Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய தமிழ் மக்கள்!

இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகிய தமிழ் மக்கள்!

3 மாசி 2019 ஞாயிறு 06:22 | பார்வைகள் : 9211


இலங்கைத் தமிழர்களே இந்தியாவின் இயற்கையான நேச அணியாக இருப்பதுடன் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவிலும் காணப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி. வி விக்னேஸ்வரன் தமிழ் நாடு அரசியல், சமூக, கலாசார ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றும் இலங்கையில் தமிழ் மக்களின் சுய பாதுகாப்புப் போராட்டம் மற்றும் எமது நியாயமான கோரிக்கை என்பவற்றிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
 
திருகோணமலை மூலோபாயக் கற்கைகள் நிலையத்திற்கு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அளித்த விசேட பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
பாதுகாப்பதற்கான பொறுப்பு( R2P) கோட்பாடு 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதிலும் 2009 ஆம் ஆண்டு சர்வதேச நாடுகள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை நடைபெறுவதற்கு இடமளித்திருந்தன என்றும் குற்றம்சாட்டியுள்ள விக்னேஸ்வரன்
இறுதி யுத்தத்தின்போது இன சுத்திகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் வட இலங்கையில் இடம்பெற்றன என்றும் ‘சாட்சியமற்ற யுத்தத்தை’ நடத்துவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் ஐ.நா. அதிகாரிகள் துரத்தப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
அவர் அளித்துள்ள பேட்டியின் முழு விபரமும் கீழே:
 
கேள்வி : ‘பிராந்தியங்கள் மற்றும் அதிகாரங்கள்; சர்வதேச பாதுகாப்பு கட்டமைப்பு’ என்ற ஆழமான நூலொன்று 2003 இல் வெளியிடப்பட்டது. அதன் ஆக்க கர்த்தாக்கள் எல்.எஸ்.இ. யின் பாரி பூஷன் மற்றும் கோப்பனேகன் பல்கலைக்கழகத்தின் ஒலே வேவர் ஆகியோராவர். தெற்காசிய பிராந்திய பாதுகாப்பு பிணைப்பு என்று அறியப்பட்டதில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் உள்ளடங்கியிருக்கின்றமை பற்றிய வாதத்தை அவர்கள் அதில் முன்வைத்திருந்தனர்.
 
யாவற்றிற்கும் மேலாக இந்நாடுகள் ஒரேயொரு பெரிய அதிகாரமான சீனாவின் எல்லைக்குள் உள்ள மீதிறன் வளாகத்திற்குள் தெற்காசிய பிராந்திய பாதுகாப்பு வளாகத்தைக் கொண்டிருக்கின்றது என்ற வாதத்தை தெரிவித்திருந்தனர். இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் கன்வால் சிபல் 2017 நவம்பரில் பல முனைப்பைக் கொண்ட எந்தவொரு கலந்துரையாடலிலும் எதிர்கால துருவங்களில் ஒன்றாக இந்தியா நோக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, இந்தியா மேலெழுந்துவரும் பிராந்திய அதிகாரமொன்றாக விளங்குவதாகவும் மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த மாதிரியான விடயத்தில் இலங்கைத் தீவில் தமிழர்களின் நலன்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய ஆற்றலை இந்தியா கொண்டிருக்கிறது என இப்போது நீங்கள் நினைக்கிறீர்களா?
 
பதில் : பெரிய மற்றும் சிறிய சகல நாடுகளுமே தமது பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்கள் பற்றிய கரிசனையை கொண்டுள்ளன. நீங்கள் உங்கள் கேள்வியை கேட்டுள்ள வழிமுறையானது, மேற்குறிப்பிடப்பட்ட நூல்களில் அதனை எழுதியவர்களின் கருத்துகளுக்கு சாதகமான தன்மையை நீங்கள் ஏற்கனவே கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. தனிப்பட்ட முறையில் அந்தமாதிரியான அறிவாற்றல் நிரம்பிய ஆய்வுக் கட்டளைகளுக்கு அதிகளவுக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்பது குறித்து நான் உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. தெற்காசிய அரசியலில் களத்தில் இந்தியா பலம் வாய்ந்ததாக இருக்கின்றதா? இல்லையா? என்ற கேள்வியே முன்வைக்கப்பட வேண்டிய தேவைப்பாடாக உள்ளது. அவ்வாறாயின் எமது பூகோள அரசியல் அரங்கில் இந்தியா திட்டவட்டமாக அங்கீகரிக்கப்பட வேண்டிய பலம் வாய்ந்ததொன்றாக விளங்குகின்றது.
 
இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு இதய சுத்தியுடனானது, பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டதாகவும் நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கின்றது. கலாசார, சமூக , மத ரீதியாக நாங்கள் அதிகளவுக்கு பொதுவான தன்மையை கொண்டிருக்கின்றோம். இலங்கை அரசு, அதன் அரசாங்கங்கள் மற்றும் இந்தியா என்பவற்றிற்கிடையிலான உறவுகள் எப்போதுமே சந்தர்ப்பவாதமாகவும் கணக்கீடு செய்யப்பட்டதாகவும் பதிலாக காணப்படுகின்றது.
 
இந்தியாவுடனான இலங்கையின் கேந்திரோபாய உறவானது எப்போதுமே அதன் சொந்தப் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அனுகூலங்களைக் கொண்டதாகும். அதேவேளை, இலங்கை அரசாங்கங்கள் எப்போதுமே இந்தியாவை சந்தேகத்துடனும் நம்பிக்கையீனத்துடனும் பார்ப்பதுடன், பதிலாக சீனாவிற்கு சாதகமாக இருக்கின்றன. கடந்தகால கலாசார மொழியியல் மற்றும் சமூக ரீதியான உள்ளீடுகள் இந்தியாவிலிருந்து வந்திருக்கின்ற போதிலும், சுதந்திரமடைந்த காலத்திலிருந்தும் சிங்கள தேசத்தின் சோக நிலையில் இருந்தும் அழகுபடுத்தும் பொருட்டு அடையாளத்துவத்திற்காக இந்தியாவிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
அவர்களின் வேறுபாடுகள் மகாவம்ச மனப் பிரதிமையின் வெளிப்பாடாக இருக்கின்றது. புனைவு ரீதியான மகாவம்சம் இரு வகை மயக்கமான அல்லது தெளிவற்ற தன்மைகளை சிங்கள மக்களின் பொது மனங்களில் ஏற்படுத்தியிருக்கின்றது. முதலாவதாக அவர்களின் மூதாதையர்கள் இந்தியாவில் மறைந்துள்ளனர் (மகாவம்சத்தின் புனைவின் அடிப்படையில்) . அவர்கள் தங்களை இந்தியாவின் ஒரு நிலப்பகுதியின் விரிவாக்கமாக கருதுவதில்லை. ஆதலால், அத்தகைய பூர்வீகமான எந்தவொரு இடத்துடனும் அதிகளவுக்கு பிணைப்பை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இந்தியாவிலுள்ள பௌத்த வழிபாட்டிடங்கள் அவர்களுக்கு சுற்றுலா ரீதியான கவரும் இடங்களாக விளங்குகின்றன. 2 ஆவதாக கௌதம புத்தர் பௌத்தத்தை பாதுகாத்து மேம்படுத்தும் பொறுப்பை சிங்களவர்களிடம் ஒப்படைத்திருக்கின்றார் என்ற அசையாத நம்பிக்கையை அவர்கள் கொண்டிருக்கின்றனர்.
 
பௌத்தத்தை முழு உலகிற்கும் பரப்புவதற்கான பொறுப்பு சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது அவர்களின் நம்பிக்கையாக உள்ளது.
 
மறுபுறத்தில், இலங்கைத் தமிழர்களின் பொதுவான ஆன்மா இந்தியாவின் விரிவாக்கமாக இருப்பதை அங்கீகரிக்கின்றது. அவர்களுக்கிடையில் அதிகளவிலான வரலாற்று மற்றும் கலாசார ரீதியான பிணைப்புள்ளது. உலகத் தமிழர்களின் தனியான அதிகளவு வசிப்பிடமாக தமிழ்நாடு விளங்குகின்ற நிலையில், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான கடமை , தார்மீகப் பொறுப்பை மற்றும் ஆற்றலை இந்தியா கொண்டிருக்கின்றது.
 
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் இயற்கையான நேச அணியாக உள்ளதுடன், நம்பிக்கைக்குரிய நண்பர்களாகவும் அதன் பாதுகாப்பு அமைவில் காணப்படுகின்றனர்.
 
கேள்வி : இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பாக இந்தியாவின் உத்தியோகப்பூர்வ பார்வை பிரக்ஞையுடையதோ அல்லது பிரக்ஞையற்றதோ என்பது ஆதாரத்துடனேயே எப்போதும் சமர்ப்பிக்கப்படுகின்றது. அத்தகைய சூழலில் சர்வதேச ரீதியாக சீனர்களின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற போதிலும், தமிழர் நலன்களில் செல்வாக்கைச் செலுத்தக்கூடிய ஆற்றலை இந்தியா கொண்டிருக்கின்றதா?
 
பதில் : கடந்த வருடம் பாராளுமன்றக் குழுவொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் புதுடில்லிக்குச் சென்றிருந்தது. அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் இடம்பெற்றிருந்தார். இலங்கைத் தமிழர்களின் அரசியலுக்காக தனித்துவமான விடயமொன்றிற்காக வாதிடுவதற்கு பொறுப்பாகவுள்ள பாராளுமன்றக் குழுவின் உறுப்பினராக அவர் புதுடில்லிக்குச் சென்றிருந்தார். எவ்வாறாயினும் சம்பந்தனின் அண்மைய விஜயம் பாரிய பின்னடைவாக இருக்கின்றது.
 
3 வருடங்களுக்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் பதவிப்பிரமாணம் மேற்கொண்ட பின்னர் புதுடில்லிக்கு மேற்கொண்ட முதலாவது பயணமாக இது அமைந்திருக்கின்ற போதிலும், அது பாரிய பின்னடைவாகவுள்ளது. பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது, கடந்த 3 வருடங்களாக இந்தியாவுக்கு குழப்பத்தையோ அல்லது அசௌகரியத்தையோ தான் கொடுத்திருக்கவில்லையென சம்பந்தன் தெரிவித்திருந்தார்.
 
சமீபத்திய காலத்தில் இந்தியாவுடன் சம்பந்தன் தொடர்பெதனையும் கொண்டிருக்கவில்லையென்பதை இது தெளிவுபடுத்துகின்றது.
 
கேள்வி : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தவறிழைத்துவிட்டதாக அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இந்தியாவுடனான அணுகுமுறையிலும் கூட சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தவறிவிட்டது. இந்த விடயத்தில் உங்கள் அவதானிப்புகள் என்ன?
 
பதில் : இலங்கையில் நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தன் அதிகளவு நம்பிக்கையை கொண்டிருந்தார். வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளாமல் அதிகளவுக்கு நம்பிக்கையை கொண்டிருந்தார். இந்தியாவிடமிருந்து அவர் தன்னை தூர விலத்தி வைத்திருந்தார். அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கமாக உள்ளது என சர்வதேச சமூகத்திற்கு சம்பந்தன் உறுதிப்படுத்தியிருந்தார். தமிழ் மக்களுக்கு போதிய தீர்வை அரசாங்கம் வழங்குமென அவர் நினைத்திருந்தார்.
 
இலங்கையிலுள்ள தமிழர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்கான இந்தியாவின் பொறுப்பை சம்பந்தனின் அணுகுமுறை புறந்தள்ளியதுடன், இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பிற்கான அதன் பொறுப்பு தொடர்பான, இந்தியாவின் சாத்வீக எதிர்ப்புத் தன்மை தொடர்பான இடைவெளியையும் அகலிக்கச் செய்தது.
 
இது ஒரு மாபெரும் தவறாகும். தாங்கள் ஆளுமையுடையவர்களோ அல்லது ஆட்களோ அல்ல என்பதையும் எமது மக்களின் பிரதிநிதிகளே என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். அவர்களின் அந்தஸ்து மற்றும் கடப்பாடுகளை புரிந்து கொள்ளாதவிடத்து அவர்கள் தோல்வி கண்டுள்ளனர் என்று குறிப்பிடுவது அவசியம். அத்துடன், மத்தியில் அண்மையில் அரசியல் ரீதியாக எழுந்திருந்த தனித்துவமான சந்தர்ப்பம் ஒன்றையும் தமிழர்கள் சார்பாக செயற்படுத்துவதற்கு அவர்கள் தவறிவிட்டனர்.
 
கேள்வி : இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அண்மையில் அதிகரித்திருக்கின்றது. அண்மைக்காலமாக இலங்கையில் சீனாவின் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான பின்னணியில் இது அதிகரித்திருக்கின்றது. 2015 இல் மகிந்தவின் ஓய்வு சீனாவின் பிரசன்னத்தை அதிகரிப்பதற்கு இடமளிக்கும் விளைவை ஏற்படுத்தியிருந்ததாக அரசியல் அவதானிகள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். சமீபத்திய செய்தியறிக்கைகள் சிலவற்றின் பிரகாரம் வடக்கு, கிழக்கில் வலுவான பிரசன்னத்தை சீனா நாடுவதாக தென்படுகிறது. இத்தகைய நிலைமை தொடர்பான தங்கள் கருத்து என்ன? எவ்வாறு அதனைப் பார்க்கின்றீர்கள்?
 
பதில் : வடக்கு, கிழக்கில் சீனா வலுவான பிரசன்னமொன்றிற்கு ஆர்வம் கொண்டிருக்கிறது என்று நீங்கள் நம்புவதற்கான தன்மையை எது ஏற்படுத்துகின்றது என்பது பற்றி எனக்குத் தெரியாது. அவ்வாறானால், எமது மத்திய அரசாங்கம் வடக்கு, கிழக்கில் இந்தியாவின் செல்வாக்கு குறித்து அஞ்சுகின்றது என இது அர்த்தப்படுகிறதா? அதனால் இங்கு சீனாவின் பிரசன்னத்தை மேம்படுத்துகின்றதா? அவ்வாறானால் அது மிகவும் அபாயகரமானதாகும். எமது (தமிழர்களின்) துன்பமான நிலைமையை எம்மீதான அனுதாபத்துடன் சீனா பார்க்குமானால் அது வேறுபட்டதொன்றாகும்.
 
ஆனால், மத்தியிலுள்ள சிங்கள அரசாங்கத்தின் சார்பு நிலையாளராக வடக்கு, கிழக்கில் தமது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கு அவர்கள் (சீனா) முயற்சித்தால் எதிர்காலத்தில் அதிகளவுக்கு பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துமென இது அர்த்தப்படுகின்றது. தமிழர்களாகிய எங்களுடன் இலங்கையிலுள்ள சிங்களத் தலைமைத்துவம் கரங்கோர்ப்பதற்கு தயாராக இல்லை.
 
அதன்மூலம் நாட்டை சுபீட்சமான பாதைக்கு கொண்டுசெல்வதற்கும் தயாராக இல்லை. ஆனால், அவர்கள் மூக்கை உடைத்து முகத்தில் துப்புவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர். வடக்கு, கிழக்கில் வலுவான பிரசன்னத்தை கொண்டிருப்பதற்கான சீனர்களின் முன்னகர்வுகள் தொடர்பான போதியளவு தகவலை நீங்கள் எனக்கு வழங்காத வரை உங்கள் கேள்வியை போதியளவுக்கு என்னால் கையாள முடியாது.
 
கேள்வி : சிங்கள சமூகத்திலுள்ள கடும் வலதுசாரி போக்குடையவர்களும் ஏனைய தேசியவாத குழுக்கள் சிலவும் இந்தியா தொடர்பாக எதிர்மறையான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றன. இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதாவின் இந்துத்துவம் ஆகிய சமூக தாராளவாத அரங்கிற்கு முரண்பாடானதாக சிங்கள பௌத்த பிணைப்பு நிற்கின்றது என்று சிரேஷ்ட அரசியல் ஆய்வாளர் திருநாவுக்கரசு குறிப்பிட்டுள்ளார்.
 
ஆனால் தமிழர்களின் விடயங்களைப் பொறுத்தவரை தமிழ் குழுக்கள் சில உள்ளன. அவர்கள் தேவையற்ற இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர். அத்தகைய குழுக்கள் தேவையற்ற விதத்தில் இந்தியாவை விமர்சிப்பதுடன், இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் தொடர்பைப் பேண நாடுகின்றனர். ஆனால், அவர்கள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றப்போவதில்லை. இந்தியாவிற்கும் தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிப்பதாகவே இது அமையும். இறுதியில் இந்த அணுகுமுறைகள் தமிழ் மக்களுக்கு அனர்த்தமானதாக இருக்கும். அத்தகைய தமிழ் குழுக்கள் தொடர்பாக தங்கள் கருத்து என்ன?
 
பதில் : கொழும்பிலுள்ள ஹாவ்லொக் பார்க்கில் நீண்டகாலத்திற்கு முன்னர் சர்வதேச மல்யுத்தம் இடம்பெற்றது. அப்போது மிகவும் இளையவனாக இருந்தேன். சிலசமயம் 12 வயதாக இருக்கலாம். அச்சமயம் அதனைப் பார்ப்பதற்கு எனது பெற்றோர்களுடன் நான் சென்றிருந்தேன். திடீரென மழை கடுமையாக பெய்தது. எனது குடும்பம் ஒதுங்கிடம் தேடி ஆங்காங்கு ஓடியது. நானும் ஏதேவொரு இடத்தில் புகலிடம் தேடினேன். நான் பார்த்தபோது, மல்யுத்த வீரர் கிங்கொங் எனக்கு பக்கத்தில் நின்றுகொண்டிருந்தார். அவரின் எதிராளியான தாராசிங் வேறெங்கோ நின்றிருந்தார். நான் தாராசிங்கின் ஆதரவாளனாக இருந்தேன். கிங்கொங்கிற்கு அடியொன்றைக் கொடுத்துவிட்டு ‘நான் உங்களை வெறுக்கிறேன். தாராசிங் நீடுடி வாழ்க’ என்று கூறமுடியுமா?
 
அந்தத் தருணத்திற்காக கிங்கொங்கின் பாதுகாப்பின் கீழ் நிற்பதற்கு வழக்கப்படுத்திக் கொள்வதை நான் எதிர்பார்த்தேன். அவ்வாறே அரசியலுமாகும். நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ நடைமுறைச் சாத்தியமான யதார்த்தமானதாக இருக்க வேண்டிய தேவைப்பாடுள்ளது. எவர் தொடர்பாகவும் தனிப்பட்ட தப்பெண்ணத்துடனான காரணங்களுக்காக இணக்கப்பாடற்ற எமது தன்மையை வெளிப்படுத்துவதற்கு எந்தவொரு முயற்சியையும் நாங்கள் மேற்கொண்டால் அது அழிவானதாகும். தமிழ் அரசியல் கட்சிகள் இந்திய எதிர்ப்பாக இருக்குமானால், யுத்தத்தின் இறுதியில் புலிகளுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய பிரக்ஞையுடன் அவர்கள் இருப்பதாகவுள்ளது.
 
ஆனால், 2009 இல் இந்தியாவில் விடயங்கள் தொடர்பாக உயர் மட்டத்திலிருந்தவர்கள் இல்லையென்பதை நாங்கள் உணர்ந்துகொள்வது அவசியம். காங்கிரஸோ, தி.மு.க.வோ அதிகாரத்திலில்லை. அதேவேளை, எமது தற்போதைய தமிழர்களின் நலன்கள் தொடர்பாக யதார்த்த ரீதியாக நாங்கள் பார்ப்பது அவசியம். கடந்தகால காரணங்களுக்காக தப்பபிப்பிராயத்துடன் செயற்படுவதிலும் பார்க்க யதார்த்தமாக பார்க்க வேண்டும். நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இந்தியா எமது பெரிய அயலவராக உள்ளது.
 
அதேவேளை, தாராசிங்குகள் எமது உதவிக்காக வரமாட்டார்கள் என்பதையும் அதாவது கிங்கொங்களை நாங்கள் எரிச்சலூட்டினால் தாராசிங்குகள் எமக்காக வரமாட்டார்கள் என்பதை நாங்கள் நினைவில் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. சகலருடனும் கன்னியமான முறையில் கனவான் போன்று நாங்கள் விடயங்களை கையாளக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால், எமது அடிப்படைக் கொள்கைகளை, தேவைகளை மற்றும் அபிலாஷைகளை விட்டுக் கொடுக்காத வகையில் அதனைச் செய்ய வேண்டியுள்ளது.
 
கேள்வி : முதலமைச்சர் வேட்பாளராக உங்களை அறிவிக்கப்பட்டிருந்த காலகட்டத்திற்கு நாங்கள் செல்வோமானால், பேட்டியொன்றில் அச்சமயம் எமது விவகாரத்துடன் தமிழ்நாட்டை தொடர்புபடுத்துவது பொருத்தமற்றது என்று நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எமது விடயத்தில் தமிழ்நாடு பொருத்தமற்றதாக இருக்கின்றது என்று கூறியிருந்தீர்கள். அவர்கள் தமது சொந்தப் பிரச்சினைகளை கொண்டிருக்கிறார்களெனவும் ஏனெனில், அங்கு கட்சிகளுக்கிடையில் உள்மோதல் அதிகளவு இடம்பெறுகின்ற காரணத்தால், சொந்தப் பிரச்சினைகளை கொண்டிருப்பதாக நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்களே?
 
பதில் : இன்றுள்ள தமிழ்நாடு அரசாங்கம் அவர்கள் முன்பிருந்தது போன்று வலுவானவர்களாக இல்லை. நீங்கள் கூறிய விடயம் தொடர்பாகவே அதனை நான் கூறியிருந்ததாக கருதுகிறேன். தமிழ்நாட்டில் சாதாரணமாக வெளிப்படுத்தப்பட்ட அபிப்பிராயங்கள் இலங்கையில் பாதிப்பானவையாகவும் , எதிர்மறையானவையாகவும் உருவாகியமை தொடர்பாகவே நான் கூறியிருந்தேன்.
 
உதாரணமாக எமது நாட்டில் பிரிவினைக்கு ஆதரவான அறிக்கைகள் வடக்கிலுள்ள இராணுவத்தினால், சுமார் 150,000 ஆக எண்ணிக்கையடிப்படையிலுள்ள இராணுவத்தினால் தென்னிந்தியாவிலுள்ள குறிப்பிட்ட சில குழுக்களுக்கும் , வடக்கு, கிழக்கிலுள்ள எமக்குமிடையில், இரகசிய சதியொன்று ஏற்படுத்தப்படுவதாக பார்க்கப்படக்கூடும். இந்த விடயம் தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பொருத்தமற்றதாக இருக்கக்கூடும்.
 
விடுதலைப் புலிகளின் காலத்தில் அவர்கள் செய்திருந்தது போன்று தற்போது அறிக்கைகளை விடுவது தென்னிந்திய அரசியல்வாதிகளுக்கு பொருத்தமற்றதாக அமையக்கூடும். அந்தக்கட்டம் முடிவடைந்தது. அதேவேளை தமிழ்நாட்டுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு வலுவான ஆதரவு சக்தியொன்றை தோற்றுவிக்க நெருங்கிய உறவை நாங்கள் விருத்தி செய்வது முக்கியமானதாகும். தமிழ்நாடு அரசியல், சமூக, கலாசார ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இலங்கையில் எமது இனம் தொடர்ந்து இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான சுய பாதுகாப்புப் போராட்டம் மற்றும் எமது நியாயமான கோரிக்கை என்பவற்றிற்கு ஆதரவளிக்க வேண்டும்.
 
ஆனால், ஈழத்தமிழர்களின் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மாற்றியமைப்பதில் புதுடில்லியின் வகிபாகத்திற்கு தமிழ்நாடு பங்களிப்பை வழங்க முடியுமென தமிழ் சிந்தனையாளர்கள் சிலர் நம்புகின்றனர். தற்போதும் கூட இந்த சிந்தனையாளர்கள் அந்த நம்பிக்கையை கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும், தமிழ்நாட்டினால் புதுடில்லியிலுள்ள மத்திய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த முடியாதென்பதை ஒருவர் மனதில் கொள்வது அவசியமாகும்.
 
பாரிய அழிவு ஏற்பட்டிருந்த யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கூட டில்லியிலுள்ள மத்திய அரசாங்கத்தில் தமிழ்நாட்டினால் செல்வாக்கை செலுத்த முடியவில்லை.
 
கேள்வி : முதலமைச்சராக இருந்தபோது, கடைசி இரண்டு ஆண்டுகளில் பல விடயங்கள் குறித்து நீங்கள் உணர்ந்து கொண்டிருப்பீர்கள். உங்கள் எண்ணப்பாடுகள் இப்போதும் உங்கள் அபிப்பிராயமாகவே இருந்து வருகின்றன. எமது விடயத்தில் தமிழ்நாடு முக்கிய வகிபாகத்தை வழங்க முடியுமென நீங்கள் நம்புகிறீர்களா? அல்லது அது முடியாதென உங்களின் முன்னைய நிலைப்பாட்டில் இருக்கின்றீர்களா? எமது விவகாரங்களில் வகிபாகமொன்றை மேற்கொள்வதற்கான ஆற்றலுடன் தமிழ்நாடு இருக்கின்றது என்பது மிகைப்படுத்தப்படுகின்றதா?
 
பதில் : முன்னைய கேள்விக்கான பதிலில் நான் ஏற்கனவே இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளேன் . குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு அமைவாக தமிழ்நாடு வகிபாகமொன்றை வழங்க முடியுமென்ற பிரக்ஞையை மோடி கொண்டிருக்கின்றார். அவரின் ஆலோசனையை சம்பந்தன் தீவிரமானதாக எடுத்திருந்தாரா என்பது குறித்து நான் நினைக்கவில்லை. இதுவே அவரும் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள ஏனையவர்களும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க.விற்கு தங்களை உறுதிப்பாட்டுடன் வைத்திருந்ததற்கான காரணமாகும்.
 
வடக்கில் அதன் குரல் கேட்கப்பட வேண்டும் என்பது குறித்து முதலில் தமிழ்நாடு போதியளவுக்கு வலுவானதாக இருக்க வேண்டும். டில்லி அரசாங்கத்திற்கு நாங்கள் பிரேரிக்கவுள்ள எண்ணப்பாடுகள், யோசனைகளுக்கு அமைவாக எமக்கு தமிழ்நாடு உதவுவது அவசியம். எமக்கு எது சரியானது என்பதுடன் தொடர்புபட்ட விடயத்தில் எம்மை அவர்கள் வழிநடத்தக்கூடாது. மூன்றாவதாக கருணாநிதியின் தோல்வி குறித்து அவர்கள் பிரக்ஞையுடன் இருப்பது அவசியம்.
 
எமது மக்களின் வாழ்வுக்கு அதிகளவுக்கு முக்கியமான தருணத்தில் டில்லியில் அவரின் குரலை செவிமடுக்கக்கூடிய வலுவான ஆட்சியாளராக இருந்த கருணாநிதியின் தோல்வி குறித்து அவர்கள் பிரக்ஞையுடன் இருப்பது அவசியமாகும். எமது மக்களின் வாழ்க்கையின் அதி முக்கிய தருணத்தில் செயற்பாட்டுத்திறனுடன் கருணாநிதி இருப்பதை தடுத்திருந்த காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுவது அவசியமானதாகும். அத்துடன், கருணாநிதி இழைத்த தவறுகள் மீள இடம்பெறாதிருப்பதும் அவசியமாகும்.
 
கேள்வி : மாலைதீவு விவகாரம் ஆர்வமானதாக இருக்கின்றது. 2018 ஆகஸ்டில் மாலைதீவில் படையெடுப்பு என்று ருவிட் பண்ணியதன் மூலம் சுப்பிரமணியன் சுவாமி புகழ்பெற்றிருந்தார். ருவிட்டரில் தெரிவித்த இந்த விடயம் குறித்து தங்களின் உரைபெயர்ப்பு என்ன? இந்தியா நிலைப்பாட்டை மாற்றுகின்றது என்பது இதன் அர்த்தமா? அவ்வாறாயின் தமிழர்களுக்கான விடயம் என்ன? இதிலிருந்து அவர்கள் ஏதேனும் நன்மையை பெற்றுக் கொள்ளமுடியுமா?
 
பதில் : தனது கருத்துகள் தனிப்பட்டவையெனவும் இந்திய அரசாங்கத்தினுடையவை அல்ல எனவும் சுப்பிரமணியன் சுவாமி தெளிவாக கூறியிருந்தார். ஆதலால் இந்த விடயம் குறித்து நான் கருத்து தெரிவிக்கத் தேவையில்லை. நான் பாதுகாப்பதற்கான பொறுப்பின் பிரகாரம் (R2P ) இந்த விடயம் ஒரு சர்வதேச அரசியல் உறுதிப்பாட்டைக் கொண்டதாகும். சகல உறுப்பு நாடுகளினாலும் 2005 இல் இடம்பெற்ற உலக மாநாட்டில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
4 முக்கியமான விடயங்களுக்கு தீர்வு காணும் பொருட்டு இது அங்கீகரிக்கப்பட்டது. 1. இனப்படுகொலையை தடுத்தல், 2. போர்க் குற்றங்களைத் தடுத்தல், 3. இன சுத்திகரிப்பை தடுத்தல், 4. மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுத்தல். ஆனால், 2009 இல் இந்த உறுதிப்பாடு இருந்தபோதிலும், நாடுகள் பல ஒன்றிணைந்து இலங்கையின் வட, கிழக்கில் இனப் படுகொலைக்கு இடமளித்திருந்தன. போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டிருந்தன. இன சுத்திகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் வட இலங்கையில் இடம்பெற்றன. ஐ.நா. அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தினால் துரத்தப்பட்டிருந்தனர். ‘சாட்சியமற்ற யுத்தத்தை’ நடத்துவதற்காக அவர்கள் துரத்தப்பட்டனர்.
 
அதேவேளை ஐ.நா. அதிகாரிகள் மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பிரகாரம் அப்பாவிப் பொதுமக்களை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு பொறுப்புரிமை இருந்தபோதிலும், சிறிதளவே கடமைகளை நிறைவேற்றியிருந்தனர். அதேவேளை, நாடுகள் சம்பந்தப்பட்டவரை சுயநலன்களிலேயே ஒவ்வொன்றும் தங்கியிருக்கின்றன என்பதை நாங்கள் மறந்துவிடக்கூடாது. தமிழர்கள் நிலையொன்றைக் கொண்டிருப்பதற்கு அங்கு எதுவும் இல்லை. உலகிலேயே மிக உயர்ந்த சிலையாக சர்தார் வல்லபாய் பட்டேலின் அண்மைய சிலையொன்று பற்றி குறிப்பிடப்பட்டிருக்கின்றது. சில சமயம் மோடிக்கு பட்டேல் முன்மாதிரியானவராக விளங்கக்கூடும்.
 
நன்றி - சமகளம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்