Paristamil Navigation Paristamil advert login

அவள் ஒரு புரியாத புதிர்

அவள் ஒரு புரியாத புதிர்

26 பங்குனி 2018 திங்கள் 12:06 | பார்வைகள் : 9939


யாரோ எழுதிய 
ஒருவரிக் கவிதை ! 
'காதல் ஒரு தேன் கூடு ' ! 
 
ஆம் ! அடுத்த வரி 
எழுத ஏனோ 
மறந்துவிட்டார் ! 
 
காதல் என்பது 
தேன் கூடு ! 
அதை தீண்டினால் 
காயங்கள் இலவசம் 
கண்கூடு ! 
 
காதல் தேன் ! 
காதலி கொட்டும் ஈ ! 
 
நித்தம் அவள் 
நினைவுகளுடன் போராடி 
அவள் விழிகளிடம் 
தோற்றுப் போகிறேன் ! 
 
ஒருபோதும் 
அவள் என் வினாக்களுக்கு 
விடையாய் இருந்ததில்லை ! 
 
நான் 'காதல் 
தேடலின் தொடக்கம் ' 
என்பேன் ; அவள் 
'என் தேவையின் 
தேடல்' என்பாள் ! 
 
என் இரவுகளை மொத்தமாய் 
இரவல் கொடுத்துவிட்டேன் ! 
 
என் விழிகள் 
தூக்கத்திற்கு 
நிரந்தர விடை கொடுத்து 
வெகு நாட்களாயிற்று ! 
 
இன்னும் ஏனோ 
அவளுக்கு இரக்கமில்லை ! 
 
சரணடைந்த பின்னும் 
சாட்டை சுழற்றுகிறாள் ! 
 
தோல்வியை ஒப்புக்கொண்ட 
பின்னும் நினைவுகளால் 
நித்திரை சிதைக்கிறாள் ! 
 
உண்மைக்காதல் 
வென்றதாக ஒரு 
காவியமும் சொல்லவில்லை ! 
 
சரித்திரமும் 
சான்றளிக்கவில்லை ! 
 
நானும் அவ்வழியே 
காதலோடு அவள் 
அடி தொடர்கிறேன் ! 
 
அவளோ கானலாய் 
கண்ணாமூச்சி ஆடுகிறாள் ! 
 
காதல் இசையில் 
ஒளிந்திருக்கும் சுகம் 
சிலருக்கு ! 
 
பஞ்சில் ஊறிய 
நீர் போல நெஞ்சில் 
நிறை(லை)த்துவிட்ட 
கனம் பலருக்கு ! 
 
காதல் இன்பம் 
சுரக்கும் சுனை சிலருக்கு ! 
 
தொண்டயில் சிக்கிய முள் 
பலருக்கு ! விழுங்கவும் 
முடிவதில்லை ! 
துப்பவும் துணிச்சலில்லை ! 
 
காதல் வெல்லுமா ? 
காலம் பதில் 
சொல்லட்டும் 
காத்திருக்கிறேன் .....!
 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்