Paristamil Navigation Paristamil advert login

அலைகள் தேடும் அவனின் உயிர்...!!

அலைகள் தேடும் அவனின் உயிர்...!!

14 புரட்டாசி 2017 வியாழன் 13:39 | பார்வைகள் : 12985


ஆழக்கடலின் கரையில் 
மணல் மடி தன்
சேற்றுப் படுக்கையில்
அவனை தன்னோடு இறுக்கி
அணைத்து கொண்டது
அவன் இறந்தானா இருப்பானா
நீல கடல் அலைகள் அறியவில்லை
 
அவன் பஞ்சணையில் 
மஞ்சம் கொண்டானா
மண்ணணைக்குள் தன்னை
தொலைத்தானா
ஆர்ப்பரிக்கும் அந்த
நெடிய அலைகளுக்கு
தெரிந்திருக்கவில்லை
 
அவை தாங்கள் ஓயாது தவழும்
நீல கடல் தாயை வேண்டி
கண்களில் கறுப்பு போர்க்க
தொடங்கி இருந்தன
அவனின் காதலுக்காக
ஓயாத தங்கள் வீச்சை கூட
ஓய வைக்க துணிந்தன
 
கரை முழுக்க ஓடி ஓடி தேடி
களைத்து போய் கிடந்தன
தங்கள் மடி தவழ்ந்தவனின்
பாதத் தொடுகைக்காய் அவை
கரையை முத்தமிட்டுக் கொண்டே இருந்தன
 
அங்கே ஏராளம் சிப்பிகளும்
செத்துப்போன நண்டு கோதுகளும்
துயிலுரியப்பட்ட மீன்களின்
வெற்று முட்களும் மிஞ்சி கிடந்தன
அவற்றுக்கு களைப்பு இல்லை
காதலில் கட்டுண்டல்
ஓய்வை கொடுக்கவில்லை
 
ஒவ்வொரு முட்களுக்குள்ளும் 
நண்டு கோதுகளுக்குள்ளும்
சிப்பிகளுக்குள்ளும் தம்மவனை 
அவை காண வந்திடுமோ
என்று அச்சம் எழுந்தாட
எதையும் ஏற்றிட நிலை பெற்று
அலைகள் கரை முழுக்க 
மூசிக் கொண்டிருந்தன
அவற்றை கடல் அடக்க பார்க்கிறது
 
ஆர்ப்பரிக்கும் அலைகளின் கண்ணீர்
உப்பு நீரோடு சங்கமித்து
நீலக்கடல் சிவப்பாகி கொண்டிருக்கிறது
அலைகளின் மடி தடவி வாழும்
மீன்கள் கூட இவற்றின் விழிநீர்
சூட்டில் கரைந்து போகின்றன
 
அலைகளோடு தாமும் அழுதழுது
விழி மூடி கிடக்கிறது
நாட்கள் கடந்து கொண்டிருக்கின்றன
மாதங்கள் வருடங்களாகி
வருடமும் பல கடந்து அலைகளின்
தேடலில் மூர்ச்சையாகி போகாது
கிடக்கிறது நீலக்கடல்
 
நாங்கள் கடலை ரசிக்கிறோம்
புகழ்கிறோம் அவற்றின் வலிகளை
எழுத்தாக முனைகிறோம்
அலைகளோடு அலையாகி
விடியலுக்காய் சாய்ந்து போன
அவனின் இருப்பை மட்டும்
கண்டறிய எம்மால் முடியவில்லை
 
நாம் மீண்டும் அந்த அலைகளில்
கால் நனைத்து எங்கள் எச்சங்களை
கழுவி விட துடிக்கிறோம்
அவையோ எங்களால் தீண்டப்படும்
அசிங்கங்களை தாங்காது மரணித்து
ஓய்ந்து போக துணிகின்றன
 
கடல் என்ன செய்யும்?
தனது செல்வங்களை இழந்து
தனிமையில் நொந்து எங்கள்
அசிங்கங்களின் எச்சங்களை அங்கங்கே
தன் உடலில் சுமந்து கொண்டு காத்திருக்கும்
அவனின் வருகைக்காக....
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்