Paristamil Navigation Paristamil advert login

காகிதம்...!

காகிதம்...!

19 வைகாசி 2019 ஞாயிறு 16:10 | பார்வைகள் : 9425


உலர்ந்தே கிடக்கிறது
அந்த காகிதத்துண்டு...!
 
எடுத்து எழுதுவதற்கு
எத்தனை முறை எத்தனித்தாலும்
ஏதோ ஒன்று தடுக்கிறது...!
 
இதயமும்,
இந்த பேனாவும்
இன்னமும் மூடியே கிடக்கிறது...!
 
என் மனம் பிரசவிக்கும்
எண்ணங்களுக்கும் எழுத்துகளுக்கும்
பேனா நுனியை அடைவதற்குள்ளேயே
ஆயுள் முடிகிறது...!
 
எழுதியாகவேண்டுமென்ற
எண்ணத்துடன்
புழுதி படிந்து கிடந்த - அந்த
வெற்றுக் காகிதத்தை - இன்று
கையிலெடுத்தேன்...!
 
மனதையும் பேனாவையும்
ஒருசேர திறந்தேன்...!
 
எதையெதையோ நினைத்து
எதையெதையோ கிறுக்க நினைத்தேன்...!
 
காகிதத்தை கண்களும் - என்
கண்களை காகிதமும்
முறைந்துப்பார்த்து கொண்டிருந்தன...!
 
ஒரே அமைதி...!
 
நீண்ட நேர நிசப்தத்திற்குபின்
காகித்தத்தின்மேல்
கொட்டித்தீர்த்துவிட்டன என் கண்கள்...!
கண்ணீர்துளிகளை...
 
இன்றும் என் கவிதைகள்
கருவறையிலே கல்லறையாகிவிட்டன...!
 
இன்றும் இங்கு
மாற்றமேதுமில்லை...!
ஈரமாய் போன
அந்த காகிதத்துண்டை தவிர...
 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்