கவிஞனின் கவிதையில் குழந்தை
27 ஆனி 2021 ஞாயிறு 05:33 | பார்வைகள் : 10240
மயக்கும் கண்களிலே மை எழுது
இனிக்கும் இதழில் மழலைமொழி பேசு
பிஞ்சு கரங்களால் கவிதை எழுது
கொஞ்சும் உணர்வில் இனிமை பாடு!
தாமரை மலரொன்று தூளியில் தூங்குது
தவழும் கால்கள் மென்மை காட்டுது
இதழ் பிரியும் புன்னகை இதயம் நிறைகிறது
இமைகள் இரண்டும் மென்திரையாகிறது!
சிந்தையைத் தூண்டும் சிரிக்கும் கண்கள்
அகந்தையை அகற்றும் அன்பு ஒளிக்கதிர்கள்
புன்னகை காட்டும் பூவிதழ்கள்
தாய் மடியில் தவழும் மணக்கும் மழலை
சத்தமில்லா முத்தம் கேட்கிறது!
நீ சிரித்தால் இனிமையும் தலைகுனியும்
நீ அழுதால் தெய்வமே ஓடி வரும்
நீ பாடினால் சங்கீதம் கை தட்டும்
நீ பேசினால் காற்றும் இசை பாடும் !