Paristamil Navigation Paristamil advert login

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்

ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்

28 தை 2015 புதன் 10:49 | பார்வைகள் : 8724


 அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். 

 
இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம். உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும் பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது. 
 
திருமணத்துக்கு முன்பு வரை யாரென்றே தெரியாத ஒருவனுடன் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதே, புதிய சூழ்நிலையில், புதிய மனிதர்களோடு தான் இணைந்து போக வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டுதான் தற்காலத்துப் பெண்ணும் செல்கிறாள். புதிய கணவனுக்காக எதையும் விட்டுக் கொடுக்கும் நிலையையும், கணவனின் கருத்துகளோடு ஒத்துப்போகும் பண்பையும் வளர்த்துக் கொள்கிறாள். 
 
தான் வேறு, தனது கணவன் வேறு என்ற எண்ணம் அகன்று, தன் கணவனின் விருப்பமே தன் விருப்பம், அவன் நோக்கமே தனது நோக்கம், அவனது லட்சியமே தனது லட்சியம் எனக் கருதி, அவனோடு தன்னை இரண்டற இணைத்துக் கொள்கிறாள். தனது கணவன் ஆறுதலாக, சுகமாக, மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரு சூழலை பெண் உருவாக்கி தனது நிலைப்பாட்டை உறுதிசெய்து கொள்கிறாள். 
 
இதன்மூலம் கணவன் தன்னை மீண்டும் மீண்டும் நாடி வரும் நிலையை உண்டாக்குகிறாள். தனது மென்மையான எண்ணங்களை வெளிப்படுத்த இயலாதவனாக ஆண் இருந்த போதிலும், குறிப்பால் அவனது எண்ணங்களை அறிந்து கொள்கிறாள். தன்னோடு இருப்பவர்களின் எண்ணங்களையும் குறிப்பால் அறிய கற்றுக் கொள்கிறாள்.  
 
ஆண் எதைச் செய்தாலும் அதை அன்புடன், காதலுடன் செய்ய வேண்டும் என்று பெண் எதிர்பார்ப்பாள். வாழ்க்கையில் அரவணைப்புக்கு அடுத்து அவள் விரும்புவது காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் தான். உடல் ரீதியாகத் தொடுவது, பற்றுவது, தழுவுவது, மன ரீதியாக உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வது, செயல்படுவது ஆகிய ஒவ்வொன்றையும் தனது தாயின் உணர்வின்மூலம் ஒவ்வொரு பெண்ணும் இயல்பாகப் பெறுகிறாள். 
 
ஆண் குழந்தை தனது தாயிடம் இருந்து விலகிச் செல்வதைப் போல், பெண் குழந்தை செல்வதில்லை. ஒவ்வொரு செயலையும் தாயிடம் இருந்து கற்றுக் கொள்கிறது. வாழ்நாள் முழுவதும் அவளது இந்த இயல்பு ஆணைக் காட்டிலும் பெண்ணுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கிறது. 
 
ஆணின் இதயத்தில் மூடப்பட்ட மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்தி காதலுக்கும் நெருக்கத்துக்கும் அவள் காலங்காலமாக ஓர் இணைப்பு பாலமாக இருந்து வருகிறாள். இதனால் உணர்வு ரீதியாக அனைவரையும் கவரும் வகையில், ஆணை விட பெண் ஒரு படி மேலே போய்விடுகிறாள். ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் இது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்