பூமியை நோக்கி மெல்ல நகர்ந்து வரும் சிறுகோள்!

1 ஆவணி 2020 சனி 16:24 | பார்வைகள் : 11887
இந்தியாவைச் சேரந்த இரு பள்ளி மாணவிகள் சுற்றுப்பாதையை விட்டு மெதுவாக நகர்ந்து பூமியை நோக்கி வரும் Asteroid எனப்படும் சிறுகோள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.
ராதிகா லகானி, வைதேகி வெக்காரியா இருவரும் 10ஆம் வகுப்பு மாணவிகள்.
கோளுக்கு HLV2514 என்று அவர்கள் பெயரிட்டுள்ளனர்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரின் பள்ளியில் மாணவிகள் பயில்கின்றனர்.
அவர்கள் இந்திய விண்வெளி அமைப்பும், நாசாவும் இணைந்து நடத்திய திட்டப்பணியில் கலந்துகொண்டனர்.
அதில், மாணவர்கள் அமெரிக்க மாநிலமான ஹவாயின், ஹவாயி பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள தொலைநோக்கி எடுக்கும் படங்களை ஆய்வு செய்யவேண்டும்.
அதற்கென பிரத்யேகமாக மென்பொருள் ஒன்றை மாணவர்கள் பயன்படுத்துவர்.
பிள்ளைகளுக்கு அறிவியல், விண்வெளி குறித்துக் கற்பிக்கவே திட்டப்பணி தொடங்கப்பட்டதாக விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குநர் கூறினார்.
தற்போது செவ்வாய்க் கோளின் சுற்றுப்பாதைக்கு அருகில் உள்ள சிறுகோள், 1 மில்லியன் ஆண்டுகளில், சுற்றுப்பாதையை மாற்றிக்கொண்டு பூமிக்கு அருகில் வந்துவிடும் என்பதையும் மாணவிகள் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவிகளின் ஆய்வறிக்கையை ஆராய்ந்த நாசா, அதை ஏற்றுக்கொண்டுள்ளது.
எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்திருக்கும் மாணவிகள் கிருமிப்பரவல் சூழலால் கண்டுபிடிப்பைப் பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை என்று ஆதங்கப்பட்டனர்.