Paristamil Navigation Paristamil advert login

குழந்தை வளர்ப்பு முறையில் நீங்கள் எந்த வகை?

 குழந்தை வளர்ப்பு முறையில் நீங்கள் எந்த வகை?

1 சித்திரை 2023 சனி 10:08 | பார்வைகள் : 11230


குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது.

 
குழந்தையைப் பெற்ற ஒவ்வொரு பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் அவர்களது குழந்தைகளின் மீது அதிகமாகவே உள்ளது. தான் நினைக்கும் படி தான் தன் குழந்தை நடக்க வேண்டும். 
 
தான் சொல்வதை தான் குழந்தை கேட்க வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மீது திணிப்பதை நாம் பார்த்திருப்போம். பெற்றோருக்கும், குழந்தைக்கும் இடையே உள்ள உறவு மிகவும் தனித்துவமானது என்றாலும்கூட அனைத்து குழந்தைகளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அவர்கள் வளரும் சூழல் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.
 
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகளை கொண்டிருப்பது தவறு அல்ல. குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை திருத்தி அவர்களை நல்வழிப்படுத்துவது பெற்றோர்களின் கடமை. பல நேரங்களில் குழந்தைகள் செய்யும் தவறுக்காக பெற்றோர்கள் அவர்களை கண்டிப்பார்கள். 
 
கண்டிப்பு தவறல்ல கண்டிக்கும் முறை தான் முக்கியம். உங்களின் கண்டிப்பு வரும் காலங்களில் உங்கள் குழந்தைக்கு மோசமான சிக்கல்களை ஏற்படுத்தவும் வாய்ப்புண்டு. பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு பற்றி நிபுணர்கள் சில சாதக பாதக அம்சங்களை விளக்கியுள்ளனர். அதில் குழந்தையின் வருங்காலத்தை பாதிக்கும் சிலவற்றையும் பகிர்ந்துள்ளனர். அவற்றைபற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்
 
சர்வாதிகார பெற்றோர்: மிகவும் கண்டிப்பான பெற்றோர் அல்லது சர்வாதிகார பெற்றோர் அதிக எதிர்பார்ப்புகளை குழந்தைகள் மீது திணிப்பார்கள். பெற்றோரின் கண்டிப்பு காரணமாக குழந்தைகள் தண்டனையிலிருந்து தப்பிக்க பொய்யர்களாக மாற வாய்ப்புள்ளது சில குழந்தைகள் ஆக்ரோஷமாக கூட மாறுவதுண்டு. 
 
இந்த பழக்கவழக்கங்களால் நாளடைவில் குழந்தைகள் பெரியவர்களை மதிக்காமல் நடப்பதற்கும் அதிகமான வாய்ப்புகள் உண்டு. மேலும் பல நேரங்களில் உங்கள் குழந்தை பெற்றோரை போலவே தன்னுடன் பயிலும் சக மாணவனிடமும் சர்வாதிகார தனத்துடன் நடந்து கொள்வதற்கும் வாய்ப்பு உண்டு.
 
அதிகார பெற்றோர்: நாம் முன்னர் கண்ட சர்வாதிகார பெற்றோருக்கும் இந்த வகை பெற்றோருக்கும் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த வகையில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சில கோல்களை அமைப்பார்கள். நீ இதை செய்தால் உனக்கு இது கிடைக்கும், நீ அதை செய்தால் உனக்கு அது கிடைக்கும் என்று குழந்தைகளுக்கான கோல்களை செட் செய்து அவர்களை முன்னேற்ற பாதையில் இட்டுச் செல்ல தூண்டுவார்கள். 
 
சில நேரம் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட டாஸ்க்குகளை அவர்கள் முடிக்கவில்லை என்றால் அவர்களை தண்டிக்காமல் அதற்கான மாற்று வழியை சிந்திப்பார்கள். எப்போதும் குழந்தைகளின் மதிப்புகளையும் உணர்வுகளையும் இவர்கள் மதிப்பார்கள். இதனால் இந்த வகையில் உள்ள பெற்றோர் குழந்தைகள் உறவில் நல்ல உறவு ஏற்படும் அதுமட்டுமல்லாது குழந்தைகளின் கல்வி மற்றும் இதர விஷயங்களிலும் குழந்தைகளுக்கு சப்போர்ட்டாக இவர்கள் இருப்பதுண்டு.
 
குழந்தைகளுக்கு சுதந்திரத்தை அளிக்கும் பெற்றோர் : இந்த வகையான பெற்றோர்கள் குழந்தையிடம் திறந்த மனதுடன் இருப்பார்கள். ஒரு நண்பனைப் போல பழகுவார்கள் குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பது மட்டுமல்லாமல் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை சுமுகமாக தீர்ப்பதற்கான வழிகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பார்கள்.
 
 அது மட்டுமல்லாது இந்த வகையை சார்ந்த பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கடுமைகளை காட்ட விரும்பமாட்டார்கள். பெரும்பாலும் இந்த வகை பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு சட்டதிட்டங்களில் நம்பிக்கையில்லை. குழந்தைகளுக்கு அதிக சுதந்திரத்தையும் கொடுப்பார்கள். அவர்களை நன்றாக கவனித்தும் கொள்வார்கள்.
 
கவனக்குறைவான பெற்றவர்கள் : இந்த வகையைச் சார்ந்த பெற்றோர்கள் குழந்தைக்கு அதிகமான சுதந்திரத்தை அளிக்கின்றனர், அதுமட்டுமல்லாது அவர்களை கண்டு கொள்வதும் இல்லை. இதுபோன்ற நிலையில் குழந்தைகள் தவறான வழியில் செல்வதற்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. 
 
குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள், என்ன படிக்கிறார்கள் என்பன போன்ற அடிப்படை விஷயங்களையும் இந்த வகை பெற்றோர்கள் கண்டுகொள்வதில்லை. இதனால் குழந்தைகள் வளர்ந்து போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை சின்னாபின்னமாக மாற்றிக் கொள்வதற்கு இந்த வகை பெற்றோர்களே முக்கிய காரணமாக அமைகின்றனர்.
 
மேற்சொன்னத்தை தவிர சில மோசமான பெற்றோர் குணங்களும் உண்டு. தொடர்ந்து குழந்தைகளை திட்டி கொண்டே இருப்பது, அறிவுரை கூறிக் கொண்டிருப்பது, குழந்தைகளை தண்டிப்பது, குழந்தைகளிடம் அன்பான முகத்தை காட்டாமல் எப்பொழுதும் கோபத்துடனும் எரிச்சலுடன் நடந்துகொள்வது, குழந்தை கேட்கும் கேள்விகளை மதிக்காமல் இருப்பது, தன் குழந்தையை மற்ற குழந்தையுடன் கம்பேர் செய்வார்கள்.
 
இதனால் குழந்தைகள் வருங்காலத்தில் ஆளுமை இல்லாத நபர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. மேலே கண்ட முறையில் நீங்கள் எந்த வகை பெற்றோர் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். 
 
'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று' என்ற பாடல் வரிகளை நாம் கேட்டிருப்போம் அதற்கேற்ப குழந்தைகளை நாம் வளர்க்க வேண்டும். முடிந்த அளவு உங்கள் குழந்தையை சரியான வழியில் வருங்காலத்தில் ஆளுமை மிக்க நபர்களாக மாற்ற இப்போதே செயல்படுங்கள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்