Paristamil Navigation Paristamil advert login

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்!

எதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்!

1 தை 2019 செவ்வாய் 17:35 | பார்வைகள் : 8780


தனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன.
 
பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன. இன்று உயிர்வாழ்பவர்களில் சர்வதேச உறவுகள் துறையில், குறிப்பிடத்தகு அறிவாளிகளில் ஒருவரான ஜோன் மியசைமர் எழுதிய ‘தலைவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் (WHY LEADERS LIE – The Truth about Lying in International Politics) – என்னும் நூலை அண்மையில் வாசித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்க தலைவர்கள் எவ்வாறு தங்களுடைய சொந்த மக்களுக்கும் உலகத்திற்கும் பொய்களை கூறினார்கள், என்பதை ஆதாரபூர்வமாக மியசைமர் அந்த நூலில் விபரித்திருக்கின்றார். இந்த பொய்கள் இரண்டு பிரதான இலக்குகளை கொண்டிருக்கும். ஒன்று சொந்த நலன்களுக்கானது. இரண்டு நாட்டின் நலன்களுக்கானது. அதனை நூலின் ஆசிரியர் மூலோபாய பொய்கள் (Strategic lies) என்கிறார். அந்த பொய்கள் சர்வதேச ராஜதந்திர உறவுகளில் எப்போதுமே தவிர்க்க முடியாதவை. சர்வதேச அரசியலும் பொய்களும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் போன்றவை. அவை பிரிக்க முடியாதவை.
 
இந்த நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போதுதான், எதிர்க்கட்சித் தலைவர் விவாதம் ஊடகங்களில் செய்தியாக எட்டிப் பார்த்தது. ஒரு மூத்த மனிதர், வாழ்வில் சாதிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் வயதில்லாதவரான இரா.சம்பந்தன், அந்த கதிரையின் மீதுள்ள அடங்காத ஆசையின் காரணமாக எந்தளவிற்கு பொய்களை சொல்பவராக மாறியிருக்கிறார் என்பதை காண முடிந்தது. உண்மையில் அவரது பொய்கள் தமிழ் மக்களின் நலனுக்கானது எனில், அந்த பொய்கள் தொடர்பில் பேச வேண்டிய தேவையில்லை. இந்தப் பத்தியாளருக்கு அதில் முரண்பாடும் இல்லை ஏனெனில் அது மக்களுக்கானது. ஆனால் சம்பந்தன் தனது ஆசைகளுக்காக, தொடர்ந்தும் பொய்களை கூறிவருவதுதான் தவறானது. கடந்த மூன்று வருடங்களாக சம்பந்தன் பொய்களை தவிர எதனையும் கூறவில்லை. எந்தவொரு பொய்யும் மக்களுக்கானதாக இருக்கவில்லை. தமிழ் அரசியல் சூழலில் சொல்லப்பட்டுவரும் பெரும்பாலான அரசியல் பொய்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தி சொல்லப்படுபவை அல்ல மாறாக, அரசியல்வாதிகளின் சொந்த அரசியல் நலன்களுக்காகவே அவை சொல்லப்படுகின்றன. இந்தப் பொய்களை தரம்பிரித்து அறியும் ஆற்றல் மக்கள் மத்தியில் வளராதவரையில் அந்தப் பொய்கள் மக்களால் ஏதேவொரு வகையில் ரசிக்கப்படலாம். உதாரணமாக தமிழ் சூழலில் சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை உளவுத்துறைகளோடும், ஏனைய நாடுகளோடும் தொடர்புபடுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதும் கூட, சொந்த அரசியல் நலன்களுக்கான பொய்கள்தான்.
 
1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில், 18 ஆசனங்களை பெற்றதன் மூலம், அன்று தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக மாறியது. அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவரானார். அதன் பின்னர் 2015இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 16 ஆசனங்களை பெற்றதன் மூலம், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அவ்வாறானதொரு வாய்ப்பு கிடைத்தது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம். 2015இல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் ஜக்கிய தேசியக் கட்சியும் ஒரு கூட்டரசாங்கத்திற்கான உடன்பாட்டை செய்து கொண்டதன் பின்னணியில்தான், கூட்டமைப்பு பிரதான எதிர்க்கட்சியாக வரமுடிந்தது. அந்த அடிப்படையில் சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவரானார். தமிழர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவரான இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழர் தரப்பு, ஒரு தனிக்கட்சியாக பாராளுமன்றம் சென்றிருக்கவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும். முதலில் தமிழர் விடுதலைக் கூட்டணி, பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. ஆனால் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக பதவிவகித்த காலமும், சம்பந்தன் பதவிவகித்த காலமும் ஒன்றல்ல. இரண்டுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடுண்டு.
 
சம்பந்தன், இந்த பதவியை பொறுப்பேற்ற போது, அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இன்றைய சூழலில் சம்பந்தன் இந்தப் பொறுப்பை தவிர்ப்பதே நல்லது என்றவாறும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கு மாறாக, இந்தப் பதவியைக் கொண்டும் தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமெனின் அதனை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்றவாறும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் கடந்த மூன்றுவருட காலமாக, ஒரு எதிர்க்கட்சித் தலைவர் என்னும் வகையில் சம்பந்தன் என்ன செய்தார் என்று ஒரு கேள்வியை கேட்டால், அவர் ஏன் இந்தப் பதவியை எடுத்தார் என்பதற்கான பதில் கிடைக்கும். அந்தளவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் என்னும் கதிரையை தன்னுடைய சொந்த அதிகார ஆசைகளுக்காகவே சம்பந்தன் பயன்படுத்தியிருந்தார். ஆகக் குறைந்தது ஒரு நல்ல எதிர்க்கட்சித் தலைவராகக் கூட அவரால் செயற்பட முடியவில்லை. அவ்வாறானதொரு பதவியை தக்கவைப்பதற்காகத்தான், இன்று சொந்த மக்களுக்கு புதிய கதைகள் சொல்லப்படுகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையில் இடம்பெறுவதால், எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்புக்குரியது என்றவாறு சுமந்திரன் ஒரு புதிய கதை சொல்கிறார். அவ்வாறாயின், ஏன், சந்திரிக்கா குமாரதுங்க காலத்தில், எதிர்க்கட்சியை கூட்டமைப்பு கோரவில்லை? அப்போதும் பாராளுமன்றத்தில் இப்போது உள்ளது போன்றதொரு நிலைமைதானே காணப்பட்டது! தமிழ் மக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லாத இந்தப் பதவிக்காக ஏன் இப்படி, அடிபட வேண்டும்? ஆகக் குறைந்தது இந்தக் கேள்விக்காவது பதில் இருக்கிறதா?
 
இன்று மகிந்த ராஜபக்சதான் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட, எதிர்க்கட்சி அலுவலகத்தைவிட்டு சம்பந்தன் இதுவரை வெளியேறவில்லை. ஜனநாயகம் என்று நோக்கினால் கூட, பாராளுமன்றத்தில் இரண்டாவது நிலையிலிருக்கும் மகிந்த தரப்பிடம்தானே எதிர்க்கட்சித் தலைவர் பதவி செல்ல வேண்டும். கடந்த இரண்டு மாதங்களாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே தாம் ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக செயற்பட்டுவந்ததாக சம்பந்தன் கூறிவந்தார். இன்று அந்த ரணிலும் இணைந்துதானே மகிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்க உடன்பட்டிருக்கிறார். ஜனநாயகம் தெரிந்த ரணில் எவ்வாறு தவறான முடிவை எடுத்திருப்பார்? ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக துனைநின்ற ஒரு சபாநாயகர் எவ்வாறு தவறான முடிவை எடுத்திருப்பார்? இவ்வாறான கேள்விகளுக்கு சம்பந்தன்; – சுமந்திரன் தரப்பின் பதில் என்ன? ஒரு வேளை அவர்கள் இப்போது ஜனநாயக விரோதமாக செயற்பட்டிருக்கின்றார்கள், என்று சம்பந்தன்- சுமந்திரன் தரப்பு, கூற முற்பட்டால், கடந்த இரண்டு மாதங்களாக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீங்கள் துனைநின்றதாக கூறுவதில் என்ன உண்மையிருக்க முடியும்?
 
எதிர்க்கட்சி விவகாரத்தில் சம்பந்தன் தவறான முடிவில் பயணிக்கின்றார் என்னும் அப்பிராயம், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மத்தியில் மட்டுமல்ல, பெரும்பாலான தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் உண்டு. அவர்கள் இந்தப் பத்தியாளரிடம் பேசுகின்ற போது, தங்களது அதிருப்திகளை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோவின் செயலாளரும் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவருமான சிறிகாந்தா, இந்தப் பத்தியாளரிடம் பேசுகின்ற போது, தனது அதிருப்தியை மிகவும் வெளிப்படையாகவே பகிர்ந்துகொண்டார். இந்த நாட்டுக்குள் ஒரு அரசியல் தீர்வை பெறுவதுதான் கூட்டமைப்பின் இலக்கு என்றால், தேவையில்லாமல் மகிந்த ராஜபக்சவை சீண்டும் வகையில் செயற்படுவது சரியான ஒன்றல்ல. பிரதமர் விடயத்தில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அதில் ஒரு நியாயம் இருந்தது. ஆனால் எதிர்க்கட்சி விவகாரம் அப்படியல்ல. இதில் ஜனநாயம் மகிந்த தரப்பின் பக்கம்தான் இருக்கிறது. மகிந்தவை இறுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இறுக்கத்தான் வேண்டும். அதனை நாங்கள் கைவிடப்போவதில்லை ஆனால் தேவையற்ற வகையில் நாம் செயற்படுவது தவறானது. எனவே சம்பந்தன், எதிர்க்கட்சி விடயத்தில் இவ்வாறு முட்டுப்பட்டுக் கொண்டிருப்பது சரியானதல்ல என்பதே தங்களின் நிலைப்பாடு என்றார்.
 
177539900Sampanthan-800x450
 
அரசியல் முடிவுகளில் தனிமனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கும் ஒரு கணிசமான பங்குண்டு. நமது தமிழ்நிலை அரசியல் ஆய்வுகளில் இந்த விடயம் பெரியளவில் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. எதிர்க்கட்சி விடயத்தில் சம்பந்தனை வழிநடத்துவது அவரது தனிப்பட்ட ஆர்வங்கள்தான். அதாவது அவரது சொந்த நலன்கள். சம்பந்தன் எப்போதுமே தனது பதவிநிலை அந்தஸ்த்து, அதிகாரம் என்பவற்றில் கண்ணும் கருத்துமான ஒருவர். அதற்காக எவருடனும் சமரசம் செய்துகொள்ளக் கூடிய ஒருவர். அந்த அடிப்படையில்தான் அமிர்தலிங்கத்திற்கு பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் அமரும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் திடீர் அரசியல் குழப்பநிலையின் காரணமாக, அந்தப் பதவியில் தொடர்ந்தும் நீடிக்க முடியாமல் போனதை சம்பந்தனால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பதவி மோகமும், அதனால் ஏற்பட்ட தடுமாற்றமும்தான் அவரை அலைக்கழிக்கிறது. ஆனால் ஒரு எதிர்கட்சித் தலைவராக தன்னால் என்ன செய்ய முடிந்தது என்னும் கேள்வியை ஆகக் குறைந்தது அவருக்குள்ளாவது, அவர் கேட்பாராக இருந்தால், அந்தக் கதிரைக்காக இந்தளவு இறங்கிப் போவது தொடர்பில், தன்னை எண்ணி, அவருக்கே ஒரு அருவருப்பு ஏற்படலாம். ஆனால் அதிகார போதையில் தன்னை மறந்திருக்கும் மனிதர்கள் தங்களை நோக்கி சிந்திப்பார்களென்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்