Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் -அண்ணாமலை பேச்சு

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் -அண்ணாமலை பேச்சு

9 புரட்டாசி 2023 சனி 09:16 | பார்வைகள் : 3182


ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் என்று பாதயாத்திரையின்போது பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண், என் மக்கள்' 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கினார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு அண்ணாமலை பாதயாத்திரையாக சென்று மக்களை சந்தித்தார்.

தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று கம்பம், போடியில் அண்ணாமலை பாதயாத்திரை சென்றார். முன்னதாக நேற்று பகலில் கண்டமனூர் அருகே துரைச்சாமிபுரத்தில் நடந்த மக்கள் சபை கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மத்திய அரசின் திட்டங்கள், மத்திய அரசு வழங்கும் மானியங்கள் குறித்து மக்களிடம் அவர் எடுத்து கூறினார்.

அப்போது அண்ணாமலை பேசும்போது, 'இந்தியா முழுவதும் எண்ணற்ற மத்திய அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். நிலம் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். மாநில அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் வருவதில் எந்த தவறும் இல்லை' என்றார்.

கம்பத்தில் பாதயாத்திரை பின்னர், கம்பம் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி அருகில் அண்ணாமலை பாதயாத்திரையை தொடங்கினார். இளைஞர்கள், இளம்பெண்கள் பலர் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

அப்போது அண்ணாமலை பேசியதாவது:- 

கம்பம் கேரளாவின் குப்பை மேடாக மாறிக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தின் மருத்துவ கழிவுகள் கம்பத்தில் கொட்டப்படுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணி மட்டும் தான் முக்கியம். தமிழகம் எப்படி நாசமாக போனாலும் அவருக்கு கவலையில்லை. அங்கிருக்கும் (கேரளா) கம்யூனிஸ்டுகளை திருப்திப்படுத்த, கேரளாவின் குப்பைகள் தமிழகத்துக்கு வரும் போது அதை தடுத்து நிறுத்த தைரியம் இல்லாத ஆட்சி தி.மு.க. ஆட்சி. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தென்மாவட்டங்களை எப்போதும் வஞ்சிப்பார்கள். 

கஞ்சா தலைநகர் 

கம்பத்தை தமிழகத்தின் கஞ்சா தலைநகராக மாற்றுவதற்கு தி.மு.க. துடித்துக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் ஒழிக்க வேண்டிய நேரம் உங்களுக்கு வந்து விட்டது. 

சாராய ஆலைகள் நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடுவோம் என்று பொய் சொன்னது தி.மு.க. இந்தி மொழியை பயிற்றுவிக்கும் பள்ளிகளை நடத்துவார்களாம். 

ஆனால் இந்தி திணிப்பு என்று எதிர்ப்பார்களாம். 2010-ல் நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.வும், காங்கிரசும். ஆனால், 2023-ல் நீட்டை எதிர்ப்பார்களாம். 

2011-ல் ஜல்லிக்கட்டை தடை செய்தது காங்கிரஸ், தி.மு.க. அரசு. அதன்பிறகு ஜல்லிக்கட்டு வேண்டும் என்று சொல்வார்களாம். மீத்தேன் திட்டத்தை தமிழகத்தில் டெல்டா மாவட்டத்தில் கொண்டு வர கையெழுத்து போடுவார்களாம். 

ஆனால், மீத்தேன் திட்டம் வேண்டாம் என்று சொல்வார்களாம். 

ஒரே நாடு ஒரே தேர்தல் 

உதயநிதி ஸ்டாலினின் அம்மா கோவில் கோவிலாக போவாராம். 

ஆனால், உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன தர்மம் வேண்டாமாம். இதைவிட கேடுகெட்ட கட்சியை பார்த்து இருக்கிறீர்களா? சனாதன தர்மத்தில் மட்டும் தான் ஒரு மனிதன் கடவுளாக முடியும். 

ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள். இந்த நாட்டுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் வேண்டும் என்று 1971-ல் கருணாநிதி பேசியிருக்கிறார். 

வருகிற நாடாளுமன்ற தேர்தல் ஒரு வரலாற்று தேர்தல். மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழகத்தில் இருந்து 39 எம்.பி.க்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், போடி நகரில் போஜன் பார்க் முதல் வ.உ.சி. சிலை வரை அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்