Paristamil Navigation Paristamil advert login

ஆசாரம் பார்க்கிறவன் காசிக்குப் போன கதை!!

 ஆசாரம் பார்க்கிறவன் காசிக்குப் போன கதை!!

18 தை 2023 புதன் 14:13 | பார்வைகள் : 8326


ஒரு ஊரில் ஒரு ஆசாமி இருந்தான். அவன் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளு. அவனுக்கு எதைக் கண்டாலும் அருவெறுப்பா இருந்தது.
 
ஒரு சமயம் நம்ம ஆளு ஒரு கல்யாண வீட்டுக்கு போயிருந்தான். கல்யாணம் முடிஞ்சு சாப்பாடு பந்தி ஆரம்பமாச்சு.
 
நம்ம ஆளு ஒரு ஓரமா போய் உக்கார்ந்து கிட்டான். சாப்பாடு பிரமாதமா இருந்துச்சு. இவனுக்குப் பக்கத்து இலையில் உக்கார்ந்திருந்த ஆசாமி பால் பாயசத்தை உறிஞ்சி உறிஞ்சி குடிச்சிட்டுருந்தான். அப்போ எச்சில் நம்ம ஆளு மேலே தெரிச்சிட்டுது . நம்ம ஆளு தான் ரொம்பவும் சுத்தம் பார்க்கிற ஆளாச்சே. இந்த கருமத்தைக் காசியில் போய்த் தான் தொலைக்கணும்னு நினைச்சிகிட்டு மறுநாளே காசிக்குக் கிளம்பிப் போனான்.
 
அந்த காலத்தில் இப்போ மாதிரி பஸ், ரயில் வசதி எல்லாம் கிடையாதே. வசதி இருக்கிறவங்க வண்டி கட்டிக்கிட்டு போவாங்க. வசதி இல்லாதவங்க கால் நடையாவே போவாங்க..
 
போய் சேரவே பல நாள் ஆகும். பகல் முழுக்க நடப்பாங்க, இரவு நேரத்தில் ஏதாவது சத்திரத்திலோ அல்லது யார் வீட்டு திண்ணையிலோ படுத்து தூங்கி விட்டு மறுநாள் பயணத்தைத் தொடங்குவாங்க.
 
இப்படி மத்தவங்க தங்கறதுக்கு வசதியாகவே அந்த காலத்தில் பெரிய திண்ணைகள் வைத்து வீடு கட்டினாங்க.
 
திண்ணையில் வந்து தங்குறவங்களுக்கு சாப்பாடோ, அல்லது நீர் மோரோ அல்லது தங்கள் சக்திக்கு முடிஞ்ச ஏதோ ஒன்றை அவங்களுக்கு சாப்பிடக் கொடுப்பாங்க.
 
நம்ம ஆளு பகல் முழுக்க நடந்து, இரவில் ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து சுருண்டு படுத்தான். அந்த வீட்டு ஆள் வந்து "ஐயா, உங்களைப் பார்த்தால் ரொம்ப தூரம் நடந்து களைச்சு போனவராத் தெரியுது. வாங்கையா. வந்து சாப்பாடு சாப்பிட்டுட்டு படுங்க" என்றார்.
 
நம்ம ஆளுக்கு நல்ல பசி தான். ஆனால் ஆசாரம் தடுத்தது. கடைசியில் வயிறு தான் ஜெயித்தது. நம்ம ஆளு சாப்பிட சம்மதிக்கவும், அந்த ஆளு தன்னோட மனைவியைக் கூப்பிட்டு இவனுக்கு சாப்பாடு போடச் சொன்னார்.
 
கை கால் சுத்தம் பண்ணி விட்டு சாப்பிட உட்கார்ந்த நம்ம ஆளு "அம்மா எனக்கு இலையில் சாப்பிட்டுத் தான் பழக்கம். அதனாலே இலையில் பரிமாறணும்"னு சொல்ல, கொஞ்சம் யோசித்த அந்த அம்மா "சரி",ன்னு சொல்லி ஒரு இலையைக் கொண்டு வந்து போட்டு சாப்பாடு பரிமாறினாங்க. சும்மா சொல்லக் கூடாது. சாப்பாடு அருமையா இருந்துச்சு. நம்ம ஆளு நல்லா திருப்தியா சாப்பிட்டான்.
 
சாப்பிட்டு முடிச்சு இலை எடுக்கும் போது அந்த அம்மா ஓடி வந்து "ஐயா, நான் எடுக்கிறேன்"னு சொல்லி ரொம்ப பத்திரமா எடுத்துட்டுப் போனாங்க.
 
இதைப் பார்த்த நம்ம ஆளு "தூர வீசி எறியப் போற இலையை என்னத்துக்கு இவ்வளவு பத்திரமா எடுத்துட்டு போறீங்க"ன்னு கேட்க, அந்த அம்மா "இந்த ஊரில் வாழை இலை கிடைக்கிறது குதிரைக் கொம்பு தான். என்னோட மாமனாரும் உங்களைப் போல வாழை இலையில் சாப்பிடற ஆள். அவருக்காக ஒரே ஒரு வாழை இலை வாங்கி வச்சிருக்கோம். அவர் சாப்பிட்டதும் அதை கழுவி பத்திரமா எடுத்து வச்சிருவோம். நீங்க வந்து வாழை இலையில் தான் சாப்பிடுவேன்னு சொன்னதும் இலை இல்லைன்னு சொல்லவும் மனசு வரலே. உங்களைப் பட்டினியாப் போடவும் மனசு வரலே.
 
அதான் என்னோட மாமனார் சாப்பிடுற இலையில் உங்களுக்குச் சாப்பாடு போட்டுட்டு இப்போ பத்திரமா எடுத்து வைக்கிறேன்"னு சொல்லவும் இவனுக்குச் சாப்பிட்ட சாப்பாடெல்லாம் தொண்டையிலே சிக்கிக் கிட்ட மாதிரி ஆகிப் போச்சு. சரி. இந்த கருமத்தையும் காசியிலே போய் தொலைசிடுவோம்னு நினைச்சிகிட்டு படுத்துத் தூங்கினான்.
 
மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பித்தான். அன்றைக்கு பகலெல்லாம் நடந்து விட்டு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான்.
 
அந்த வீட்டம்மா இவனைப் பார்த்ததும் "ஐயா சாப்பாடு சூடா இருக்கு. வந்து ஒரு வாய் சாப்பிட்டுட்டு படுங்க " என்றதும் நம்ம ஆள் முன்னெச்சரிக்கையா வாழை இலை வேண்டாம்னு சொல்லிட்டு, "தினமும் புழங்காத மண் பாத்திரம் இருந்தால் அதில் சாப்பாடு போடுங்க" என்றான்.
 
அந்த அம்மா ஒரு அறைக்குள் போய் ரொம்ப நேரம் தேடித் துருவி ஒரு மண் பாத்திரத்தைக் கொண்டு வந்து அதில் இவனுக்குச் சாப்பாடு வைத்தாள்.
 
திருப்தியா சாப்பிட்ட இவன் மண் பாத்திரத்தை கிணற்றடிக்கு கொண்டு போய் கழுவ ஆரம்பித்தான். கை தவறி கீழே விழுந்து மண் பாத்திரம் உடைஞ்சு போச்சு.
 
இதைப் பார்த்ததும் அந்த வீட்டில் இருந்த ஒரு கிழவி குய்யோ முறையோன்னு கத்த ஆரம்பிச்சிட்டுது . "என் புருஷன் சாகக் கிடந்த கடைசி காலத்தில் இந்த பாத்திரத்தில் தான் அவர் கை கழுவி வாய் கொப்பளிப்பார். என்னோட கடைசி காலத்துக்கு இது உதவும்னு பத்திரமா வச்சிருந்தேன். அதை இந்த பாவி இப்படிப் போட்டு உடைச்சிட்டானே"ன்னு அலறுச்சு.
 
நம்ம ஆளுக்கு ஒரு மாதிரி ஆயிட்டுது . இருந்தாலும் இருக்கவே இருக்கு காசி. அங்கே போய் இந்த கருமத்தையும் தொலைச்சிடுவோம்"ன்னு நினைச்சிகிட்டு படுத்தான்.
 
மறுநாள் எழுந்து நடக்க ஆரம்பிச்சான். அன்னிக்கு ராத்திரி ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினான். அந்த வீட்டிலிருந்த பாட்டி இவனைச் சாப்பிடச் சொன்னாள்.
 
இவன் முன்னெச்சரிக்கையா "இலை, பாத்திரம் எதுவும் வேண்டாம். நான் கையை நீட்டறேன். நீங்க கரண்டியாலே எடுத்து போடுங்க"ன்னு சொன்னதும் அந்த பாட்டியும் அது மாதிரி செய்ய, வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தான்.
 
அங்கிருந்த ஒரு மாடபிறையில் வெத்திலை பாக்கு இருந்தது. பாட்டி நமக்குத் தான் வச்சிருக்கு போலிருக்கு என்று நினைச்சு இவன் பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கடித்தான்.
 
இவன் கடிச்சதும் பாக்கு உடைபடுற சத்தம் வீட்டு உள்ளே இருந்த பாட்டிக்கு கேட்டது. பாட்டி குடுகுடுன்னு ஓடி வந்து "என்ன"ன்னு விசாரித்தாள்.
 
"ஒன்னுமில்லே. இங்கிருந்த பாக்கை எடுத்து வாயில் போட்டு கடிச்சேன். அந்த சத்தம் தான்"ன்னு நம்ம ஆளு சொல்ல,
 
"பரவாயில்லை. உங்க பல்லு ரொம்பவும் பலமாத் தான் இருக்கு. நானும் இந்த பாக்கை பத்து நாளா வாயிலே போட்டுக் கடிக்க முடியாமே எடுத்து வச்சிருந்தேன். நீங்க ஒரே கடியிலே கடிச்சு வச்சிங்கன்னா நீங்க பலசாலி தான்"ன்னு பாராட்டுப் பத்திரம் வாசிச்சா.
 
நம்ம ஆளு ரொம்பவும் நொந்து போயிட்டான். "போதும்டா சாமி காசிக்குப் போன லட்சணம்"ன்னு முடிவு பண்ணிட்டு மறுநாள் தன்னோட ஊருக்கு திரும்ப ஆரம்பிச்சிட்டான். இது தான் ஆசாரம் பார்த்தவன் காசிக்குப் போன கதை...!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்