Paristamil Navigation Paristamil advert login

உடைந்து போன இதயத்திற்கு நினைவுகளால் மருந்து போடலாமே

உடைந்து  போன இதயத்திற்கு நினைவுகளால் மருந்து போடலாமே

13 ஐப்பசி 2014 திங்கள் 05:05 | பார்வைகள் : 9173


 காதல் தோல்வி அடைந்த பின்னர், அனைவரும் மனம் உடைந்து சோகத்தில் மூழ்கி இருப்பார்கள். அப்போது மனதில் பல்வேறு கேள்விகளும், குழப்பங்களும் எழுவதோடு, காதலன்/காதலியை மறக்க முடியாமல் தவிர்ததுக் கொண்டிருப்பார்கள். அந்த நேரத்தில் மனதை தேற்றும் வகையிலான மிகவும் பிரபலமான ஒரு பழைய பாடல் தான் "நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா..." இது சினிமாப் பாட்டு மட்டுமல்ல, தத்துவார்த்தமான வார்த்தைகளும் கூட. மனதுக்கு நினைக்கு மட்டும் தான் தெரியுமா.. மறக்கத் தெரியாதா என்ற வாதம் எழலாம். மறக்க முடியும் தான், ஆனாலும் பலரும் மறக்க முடியாமல் தவிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கான டிப்ஸ் தான் இது...

 
உறவுகள் எப்போதுமே பாசத்தால் கட்டுண்டவை. பலருக்கு இது உணர்வு ரீதியாக வரும், பலருக்கு இது பாச ரீதியாக வரும். அன்பினால் விளைந்த உறவுகளும் எக்கச்சக்கம். இதுப்போன்ற உறவுகளில் திடீரென ஏதோ ஒரு காரணத்தால் பிரிவுகள் வருவதுண்டு. அதுப்போன்ற சமயங்களில் இதயங்கள் எப்படி உடைந்து சிதைந்து போகும் என்பது அனுபவித்தோருக்குத்தான் தெரியும்.
 
ஆனால் இப்படி உடைந்து சிதறிப் போன இதயத்தை கட்டிக்காத்தே ஆக வேண்டும். ஏனெனில் தொடர்ந்து இவ்வுலகில் வாழ வேண்டுமல்லவா!.. அதற்கு என்ன செய்யலாம்...?
 
பேச்சிலும், மூச்சிலும் உங்களுடைய காதலி அல்லது காதலர் உங்களோடு இருக்கும் வரை நிச்சயம் உங்களது உறவுக்கும், நட்புக்கும் நிச்சயம் பிரிவு கிடையாது. அதை முதலில் மனதில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கிடையிலான பேச்சுக்களில் ஒரு கட்டுப்பாடு வரலாம், எல்லைக்கோடு போடப்படலாம். ஆனால் உங்கள் மனதிலிருந்து யாரையும் நீங்கள் விலக்கி விடத் தேவையில்லையே.. நினைவுகளோடு நீங்கள் வாழப் பழகிக் கொண்டாலே போதுமானது...!
 
காதலி அல்லது காதலரின் நினைவுகளோடு நீங்கள் வாழப் பழகிக் கொள்ளும்போது நிச்சயம் உங்களுக்கு புதுத் தெம்பு கிடைக்கவே செய்யும். மனம் உடைந்து போக வாய்ப்பில்லை. முன்பை விட புத்துணர்ச்சியோடு நீங்கள் செயல்படவும் முடியும். அதுவரை இருந்து வந்த ஒருவிதமான இறுக்கம் சற்றே தளர்ந்து உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்ளவும் முடியும்.
 
ஒரு ரோஜா பூ பூக்கிறது. அது உங்களது காதலி நட்டுச் சென்ற செடியாக இருக்கலாம். உங்களை விட்டு காதலி போயிருக்கலாம். ஆனால் அந்த ரோஜாச் செடியில் பூ பூக்கும்போது உங்களுக்கு எப்படிப்பட்ட மகிழ்ச்சி கிடைக்கும்... அந்த பூவைப் பார்க்கும்போதெல்லாம், அந்த செடியைப் பார்க்கும்போதெல்லாம் உங்களது காதலியின் நினைவுதானே வரும். அந்த நினைவை நிச்சயம் யாரும் தடை செய்ய முடியாது, தப்பு என்றும் கூற முடியாது அல்லவா.. அப்படித்தான் உங்களது நினைவுகளும். அதையும் யாரும் குறை சொல்ல முடியாது... அந்த நினைவு உங்களைத் தாண்டி வெளியே போகாத வரை.
 
இன்னொரு வழியும் இருக்கிறது. உங்களது காதலியை நேரில் போய்ப் பார்த்துத்தான் பேச வேண்டும் என்று இல்லை. மனதுக்குள் நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் பேச முடியும். அதற்கென்று எல்லையும் இல்லை. கட்டுப்பாடும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், மனதோடு பேசும் காதலுக்குத்தான் சக்தி அதிகமாம். மேலும் மனதிலிருந்து வரும் உணர்வுகளும், வார்த்தைகளும் அவ்வளவு சக்தி வாய்ந்தவை...அதை அனுபவித்தோருக்குத்தான் அதன் அருமை புரியும்.
 
உங்களை வேண்டாம் என்று காதலி சொன்னால் சற்றும் கவலையே படாதீர்கள். வெறும் வார்த்தைக்கு வேண்டுமானால் அப்படிச் சொல்லியிருக்கலாம். உண்மையில் அவரது மனதும், நினைவுகளும், உணர்வுகளும், எண்ணங்களும் உங்களைத் தான் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கும். அதை நீங்கள் உங்கள் உணர்வுப்பூர்வமாக உட்கார்ந்த இடத்திலேயே அறிய முடியும், புரிய முடியும். உங்களது உணர்வுகளுக்கு சக்தி இருந்தால், அவர் பேசுவதை வைத்தே நீங்கள் மோப்பம் பிடித்து விடலாம், அவர் மனதில் என்ன ஓடுகிறது என்று... எல்லாவற்றையும் விடுங்கள்... உங்கள் காதலியின் பார்வை ஒன்று போதாதா உங்களுக்கு, வாழ்நாளின் மிச்சத்தையும் ஓட்டி விடுவதற்கு...!
 
எனவே, கவலையை விடுங்கள், மனதை லேசாக்குங்கள், வேலைகளில் கவனத்தை பாய்ச்சுங்கள்.. உங்களை விட்டு உங்கள் காதல் எங்கும் போய் விடாது.. தானாகவே மீண்டும் உங்களிடம் வந்து சேரும்... அதற்கு சக்தி இருந்தால்!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்