Paristamil Navigation Paristamil advert login

நான் என்பவன் அவள் அல்ல...!!

நான் என்பவன் அவள் அல்ல...!!

12 தை 2020 ஞாயிறு 12:21 | பார்வைகள் : 9330


நீண்டவொரு இடவெளிக்குபின்
நீண்டகால நண்பனொருவனை
மீண்டும் சந்தித்தேன் நான்...!
 
அரைகோப்பை தேநீருடன்
உரையாடல்கள் ஆரம்பித்தது...!
 
அலுவலக நேரம்...!
ஆண்டு வருமானம்...!!
அன்பான மனைவி...!
ஆண் குழந்தையொன்று....!!
அவனின் அனைத்தை பற்றியும்
அவன் பேசிக்கொண்டிருந்தான்...!
 
”சரிடா நீ சொல்லு” என்றவனிடம்,
”அப்படியேதான் இருக்கிறேன்” என்று
அங்கயே முற்றுப்புள்ளி வைத்தேன் நான்...!
 
விடவில்லை அவன்...!
 
மனம் எழுதிவைத்திருந்த
மர்மக்கதைகளை - என்
முகம்வழியே வாசித்திருக்கலாம் அவன்...!
 
இயல்பாய் இருப்பதாய் காட்ட
இதழ் சிரித்தேன் நான்....!
 
ஒரு நொடி எதையோ
யோசித்தான் அவன்...!
 
“சென்ற வாரம் அவளை
சென்னையில் பார்த்தேன் நான்”
என்றான் என்னிடம்...!
 
கண்கள் இறுகிய என்னை
கண்டுகொள்ளாமலே தொடர்ந்தான்...!
 
“அவளே புருசன் குழந்தைனு
அமர்களமா வாழ்றா,
நீ ஏன் இப்படி இருக்க?” என்றவனிடம்
புன்னகைத்தே முகம் கவிழ்த்தேன்...!
 
காலியான தேநீர் கோப்பையை
கீழே வைத்துவிட்டு
புறப்படத் தயாரானான்...!
 
வாசல்வரை வழியனுப்பவந்த என்னிடம்
“அவளை மறந்திட்டு சீக்கிரம்
கல்யாணம் பண்ணிக்கோ” என
அழுத்தமாகவே சொன்னான்.
 
நான் சொன்னேன்...!
 
“சீக்கிரம் காதலை மறந்து
சீக்கிரம் மற்றொருவரோடு வாழ
என் காதல் அவள் காதலில்லை...!”
 
”அவளே மறந்திட்டா” என ஆரம்பித்தவனிடம்
நான் மீண்டும் ஒருமுறை சொன்னேன்...!
 
“நான் என்பவன் அவள் அல்ல...”
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்