Paristamil Navigation Paristamil advert login

ஏனெனில் இங்கு அன்பில்லை..

ஏனெனில் இங்கு அன்பில்லை..

27 ஆவணி 2013 செவ்வாய் 12:41 | பார்வைகள் : 9639


முடிந்து போன இந்த நாள்
எவ்வளவு அன்பானது
சனத்தடிமிக்க ஒரு சாலையைக் கடந்திட
என்னை பற்றிக் கொண்ட
உனது கரங்கள்
யுகங்களைக் கடந்து பூமிக்கு வந்த
தேவதையொருத்தியின்
வருடலென . . .

உன் கண்களையும்
இதழ்களையும்
கம்மலையும்
உன்னருகில் இருந்து பார்த்த
போதெல்லாம்
சரணடைவது பற்றி எனக்கு தவறாக
தெரியவில்லை

சரணடைவது என்பது காதலால் அன்றி
வேறொன்றும் அல்ல
வெள்ளைக்கொடிகளோடு நான் இருப்பதாக
எண்ணியிருந்திருக்கலாம் நீ
ஏனெனில்
நீ என்னை கொன்றுபோட்டுப் போன
மதிய நேரம் என்பது துயரம் மிகுந்தது
எங்கு பார்த்தாலும் கானல் நீரில் நீந்தியிருந்தேன்
ஜோடி பிரிந்த மீனினைப் போல

உனக்கு நினைவு இருக்கிறதோ தெரியவில்லை
நீ விட்டுச் சென்ற வாசலிலோ
அல்லது ஏறிச்சென்ற வாகனத்திலோ
துடித்தபடி சாக முனையும்
என் எதிர்பார்ப்புக்களும் காதலும்
முடிந்து போன இந்த நாள்
எவ்வளவு வன்முறையானது

- கவிஞர் அகரமுதல்வன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்