Paristamil Navigation Paristamil advert login

பெற்றோர் - பிள்ளைகள் இடையே பிரச்சினைகள் வரக்காரணமும்... தீர்க்கும் வழிமுறைகளும்...

 பெற்றோர் - பிள்ளைகள் இடையே பிரச்சினைகள் வரக்காரணமும்... தீர்க்கும் வழிமுறைகளும்...

3 வைகாசி 2023 புதன் 11:07 | பார்வைகள் : 10324


பிள்ளைகளின் வளர்ச்சி பெற்றோரை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. பார்த்துப் பார்த்துப் புளகாங்கிதம் அடைகிறார்கள். 
 
மகிழ்வெய்துகிறார்கள். அவர்களைப் பராமரிப்பதிலும், படிக்க வைப்பதிலும், அவர்களுக்கென்று உழைப்பதிலுமே பெற்றோர்கள் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியைக் கடந்துவிடுகின்றனர்.
 
பெற்றோரும் பிள்ளைகளும் இருவேறு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். பெற்றோர் வளர்ந்த சூழல் வேறு. பிள்ளைகள் வளர்கின்ற சூழல் வேறு. அன்றைய பொருளாதார நிலை வேறு; இன்றைய பொருளாதார நிலை வேறு. மகன் என்பவன் தன்னுடைய தொடர்ச்சி. இதுதான் ஒவ்வொரு தந்தையின் எண்ணமும். 
 
ஆனால் மகனுக்கு இதில் உடன்பாடில்லை. அவன் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க முற்படுகிறான். மாறுபட்ட ஒரு தனித்தன்மையை அவன் விரும்புகிறான். அதற்காகவே போராடுகிறான். எனவே மோதல் உருவாகிறது.
 
படிப்பு, வேலை, திருமணம் ஆகியவற்றில் பிள்ளைகளின் கருத்துகளைக் கேட்டறிவது மிக முக்கியம். அவர்களுக்குச் சுதந்திரம் அவசியம். ஆனால், அவர்களின் சிந்தனைகளும் தீர்மானங்களும் மிகச்சரியானவையாய் இருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது பெற்றோரின் பொறுப்பு.
 
அவர்கள் எடுக்கின்ற தீர்மானம் அல்லது தேர்வு தவறானதாக இருந்தால், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி, சரியான வழிக்கு அவர்களைக் கொண்டு வருவதும் பெற்றோரின் கடமைதான். பிள்ளைகளின் பேச்சை ஒருபோதும் உதாசீனப்படுத்திவிடக் கூடாது. எண்ணங்கள் மற்றும் ஆசைகளின் வெளிப்பாடுதான் வார்த்தைகள். அவற்றை அக்கறையுடன் கேட்க வேண்டும். அன்புடன் பேச வேண்டும். பேச்சுவாக்கிலேயே நல்ல விஷயங்களை அவர்கள் மனதில் விதைத்துவிட வேண்டும்.
 
கனிவான வார்த்தைகளுக்கு மட்டுமே உள்ளங்களை வசீகரிக்கின்ற ஆற்றல் உண்டு. முரட்டுத்தனமும் மூர்க்கக் குணமும் உள்ளங்களை வெல்வதே இல்லை. பெற்றோரையும் பிள்ளைகளையும் இடைவெளியின்றி இணைக்கின்ற பாலம் என்பதே புரிதலுடன்கூடிய அன்புதான்.
 
அதற்கு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். இன்றைய காலகட்டத்தில் பல குடும்பங்களில் பிள்ளைகளைப் பெரும்பிழையாய் பெற்றோரும், பெற்றோரைப் பெரும்பகையாய்ப் பிள்ளைகளும் பார்ப்பதற்கு என்ன காரணம்? சரியான புரிதல் இல்லை என்பதுதானே!
 
மகனின் போக்கு தந்தைக்குப் புரியவில்லை. தந்தையின் பேச்சு மகனுக்குப் பிடிக்கவில்லை. முரண்பாடுகளும் மோதல்களும் வலுத்துவிடுகின்றன. ஒருவருக்கொருவர் முகம் கொடுப்பதில்லை. எனவே பேசுகின்ற வாய்ப்பும் பறிபோய்விடுகின்றது. 
 
அது மிகமிக ஆபத்தான நிலை. இன்று எத்தனையோ குடும்பங்களில் பெற்றோர்கள் கண்ணீரை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை என்பதே இல்லை. ஒரே வீட்டிற்குள் வெவ்வேறு திசைகளில் போய்க்கொண்டிருக்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய கொடுமை.
 
பிள்ளைகளை ஆளாக்குவதில் பெற்றோரின் தியாகம் அளப்பரியது. தங்களை வருத்திக் கொள்கிறார்கள். வியர்வை சிந்துகிறார்கள். அந்த நீரருந்தி முளைத்தெழுந்து வளர்ந்தோங்குகின்ற தருக்கள் நல்ல கனிகளைக் கொடுத்தால், அதுதான் பெற்றோரின் வியர்வைக்குக் கிடைக்கின்ற வெகுமானம். இருந்தும் பெரும்பாலான பிள்ளைகள் ஏன் அதை உணர்வதில்லை. 
 
தாய், தந்தையின் தியாகங்களும் கண்ணீரும் அவர்களுக்குத் தெரியவில்லையா? அல்லது வாழ்க்கையின் அர்த்தமே விளங்க வில்லையா? என்னதான் கோளாறு. இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான பார்வைக் கோளாறுதான்.
 
பிள்ளைகள் மீது பெற்றோர் வைத்திருக்கும் அதீத அன்பே பாதகமாகிவிடுவதும் உண்டு. இப்போதெல்லாம் இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, அபின், ஹெராயின், பான் மசாலா போன்ற போதைப் பழக்கங்கள் அதிகளவில் பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே பெற்றோர்கள் அஞ்சுகின்றனர். 
 
தங்கள் பிள்ளைகள் கெட்டுப்போய்விடுவார்களோ என்ற கவலை அவர்களின் மனதை இறுக்கமாகப் பற்றிக் கொள்கிறது. எனவே தங்கள் பிள்ளைகளின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிக்கத் தொடங்குகிறார்கள். அது பிள்ளைகளுக்கு எரிச்சலூட்டுகிறது. தங்கள் உரிமைகளில் குறுக்கிடுவதுபோல் கருதுகிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்