Paristamil Navigation Paristamil advert login

பக்கத்துக்கு வீட்டுக்காரர் சுத்தி..!

பக்கத்துக்கு வீட்டுக்காரர் சுத்தி..!

13 மாசி 2021 சனி 06:12 | பார்வைகள் : 9567


ஒருவர் தன் வீட்டில் மாட்டுவதற்காக ஒரு சுவர் கடிகாரம் வாங்கினார்.

சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார் !
 
கிடைக்கவில்லை !
 
பக்கத்து வீட்டுக்காரரிடம் இரவல் வாங்கலாம் என நினைத்தார். ஆனால் இரவாகிவிட்டதே, காலையில் வாங்கிக் கொள்ளலாம் என்று விட்டுட்டார்..!
 
காலையில் பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே' னு நெனச்சுட்டா என்ன செய்வது. அப்புறம் கேட்கலாம்னு விட்டுட்டார்..!
 
இப்படியே ஒவ்வொரு நாளும் *'விளக்கு வைக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்' 'வெள்ளிக் கிழமையும் அதுவுமா இரவல் கேக்கறானே' பக்கத்து வீட்டுக்காரர் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் அந்த நபர் !
 
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை டென்ஷனாக்கிக் கொண்டிருந்தது.
 
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய் ''யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ”னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்.
 
பக்கத்து வீட்டுக்காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இது மாதிரிதான் !
 
அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப்படாத கடிகாரத்தை போல் நாமும் நன்கு பழகியவர்களிடம் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாகிக் கொள்கிறோம்.
 
நெருக்கமானவர்களுக்குள் பிரச்சனைகள் வருவதற்கு இது போன்ற முன்முடிவுகளே காரணம்!
உண்மையான காரணம் என்ன என்று உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும்.
பிறர் மீதான முன்முடிவுகள், முன்மதிப்பீடுகள் மற்றும் அபிப்பிராயங்கள் தவிர்ப்போம்..!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்