடிதம்தான் காரணம்.
 
கேட்டதைத் தரும் கடவுளுக்கு
 
வணக்கம்,
 
என் பெயர் மதுமிதா.
 
நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கிறேன்.
 
எனக்கு ஒரே ஒரு வேண்டுகோள் தான் இருக்கு.
 
என்னை ஒரு தொலைக்காட்சிப்பெட்டியா மாத்திருங்க. அப்பாமும் அம்மாவும் இருக்கற கொஞ்ச நேரத்தையும் அதைத்தான் பாக்கிறாங்க.
 
அதில சானலுக்குப் பைசா தீர்ந்தா அடுத்த நிமிடமே பணத்தை அடைக்கிறாங்க.
 
டிவிக்கு எதாவது கேடு வந்த உடனை ஆளக் கூப்பிட்டு சரி செய்யறாங்க. டிவிக்கு எப்பவும் கரண்டு வர்ணம்ங்கறதுக்காக இன்வெர்டர்ணு ஒரு கருவி வாங்கி வச்சிருக்காங்க.
 
ஆனா என்ன யாருமே கண்டுக்கிறதில்லை. என் கூடச் சிரிச்சுப் பேசறதில்ல. நான் நல்லா நடனம் ஆடறேன்ணு டீச்சர் பாராட்டினாங்க அப்படீண்ணு சொன்னா ஒ அப்படியாண்ணு மட்டும் சொல்லிட்டு மறுபடியும் டிவி பாக்கத் தொடங்கிருவாங்க.
 
ஆனா எனக்கு என் அம்மாவையும் அப்பாவையும் ரொம்ப புடிக்கும். அதனாலே அவங்க இருக்கற வீட்டிலேயே என்ன ஒரு டிவிப் பெட்டியாக மாத்திருங்க.

வர்த்தக‌ விளம்பரங்கள்