Paristamil Navigation Paristamil advert login

இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு

இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு

15 பங்குனி 2023 புதன் 09:12 | பார்வைகள் : 6947


இலங்கை மத்திய வங்கிக்கு நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்கான 'இலங்கை மத்திய வங்கி' சட்டமூலம் முதலாவது மதிப்பீட்டுக்காக சபை முதல்வர்  கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் கடந்த 07 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக தொழிற்சங்கத்தினர், துறைசார் நிபுணர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள பின்னணியில் புதிய மத்திய வங்கி சட்டமூலத்திற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உயர்நீதிமன்றத்தில் குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய வங்கியின் புதிய சட்டமூலத்தினால் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி விமல் வீரவன்ச வழக்கு தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா ஊடாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிர்வாக மற்றும் நிதிசார் தன்னாட்சியை வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியை தாபிப்பதற்காகவும் மத்திய வங்கியில் தற்பொழுது காணப்படும் பணச்சட்டத்தை நீக்குவதற்காகவும்  ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டமூலமாக இது முன்வைக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டமூலத்திற்கு அமைய இலங்கை மத்திய வங்கியின் தன்னாட்சிக்கு எல்லா நேரங்களிலும் மதிப்புக்கொடுத்தல் வேண்டும் என்பதுடன் ஆள் எவரும் அல்லது உருவகம் எதுவும் மத்திய வங்கியின் ஆளுநர் ஆளும் சபையினதும் பணக் கொள்கை சபையினதும் வேறு உறுப்பினர்கள் அல்லது மத்திய வங்கியின் ஊழியர்கள் இச்சட்டத்தின் கீழ் தமது தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதிலும் புரிவதிலும், நிறைவேற்றுவதிலும் அவர்களினதும் ஏதேனும் செல்வாக்கைச் செலுத்துதலோ அல்லது மத்திய வங்கியின் செயற்பாடுகளுடன் தலையிடுதலோ ஆகாது.

அத்துடன் உள்நாட்டு விலை நிலை உறுதியை எய்துவது பேணுவது  நிதிசார் முறைமையின் நிலையுறுதியை உறுதிப்படுத்தி பேணுதல் என்பன மத்திய வங்கியின் ஆரம்பக் குறிக்கோள்கள் ஆகும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் மத்திய வங்கியின் அலுவல்களினது நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் மேல் நோக்குகின்றன மற்றும் பணக்கொள்கை தவிர மத்திய வங்கியின் பொதுக் கொள்கையைத் தீர்மானிக்கின்ற பொறுப்புடைய 'ஆளும் சபை' ஸ்தாபிக்கப்படும். இதன் தலைவர் மத்திய வங்கியின் ஆளுநராக இருப்பதுடன் துறைசார் நிபுணத்துவம் கொண்ட ஆறு பேர் இதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்