Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு! நாடகமாடுகிறது இந்தியா! கொந்தளிக்கும் தமிழகம்

இலங்கையில் கொமன்வெல்த் மாநாடு! நாடகமாடுகிறது இந்தியா! கொந்தளிக்கும் தமிழகம்

19 ஐப்பசி 2013 சனி 16:51 | பார்வைகள் : 9342


இலங்கையில் 23-வது கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் போராட்டத்தில் குதித்துள்ளன. மாணவர்களும் வியாபாரிகளும் பொதுநல அமைப்புகளும்கூட ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி வருகின்றனர். இதற்கு பதில் சொல்லாமல் மத்திய அரசு மௌனம் காப்பதால், போராட்டங்கள் மேலும் வலுக்கின்றன.

கடந்த 10-ம் தேதி முதல், செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தனர். சட்டக் கல்லூரிக்கு எதிரே பந்தலிட்டு... மணிகண்டன், க்ராந்தி பிரித்திவிராஜ், ஜான்சன், ராஜு, யுவராஜ் ஆகிய ஐந்து மாணவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.

அரசியல் கட்சியினரும் ஈழ ஆதரவு இயக்கங்களும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களைச் சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் 14-ம் தேதி இரவு செங்கல்பட்டு டி.எஸ்.பி. குமார் தலைமையில் வந்த காவல் துறையினர், மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயன்று, தோற்றனர். ராஜு என்ற மாணவரின் உடல்நிலை மோசமாக, அவர் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

15-ம் தேதி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மாணவர்கள் சாலை மறியல் நடத்தினர். காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட... மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினர், தரதரவென இழுத்துச் சென்று வானில் ஏற்றினர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்பட்டது. அதிகாலை 4 மணிக்கெல்லாம் போராட்டத்தைத் தொடங்கினர். அண்ணாசாலை பி.எஸ்.என்.எல். அலுவலகத்துக்கு முதலில் பூட்டுப் போட்டனர்.

இதையடுத்து, ராயப்பேட்டை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் அலுவலகம், சாஸ்திரி பவன் பாஸ்போர்ட் அலுவலகம், நுங்கம்பாக்கம் வருமான வரித் துறை அலுவலகம் ஆகியவற்றுக்கு காலை 6 மணிக்குள் பூட்டுப் போட்டு முடித்தனர்.

பின்னர், வருமான வரித்துறை அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்குள் பொலிஸாரும் குவிந்தனர். சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சசிகுமார் தலைமையில் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

வள்ளுவர் கோட்டத்தில் அக்டோபர் 1-ம் தேதி உண்ணாவிரதப் போராடத்தைத் தொடங்கிய தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, 15 நாட்களுக்குப் பிறகு தனது போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் வாங்கினார்.

திராவிடர் கழகத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 'தமிழக மீனவர்களைக் காப்பாற்று! இலங்கை தமிழர்களைக் காப்பாற்று!’ என்று முழங்கினர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியைச் சேர்ந்தவர்கள் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமை வகித்தார்.

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம் போர்க் குற்றவாளி ராஜபக்சவை புனிதனாக சித்திரிக்கும் வேலைகளை மத்திய அரசு செய்துவருகிறது.

கறுப்பின விரோத செயலை கடைப்பிடித்ததாக, கொமன்வெல்த் அமைப்பை உருவாக்க பாடுபட்ட தென்னாப்பிரிக்க நாட்டையே 1961 முதல் 94 வரை நீக்கிவைத்தனர். அதிபர் இடிஅமீன் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டித்து 1977-ல் உகண்டா நீக்கப்பட்டது.

பத்திரிகையாளரும் பேராசிரியருமான கென் சாவோ வீவா என்ற மனித உரிமை செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்காக, அடுத்த நாளே நைஜீரியா டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இராணுவத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியதால் பர்வேஷ் முஷாரப் அதிபராக இருந்தபோது பாகிஸ்தான் நீக்கப்பட்டது. 2002-ல் ஜிம்பாவ்வே நீக்கப்பட்டது. இப்போதுகூட, இராணுவ ஆட்சியில் ஜனநாயகம் மறுக்கப்படுகிறது என்று பிஜி நாடு விலக்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு முதுகெலும்பாக இருந்தது இந்தியா. ஆனால், இலங்கை விவகாரத்தில் இன்று இந்தியா நாடகமாடுகிறது என்று வெடித்தார்.

மாநாடுக்கான தேதி நெருங்க நெருங்க, போராட்டங்கள் தீவிரமடைகிறது.

- விகடன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்