Paristamil Navigation Paristamil advert login

சீனாவின் நிழலில் இருந்து விடுபடுமா இலங்கை?

சீனாவின் நிழலில் இருந்து விடுபடுமா இலங்கை?

19 கார்த்திகை 2014 புதன் 06:29 | பார்வைகள் : 8625


 ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் சீன ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று கடந்த பபுதன்கிழமை பாராளுமன்றில் உரையாற்றிய போது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தார்.

சீன நிறுவனங்களுடன் தற்போதைய அரசாங்கத்தினால் செய்து கொள்ளப்பட்ட சட்டவிரோத உடன்பாடுகள் அனைத்தும் செல்லுபடியற்றதாக்கப்படும் என்றும் இந்தியாவைப் புறந்தள்ள அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டதை சாதாரணமானதொன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.
 
அதுவும் ஜனாதிபதித் தேர்தலுக்கான முன்னாயத்தங்கள் நடந்து கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்தது.
 
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாதுகாப்பு சார்ந்த போட்டி இலங்கையை மையப்படுத்தியே உருவாகியிருக்கிறது.
 
சீன நீர்மூழ்கிகளின் கொழும்பு வருகைகள் இந்திய - இலங்கை உறவுகளின் மீது நம்பிக்கையீனங்களை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கியுள்ளது.
 
இந்த இரண்டு பின்புறச் சூழல்களின் மத்தியிலும் தாம் ஆட்சிக்கு வந்தால் சீனாவைத் துரத்தி விட்டு இந்தியாவை அருகில் வைத்துக் கொள்வோம் என்று ஐதேக கூறியிருக்கிறது.
 
இந்தநிலையில் ஐதேக கூறுவது நடைமுறைச் சாத்தியமான விடயமா என்ற கேள்வி எழுகிறது.
 
இலங்கையில் சீனா செய்துள்ள மிகப்பெரியளவிலான முதலீடுகள், சீனாவுடனான இலங்கையின் உறவுகளை அவ்வளவு இலகுவில் பிரித்து விட முடியாத நிர்க்கதியை ஏற்படுத்தியுள்ளது.
 
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சீனாவுடன் செய்து கொண்ட சட்டவலுவுள்ள எந்த உடன்பாட்டையும் ரத்துச் செய்து விட முடியாது.
 
அது இலங்கையின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தி விடும்.
 
ஏனென்றால் இப்போது சீனா கொடுத்திருக்கின்ற முண்டுதான் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்தி வைத்திருக்கிறது. அந்த முண்டுத்தடி நீக்கப்பட்டு விட்டால், பொருளாதாரம் முறிந்து விடும்.
 
ஏற்கனவே தொடங்கப்பட்ட சீனாவின் திட்டங்கள் முடங்கிப் போய்விடும்.
 
எனவே ஐதேக ஆட்சிக்கு வந்தால் சீனாவின் முழுமையான ஆதிக்கம் அகன்று விடும் என்று கருதுவதற்கில்லை.
 
வேண்டுமானால் அது குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
 
இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு இடையூறை ஏற்படுத்தாத கொள்கையை, நடைமுறைகளை ஐதேக நடைமுறைப்படுத்த முனையலாம்.
 
அதேவேளை, சீனாவின் எல்லாப் பொருளாதார முதலீடுகளையும் இந்தியா எதிர்க்கவில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
 
தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்ற சூழலில் கூட, சீனாவின் பொருளாதாரத் தலையீடுகள் தமக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்தியா வாய் திறக்கவேயில்லை.
 
சீனா இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக விளங்குகிறது.
 
அடுத்த சில ஆண்டுகளிலேயே சீனா அமெரிக்காவை முந்திக்கொண்டு உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக மாறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
 
அந்த வகையில் உலகில் எந்தவொரு நாடுமே சீனாவின் பொருளாதார தலையீடுகளில் இருந்து தப்பிக்க முடியாத ஒரு சூழல் உருவாகி விட்டது.
 
கைத்தொழிற் புரட்சிக்குப் பின்னர், பிரித்தானிய உற்பத்திகளும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜப்பானின் இலத்திரனியல் சாதனங்களும், எப்படி உலகம் முழுவதற்கும் தேவைப்பட்டதோ, இப்போது சீனப் பொருட்கள் உலகம் முழுவதற்கும் தேவைப்படுகின்றன. சீன உற்பத்திகள் தான் அமெரிக்காவையும், இந்தியாவையும் கூட ஆட்டிப் படைக்கின்றன.
 
இந்தியாவில் கூட லட்சக்கணக்கான கோடி ரூபாவை முதலீடு செய்யத் தயாராக இருக்கிறது சீனா. அதற்கான கதவுகளை இந்தியாவும் திறந்து விட்டிருக்கிறது.
 
ஆந்திராவில் தான் மிகப் பெரியளவில் சீனா முதலீடு செய்வதில் ஆர்வம் கொண்டிருக்கிறது.
 
மோடியின் வருகைக்குப் பின்னர் குஜராத்தின் மீதும், அதன் கண் விழுந்திருக்கிறது. சீன நிறுவனங்களைப் பொறுத்தவரையில் அவை எந்த உற்பத்திப் பெயரையும் தக்கவைத்துக் கொள்வது அவற்றின் நோக்கமல்ல.
 
அவை உற்பத்தி அதிகரிப்பை மட்டுமே கவனத்தில் கொள்பவை.
 
அதனால் எந்த நிறுவனத்தின் பெயருக்காகவும், தமது உற்பத்திப் பெயர்களை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கின்றன.
 
தற்போதைய இந்திய அரசாங்கத்தின் மேக் இந்தியா கொள்கையும் கூட சீனாவின் இந்தக் கொள்கைக்கு ஏற்றது தான். எந்தப் பொருளாக இருந்தாலும், எந்த நாட்டு நிறுவனமும் உற்பத்தி செய்யலாம். ஆனால் அதனை இந்தியாவில் செய்ய வேண்டும் என்பதே மோடியின் திட்டம்.
 
சீனா அதற்குத் தயாராக இருக்கிறது.
 
எனவே அடுத்து வரும் ஆண்டுகளில் இந்தியாவில் கூட சீனாவின் மிகப் பெரிய முதலீடுகள் கொட்டப்படும் சூழல் உருவாகும்.
 
பொருளாதார ரீதியாக சீனா வளர்ந்து விட்ட நிலையில் அதன் போக்கில் சென்றே தாமும் தலை நிமிர வேண்டும் என்று அமெரிக்காவும் இந்தியாவும் நினைக்கின்றன.
 
இது விஜரும்பியோ விரும்பாமலோ வந்துவிட்டதொரு சூழ்நிலை.
 
சீனாவின் வளர்ச்சி அதனையும் அரவணைத்தே செல்ல வேண்டிய சூழலை முக்கிய வல்லரசுகளுக்கு ஏற்படுத்தி விட்டது. அதனால் சீனாவின் பொருளாதாரத்துடன் ஒத்துழைக்க அமெரிக்காவும் இந்தியாவும் முடிவு செய்து விட்டன.
 
இது பொருளாதாரத்தில் மட்டும் தான் பாதுகாப்பில் அத்தகைய நிலைப்பாட்டை இரு நாடுகளும் கொண்டிருக்கவில்லை.
 
அண்மையில் சீன நீர்மூழ்கிகள் இரண்டு தடவை கொழும்பு வந்து சென்றதை இந்தியா மட்டும் உன்னிப்பாக கண்காணிக்கவில்லை.
 
அமெரிக்காவும் கூட அதனை எச்சரிக்கையுடன் அவதானித்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் வாசிங்டனில் நடந்த இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையிலான பாதுகாப்பு சார்ந்த உயர்மட்டக் கூட்டத்தில் இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
அதன் விளைவாக அமெரிக்க, இந்தியக் கடற்படையினர் ஆண்டு தோறும் நடத்தி வரும் மலபார் பயிற்சி என்ற கடற்படைப் போர் ஒத்தகையை மேலும் விரிவாக்கிக் கொள்ள இரண்டு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
 
இதன்படி விமானந்தாங்கி கப்பல்கள், அணுசக்தி நீர்மூழ்கிகளும் இந்த மலபார் போர்ப்பயிற்சியில் பங்கேற்கவுள்ளன.
 
அடுத்த கட்டமாக இருநாட்டு விமானப்படை, கடற்படையை இணைத்துக் கொள்ளவும், மேலும் சில நாடுகளை இதில் சேர்த்துக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இது கொழும்பில் சீனாவின் ஆதிக்கத்தை பாதுகாப்பு ரீதியாக எதிர்கொள்வதற்கான திட்டம்.
 
ஆனால் இதற்கும் பொருளாதார ரீதியான முதலீடுகளுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொள்ள அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரி தயாராக இல்லை.
 
அண்மையில் ஜவஹர்லால் நேரு நினைவுப் பேருரையாற்றுவதற்காக கொழும்பு வந்திருந்த பாஜகவின் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான எம். ஜே. அக்பர் இலங்கையில் சீனாவின் பொருளாதார முதலீடுகள் குறித்து இந்தியா கவலை கொள்ளவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
 
இதே கருத்து முன்னரும் பல தடவைகள் வெளியானது தான்.
 
நீர்மூழ்கிகள் பொருட்களைக் கொண்டு வரவில்லை என்றும் பாதுகாப்புடன் விளையாட வேண்டாம் என்றும் குறிப்பிட்ட அவர் பொருளாதார ரீதியான உறவுகளை துண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
 
எந்த நாடும் எல்லா நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை வைத்துக் கொள்ளும் உரிமை கொண்டவை என்பதை சுட்டிக்காட்டி சீனாவுடனான பொருளாதார உறவுகளுக்கு குறுக்கே இந்தியா நிற்காது என்று அவர் கூறியிருந்தார்.
 
எனவே சீனாவைத் துரத்திவிட்டு இலங்கை தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக கருதக்கூடாது.
 
பொருளாதாரத்தில் போட்டி தான் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.
 
போட்டியில்லாவிட்டால் எந்த நாட்டினாலும் வளர முடியாது என்பதை இரண்டு தசாப்தங்களுக்கு முன்பிருந்த இந்தியா நன்றாகவே உணர்ந்து கொண்டிருக்கிறது.
 
இப்போது இந்தியாவுக்கு சீனா ஒரு சவாலாகவே இருந்தாலும்  சீனா கொடுக்கின்ற கடும் போட்டி தான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்ச்சி பெறத் தூண்டியுள்ளது என்பதை மறுக்க முடியாது.
 
சீனாவின் பிரமாண்ட வளர்ச்சி இந்தியாவுக்கு கொடுத்த அச்சம் தான், அது தன்னைச் சுய பரிசோதனை செய்து கொள்ளத் தூண்டியது.
 
அதன் விளைவு தான் இந்தியா தொழிற்துறையில் வளர்ந்து கொண்டிருப்பதற்கு காரணம்.
 
எனவே இலங்கையில் இருந்து சீனாவில் முதலீடுகளை துரத்துவதென்பது நடக்கக்கூடிய காரியமல்ல.
 
அதனை இந்தியா வரவேற்கப் போவதுமில்லை. நீண்டகாலத் திட்டங்கள், முதலீடுகளுடனும் கடன்களுடனும் சீனா தொடர்புபட்டுள்ளதால் இது குறுகிய காலத்தில் நடந்து விடக் கூடிய காரியமல்ல.
 
ஐதேக ஆட்சிக்கு வந்தாலும் சரி, வராது போனாலும் சரி இலங்கை சீனாவின் பொருளாதார நிழலுக்குள் இருந்து இப்போதைக்கு விடுபடப் போவதில்லை.
 
- ஹரிகரன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்