Paristamil Navigation Paristamil advert login

ரத்த அருவியின் 100 ஆண்டு ரகசியம் வெளியானது!

ரத்த அருவியின் 100 ஆண்டு ரகசியம் வெளியானது!

4 வைகாசி 2017 வியாழன் 09:44 | பார்வைகள் : 9702


 இந்தப் பூமியைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நாம் வாழ்ந்துவரும் அல்லது தினமும் பார்த்துவரும் நிகழ்வுகளைப் பட்டியிலிடுவது மட்டும் இந்தப் பூமியல்ல. 'அரோரா' வெளிச்சமாகட்டும் அல்லது பாறைகளை நகர்த்தும் பாலைவனமாகட்டும்... நம் கற்பனைக்கும் எட்டாத பல வினோத சக்திகள், மர்மமான மற்றும் உயிருக்கு ஆபத்தான இடங்களால் நிறைந்திருப்பதே இந்தப் பூமி. அவ்வளவு ஏன் 'புவி ஈர்ப்பு சக்தியே' இல்லாத இடமும் இப்பூமியில் உண்டு. இதில், சில மர்மங்களுக்கு மட்டுமே காரணம் கண்டிபிடித்திருக்கிறோம். ஆனால், பல மர்மங்களுக்குக் காரணமே கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படி ஒரு விசித்திர இடம்தான் 'ரத்த அருவி'. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ரத்த அருவி உருவாவதற்கான காரணம் என்னவென்று ஆராய்ச்சியாளர்கள் தலையைப் பிய்த்துக்கொண்டு ஆராய்ச்சி செய்துவந்ததன் பலனாகத் தற்போது ரத்த அருவி எப்படி உருவாகியுள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.

 
அண்டார்டிகாவில் 'மெக் மெர்டோ' என்ற பள்ளத்தாக்கில் 'டாய்லர் ஃகிளாஸியோ' என்னும் அருவி உள்ளது. 1911-ம் ஆண்டு ஹிரிஃபித் டாய்லர் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புவியியல் ஆராய்ச்சியாளர் இந்த அருவியைக் கண்டறிந்ததால் இதற்கு அந்தப் பெயர் வந்தது. இந்த டாய்லர் ஃகிளாஸியோ அருவியில் இருந்து பாய்ந்துவரும் தண்ணீரானது, அடர் சிவப்பு நிறத்தில் பார்ப்பதற்கு ரத்தம் பீறிட்டு வருவதுபோல இருக்கும். அதனால் இந்த அருவியை ஆராய்ச்சியாளர்கள் 'ரத்த அருவி' என்று அழைத்துவருகின்றனர். அண்டார்டிகா பகுதிகளில் வேறு எங்கும் இதுபோல இல்லை. அப்படி இருக்க, இந்த அருவியில் மட்டும் ஏன் தண்ணீர் ரத்தம்போல வருகிறது என்று கண்டறிய ஆராய்ச்சியாளார்கள் படையே அங்கு முகாமிடத் தொடங்கியது. இந்த ஆராய்ச்சிப் பயணம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அதற்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
 
 
ஆரம்பத்தில்... ''அதிக அளவு பாசிகள் இருப்பதால்தான் இப்படி அடர் சிவப்பு வண்ணத்தில் தண்ணீர் வருகிறது'' என்று காரணம் கூறினார்கள். ஆனால், அது உணமையான காரணமல்ல என்று வேறு சில ஆராய்ச்சியாளர்கள் மறுத்துவந்தனர். இந்த நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு ஜில் மிக்கூக்கி என்ற ஆராய்ச்சியாளர், அப்பகுதியை ஆராய்ச்சி செய்து ஒரு கட்டுரையை வெளியிட்டார். அதில், ''இந்த நீரில் ஆக்சிஜன் மூலக்கூறு மிகமிகக் குறைவு. இதில் உயிரிகள் வாழ்வதற்கான மூலக்கூறுகள் கிடையாது. அப்படி இருந்தும் இந்த நீரில் 17 வகையான நுண்ணுயிரிகள் வாழ்ந்துவருகின்றன. இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வாகும். அதோடு மட்டுமில்லாமல் இப்பகுதி முழுவதும் இரும்புத்தாதுக்கள் அதிக அளவில் இருக்கின்றன. நுண்ணுயிரிகளிலிருந்து வெளிவரும் சல்ஃபர் இரும்புத்தாதுவுடன் வினைபுரிந்து சிவப்பு நிற நீரை உண்டாக்குகிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார். இது ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருவித தன்னம்பிக்கையைத் தர, மேலும் அப்பகுதியைப் படையெடுக்க ஆரம்பித்தனர்.
 
அதன் பின்னர் ஆராய்ச்சி மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் 'லைஃப் ஆன் மார்ஸ்' என்று இப்பகுதியை வரையறை செய்தனர். அதாவது, ''ஆக்சிஜன் இல்லாத நிலையில் நுண்ணுயிரிகள் வாழ்வது சாதாரண விஷயம் அல்ல... ரத்த அருவியின் தன்மையை ஆராய்ச்சி செய்கையில் இப்பகுதி முழுவதும் செவ்வாய்க்கிரகத்தில் இருக்கும் சூழ்நிலையைக் கொண்டிருக்கிறது. இப்பகுதியை நன்கு ஆராய்ச்சி செய்தால், செவ்வாய்க்கிரகத்தின் தன்மையைத் துல்லியமாகக் கண்டறியலாம். மேலும், இந்த அருவி சுமார் இரண்டு மில்லியன் வருடத்துக்குமுன் தோன்றியது'' என்று கூறியுள்ளனர். தற்போது. இந்த ரத்த அருவியின் தண்ணீர் ஏன் சிவப்பு நிறத்தில் இருக்கிறது என்று மட்டுமே கண்டறிந்துள்ளனர். ஆனால், இந்த அருவி எங்கு உருவாகிறது... எங்கு முடிகிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதற்கான ஆராய்ச்சியும் நடைபெற்றுகொண்டிருக்கிறது. விரைவில் இந்த 'ரத்த அருவி' எங்கு உருவாகிறது, எங்கு முடிகிறது என்று கண்டுபிடித்துவிடுவார்களாம்.
 
 
இந்த அருவியைப் பற்றிய கதைகளையும் மக்கள் சொல்லி வருகின்றனர். அப்பகுதியில் வாழ்ந்துவந்த பூர்வகுடிகளை எதிரிகள் கொன்றுவிட்டனர். அதனால், அவர்களின் ரத்தம்தான் இப்படி அருவியாகப் பெருகி ஓடுகிறது. இது ஒரு புனித அருவி என்ற செவிவழிச் சோகக்கதைகளும் இந்த அருவியின் பின்னணியில் இருக்கத்தான் செய்கிறது.
 
'ரத்த அருவியை' பற்றிய அனைத்துக் கேள்விகளுக்கும் ஆராய்ச்சியாளர்களால் விரைவில் பதில் தெரிந்துவிடும். ஆனால் விடை தெரியாத மற்றும் விடை கண்டுபிடிக்க முடியாத பல மர்மங்கள் இப்பூமியில் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்