Paristamil Navigation Paristamil advert login

தமிழகத் தலைவர்களின் தவறுகளிலிருந்து ஊக்கம் பெறும் சிங்கள இனவாதம்!

தமிழகத் தலைவர்களின் தவறுகளிலிருந்து ஊக்கம் பெறும் சிங்கள இனவாதம்!

30 பங்குனி 2013 சனி 15:34 | பார்வைகள் : 9605


இந்தியாவிற்கான சிறிலங்காவின் தூதுவர் பிரசாத் கரியவாசம் மகாவம்ச வரலாற்றிலிருந்து ஒரு தகவலைத் தெரிவித்து சிங்கள - இந்திய ஆரிய உறவு என்ற கோணத்தில் புதியதொரு சிங்கள ஆதரவுத் தளத்தை வட இந்தியாவில் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

பிரசாத் கரியவாசம், தன்னுடைய மின்னஞ்சல் மூலம் 'சிங்களவர்கள் இந்தியாவின் கலிங்கம், வங்கம் பகுதிகளின் பூர்வீக மக்கள் என்றும் சிங்கள அரசன் விஜயன், ஒரிசாவில் இருந்து வந்தவன் என்றும் இந்தியாவின் புத்த மதத்தை சிங்களர்கள் பின்பற்றுவதாகவும், எனவே தமிழ்நாடு தவிர்த்த இந்திய மக்கள் சிங்களர்களுக்கு உதவ வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இவரால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, மார்ச் 19 ஆம் தேதி கொழும்பில் உள்ள ஊடக மையத்தின் மூலம் இந்தியாவில் உள்ள ஊடகங்களுக்கும் பத்திரிகைகளுக்கும், ராஜதந்திரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சிங்கள மொழி, சமஸ்கிருதம், இந்தி மொழியோடு தொடர்பு உள்ளது என்றும் ஈழத்தமிழர்கள் வெறும் 12 சதவீதம்தான் என்றும் அவர்களின் பயங்கரவாதத்தை ஒடுக்கிய ராஜபக்ச அரசைப் பாராட்ட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு, உடனடியாகவே தமிழகத்திலிருந்து எதிர்வினைகள் வெளிப்பட்டுள்ளது. காங்கிரஸ் தவிர்ந்த தமிழகத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் சிறிலங்கா தூதர் கரியவாசத்தின்மீது ராஜதந்திரிகளுக்கான வரைமுறைகளை மீறி, இந்திய மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த முற்பட்டதற்காக மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, ஈழத் தமிழர்கள் விடயத்தில் கொதிநிலை உச்சத்தில் உள்ள தமிழக மாணவர்கள் கரியவாசத்தின் கொடும்பாவிகளையும் எரித்துள்ளார்கள். ஆனாலும், இந்தியாவின் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் இதுவரை இது குறித்து எந்தக் கருத்தினையும் தெரிவிக்கவில்லை.

ஈழத் தமிழர் பிரச்சினையை, ஆரிய - திராவிட யுத்தத்தின் தொடர்ச்சியாகவே இந்திய தேசிய கட்சிகள் கருதுவது போன்ற தோற்றப்பாடும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுகின்றது. தமிழகத்தை மீறிய காங்கிரஸ் கட்சியின் சிங்களப் பாசமும் இராமாயண காலத்தில் இராமனுடன் சென்ற அனுமன்களின் வாரிசுகளே சிங்களவர் என்றும் தமிழர்கள் இராவணனின் வாரிசுகள் என்றும் சில நாட்களின் முன்னர் பி.ஜே.பி.யின் தலைவர்களில் ஒருவரான அத்வானி தெரிவித்துள்ளதும் சாதாரணமானவை அல்ல.

அவை, தமிழகத்தை இன்னொரு காஷ்மீராக்கும் பேராபத்து நிறைந்தது. இந்திய மத்திய அரசால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் தமிழர்களும், தமிழகமும் தமக்கான பாதுகாப்பு வியூகங்களை அமைத்துக் கொள்ள வேண்டிய முக்கிய காலகட்டத்தில் உள்ளார்கள் என்றே உணர முடிகின்றது.

இந்தியாவின் வட மாநிலங்களிலிருந்து இலங்கை சென்று குடியேறியவர்களே சிங்களவர்கள் என்ற செய்தியைத் தெரிவித்துள்ள பிரசாத் கரியவாசம், அதற்கும் முன்னர் அந்தத் தீவு தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று மறைமுகமாக ஏற்றுக்கொள்ளுகின்றார் என்று நாம் கருத முடியும்.

அது மட்டுமல்லாமல், ஒரு நாட்டு மன்னன் தன் ஒரே மகனை நாடு கடத்தும் முடிவுக்கு வந்தான் என்றால், அந்த மகன் எத்துணை கொடியவனாக இருந்திருக்க வேண்டும். அதுவும், அயல் நாடுகள், நட்பு நாடுகள், எதிரி நாடுகள் என்ற இந்திய எல்லைக்குட்பட்ட எந்த நாட்டுக்குள்ளும் தங்க விடாமல், கடல் கடந்து செல்லும்படி விஜயனையும் அவனது துட்ட தோழர்களையும் அவனது தந்தையே நிர்ப்பந்தம் செய்ததாக மகாவம்சத்தில் தெரிவிக்கப்பட்டதையும் காரியவாசம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அல்லது அக்கறை கொள்ளாத நிலையில் உள்ள இந்திய தேசியக் கட்சிகளையும், வட மாநிலங்களையும் குறி வைத்து சிங்கள ஆட்சியாளர்கள் ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்கின்றார்கள். இன்றைய நிலையில், திராவிட மொழி பேசும் தென் மாநிலங்கள்கூட தமிழகத்தைக் கண்டு கொள்ளாத நிலையிலேயே உள்ளன. காவிரி பிரச்சினையால் கன்னடமும், கிருஷ்ணா நதி பிரச்சினையால் கேரளமும் தமிழகத்துடன் மோதல் போக்கையே வெளிக்காட்டுகின்றன.

அண்ணா அவர்களுக்குப் பின்னர் தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளின் எதிர்கால நோக்கமற்ற செயற்பாடுகளின் விளைவுகளாகவே இதனைக் கருதலாம். இந்தியா என்ற ஒற்றை முகவரியுடன் ஈழத் தமிழர்கள் தங்களுக்கான ஆதரவுத் தளங்களை உருவாக்கத் தவறிய காரணத்தால் ஏன் என்று கேட்க நாதியற்றவாகளாக சிங்கள தேசத்தால் இன அழிப்புக்குள்ளானார்கள். அதனை, தமிழகமும் தமிழீழ மக்களும் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

அண்ணாவின் பின்னர், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற கலைஞர் கருணாநிதி திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது குடும்பத்தின் சொத்தாக மாற்றும் முயற்சியில் இறங்கியதால், அது இரண்டாகப் பிளவுபட்டது. அதன் மூலம், தமிழகமே பிளவுண்டு போனது. இந்த இரண்டு கட்சிகளுமே தமக்குள் முட்டி மோதிக்கொண்டு தமிழர்களது நலன்களைப் பின் நகர்த்திவிட்டார்கள். இன்றுவரை அந்த நிலையே தொடர்கின்றது. இதில் மாற்றம் உருவாகாத வரையில் தமிழர்களது மீட்சிக்கு வழி ஏதும் கிடையாது.

இன்றைய தமிழக மாணவர்களது எழுச்சி மட்டுமே தமிழர்களது எதிர்கால நம்பிக்கையாக உள்ளது. இந்தப் போராட்டத்தின் முடிவு உருவாக்கக்கூடிய மாற்றங்களே தமிழகத்தின், தமிழர்களின் நலன் சார்ந்த தலைமையைத் தமிழகத்தில் உருவாக்கும். அதுவே, உலகத் தமிழர்களது விடிவுக்கும் வழிகாட்டும். அதற்காகவே உலகத் தமிழினம் காத்துக் கிடக்கின்றது!

சுவிசிலிருந்து கதிரவன்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்