Paristamil Navigation Paristamil advert login

சற்று வேறுபட்ட பிச்சைக்காரன்

சற்று வேறுபட்ட பிச்சைக்காரன்

2 பங்குனி 2022 புதன் 07:01 | பார்வைகள் : 12898


ச்சே.. ! இந்தப் பிச்சைக்காரர்களால் பெரிய தொந்தரவாப் போச்சே... இன்னைக்கு என்ன பிச்சைக்காரர்கள் தினமா? காலையிருந்து ஒவ்வொருவராக வந்துகிட்டே இருக்காங்க.... ஒரு வேலையும் செய்ய விடமாட்டாங்க போருக்கே.. எதாவது ஒரு வேலையை செய்யாலம்ணு தொடங்கும்போதுதான் அம்மா தாயேணு கத்துவாங்க. சரி அவங்க கத்தறதைக் கேட்காத மாதிரி இருந்துக்கலாம்ணு பாத்தா பக்கத்து வீட்டு பரிமளம் என்னைப் பற்றி என்ன நினைப்பா . . எச்சிக் கையால காக்காய் ஓட்டாதவண்ணு  நெனப்பாளே அப்படீங்கற நெனப்பு வந்துரும்.

 
அதனால செய்ற வேலையை அப்படியே விட்டு விட்டு பிச்சைக்காரங்களுக்கு எதாவது கொடுக்கப் போவேன். ஆனால் பலநேரத்தில பிச்சையெடுக்க வர்றவங்களப் பாத்தா சல்லிப் பைசாக் கொடுக்கக் கூடாதுணு தோணும்.. நல்ல வாட்டசாட்டமா இருக்கற தடியணுங்களெல்லாம் பிச்சையெடுக்க வர்றாங்க. . எனக்கு எரிச்சல் எரிச்சலாக வரும். இவங்களுக்கு எதாவது வேலை செஞ்சு பொழைக்கக் கூடாதா..? செய்யமாட்டடாங்க. பிச்சையெடுத்து ருசி கண்டுட்டாங்க. அதுதான்.
 
சிலநேரம் இடுப்பில பச்சைக் குழந்தையோடு சில பெண்கள் வருவாங்க. இடுப்ல மூக்கொழுகிட்டு இருக்கற அந்தக் குழந்தையைப் பார்த்தா பரிதாபமாக இருக்கும். அது நம்மை ஒரு பார்வை பார்க்கும்.... நமக்கே என்னவோ போருக்கும். ஆனால் அந்தப் பெண்ணைப் பார்த்தால் மறுபடியும் மனதுக்குள் கோபம் எரிமலையாய் வெடிக்கும். கொழந்தையை வைச்சு பொழப்பு நடத்திட்டீருக்காணும் தோணும்.
 
"போதும் போதும் பிச்சை போட்டது பக்கத்து வீட்டுப் பரிமளம் என்ன சொன்னாலும் சரி இனிமேல் அஞ்சு நயாப் பைசா பிச்சைபோடமாட்டேன். ''
புடவைத் தலைப்பை இழுத்து இடுப்பில் சொருகியபடி மனசை உறுதியாக்கிட்டு சமையக்கட்டுக்குப் போனா. பாத்திரங்களை ஒவ்வொண்ணாகத் தேய்க்கத் தொடங்கினேன். அப்போது " அம்மா.. தாயே... அம்மா... தாயே...'' என்ற சத்தம் கேட்டது.
 
"இது மட்டும் பிச்சைக்காரனாக இருந்தால் திட்டித் தீர்த்துவிட வேண்டும்' என்று மனதில் கருவிக் கொண்டு வேகமாக வாசலுக்கு வந்தேன்.
 
வாசலில் ஒரு பத்துப் பன்னிரண்டு வயதுப் பையன் நிண்ணுகிட்டிருந்தான். கிழிந்த கால்சராயைக் கையாலத் தூக்கிப் பிடிச்சிட்டு. நிண்ணுட்டிருந்தான்.
 
" ம்... உனக்கு என்ன வேணும் '' மொகத்தையும் குரலையும் கடுமையாக்கிட்டு கேட்டேன்.
 
" அம்மா... என் கால்சராய் கிழிஞ்சிருச்சு. அதைத் தைய்க்க கொஞ்ச நூலும் ஊசியும் தருவீங்களா? '' அவன் பரிதாபமாகக் கேட்டான்.
 
"ஆட... பரவாயில்லையே.. கால்சராயைத் தைய்ச்சு மீண்டும் பயன்படுத்திக்கலாம்ணு நெனக்கிறானேணு..'' மனசுக்குள்ள மகிழ்ந்தபடி ஊசியும் நூலும் கொடுத்தேன்.
 
" அதோ அந்த மரத்தோட மறைவில நிண்ணு தைச்சிட்டு ஊசியைத் தந்தர்றேன்மா'' அப்படீண்ணுட்டே மரத்ததை நோக்கி நடந்து போனான்.
 
அஞ்சே நிமிஷத்திலெ அவனோட சத்தம் மறுபடியும் கேட்டுச்சு. ஊசியைத் திருப்பித் தரத்தான் கூப்பிடறான் போலிருக்குண்ணு நெனச்சிட்டு வந்த மறுபடியும் கிழஞ்ச கால்சராயோடயே நிண்ணுகிட்டிருக்கான்.
 
" ஏன் தைக்காம வந்திருறே '' என் கொரல்ல கோபம் கலக்கறத என்னாலே தடுக்க முடியவில்லை.
 
"கால்சராயிருக்கிற கிழிசல் ரொம்ப பெரிசா இருக்குது. தைச்சா நிக்காதுண்ணு தோணுது. கொஞ்சம் துணி இருந்தா குடுங்க அதை கிழிஞ்ச எடத்தில வச்சு தச்சர்றேன்ண்ணான். .
 
நான் அவன் சால்சராயைக் கூர்ந்து பார்த்தேன். "ஆமாம் அவன் சொல்றது உண்மைதான்...'' நான் அறைக்குள் போயி கொஞ்சம் துணி எடுத்து வந்தேன்.
அவனுடைய கால்சராயின் நிறத்துக்குத் தகுந்த துணியாகத் தேர்ந்தெடுக்க நான் மறக்கல.
 
துணியை வாங்கிட்டுப் போனவன் கொஞ்ச நேரத்தில திரும்ப வந்தான்.
 
" ஊசியும் நூலும் தந்தேன். துணியும் தந்தேன். இனியும் என்னடா வேணும். நானே தைச்சு தரணுமா? '' இம்முறை சற்று உரக்கக் கேட்டேன்.
 
அவன் முகத்தில் எவ்வித உணர்ச்சி மாற்றமும் தெரியலை. ஆனால் கால்சராயின் கிழிசல் பெரிதாகி இனி தைய்க்க முடியாத நிலையில் இருந்தது.
 
"அம்மா... இந்தக் கால்சராயை இனி போடமுடியாதம்மா... உங்க மகனுடைய கால்சராய் இருந்தால் தருவீங்களா'' அவனோட குரல்ல கொஞ்சம்கூட வருத்தமோ கவலையோ இல்லாம இருந்தது. எனக்கு இச்சரியமாக இருந்திச்சு.
 
பாவம் முயற்சி செய்து தோற்றுப் போன பின்தானே ... கேட்கிறான். கொடுப்போம்.
 
ஆனால் அவனுடைய அளவுக்குச் சரியான கால்சராய் இருக்குமா என்று நினைத்தபடி உள்ளதிலேயே சிறிய கால்சராயாகப் பார்த்து அவன்கிட்டே கொடுத்தேன்.
 
கால்சராயைப் பார்த்தவனோட உள்ளத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒரு புன்சிரிப்பாக மொகத்தில வெளிப்பட்டது. நன்றி வழியும் கண்களால் என்னைப் பார்த்தவன் அதை வாங்கிட்டு நடக்கத் தொடங்கினான்.
 
" சரி, இன்னைக்குள்ள பிரச்சனை தீர்ந்திருச்சு நடக்க வேண்டிய வேலைகளைப் பார்ப்போம் '' என்று நினைத்து குழாயைத் திறந்தேன். தண்ணீர் ஒழுகத் தொடங்கியது. ஒவ்வொரு பாத்திரமாக அவசர அவசரமாகக் கழுவத் தொடங்கினேன். இரண்டு பாத்திரங்கள் கூட கழுவியிருக்கமாட்டேன். அதுக்குள்ளே மீண்டும் " அம்மா... அம்மா.. '' என்ற அழைப்பு கேட்டுது.
 
கழுவுவதற்காகக் கையிலெடுத்த பாத்திரத்தைக் கீழே வைக்காமல் அப்படியே வாசலுக்கு வந்தேன்.
 
பார்த்தால் அதே பையன்....!
 
" வேலை செய்யற நேரத்திலே ஏண்டா என்னை தொந்தரவு செய்யற? இனியும் உனக்கு என்னடா வேணும் '' என் எரிச்சலை எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவையும் காட்டிட்டே கேட்டேன்.
 
வேறு ஏந்தப் பிச்சைக்காரனாக இருந்தாலும் என் எரிச்சலைக் கண்டு ஓடிப்போயிருப்பான். ஆனால் இவன்
 
"அம்மா... நீங்கள் தந்த கால்சராய் கொஞ்சம் பெரிசாக இருக்கு. கீழே கீழே வருது. எனக்குக் கொஞ்சம் சாப்பாடு கொடுத்தீங்கண்ணா அத சாப்பிடுவேன். அப்ப வயிறு பெரிசாயிரும் அப்போது கால்சராய் கீழே விழாது'' அவன் சொன்தைக் கேட்டு என் கோபம் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து போச்சு..
 
நான் சிரித்துக்கிட்டே அவனுக்குச் சாப்பாடு போட்டேன். அவ உண்மையிலே புத்திசாலியா இல்லை இயல்பாகவே இது மாதிரி நடந்திச்சாண்ணா இப்பவும்
என்னாலே கண்டுபிடிக்க முடியல. உங்களால் முடியுதா?

வர்த்தக‌ விளம்பரங்கள்