Paristamil Navigation Paristamil advert login

சமூக ஊடகங்களுக்கு நாம் எளிதில் அடிமையாவது ஏன்? அதற்கான தீர்வுகள் என்ன?

சமூக ஊடகங்களுக்கு நாம் எளிதில் அடிமையாவது ஏன்? அதற்கான தீர்வுகள் என்ன?

22 ஆவணி 2021 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 9267


பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம் இந்தியாவில் உள்ள வளர் இளம் பருவத்தினரிடம், அவர்களின் இணையதள பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை எடுத்தது.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் கணிசமான நபர்களுக்கு பிரச்னைக்குரிய இணையதள பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
 
682 பேர் பங்கு கொண்ட இந்த ஆய்வில் 20 பேர் தீவிரமாக இணையதளத்திற்கு அடிமையாகியுள்ளனர். இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்றபோதிலும் சமீப நாட்களில் குறிப்பாக கோவிட் காலத்தில் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது என்கிறார் பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தின் மருத்துவ உளவியல் பேராசிரியர் மற்றும் ஷட் கிளினிக்கின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ் குமார் ஷர்மா.
 
இந்த ஷட் கிளினிக் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம் சார்பில் நடத்தப்படுகிறது இங்கு தொழில்நுட்பத்திற்கு அடிமையாவது குறித்த பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
 
எது ஒன்றுமே நம் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை நல்லதுதான் ஆனால் எப்போது நம் கட்டுப்பாட்டை மீறி செல்கிறதோ அப்போதே அதுகுறித்து நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.
 
இந்த பெருந்தொற்று காலத்தில் நாம் எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தை குறிப்பாக அலைபேசியை சார்ந்திருக்கிறோமோ அதே அளவில் அதனால் ஏற்படும் சிக்கல்களும் அதிகரித்துள்ளது என்கிறார் மனோஜ் குமார் ஷர்மா.
 
கொரோனா காலத்தில் அதிகரித்த பிரச்னை
 
லாக்டவுன் காலத்திற்கு முன்பாகவும் தொழில்நுட்ப பயன்பாடு இருந்தது ஆனால் வெகு குறைந்த சதவீதத்திலான மக்களே கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கோவிட் காலம் தொழில்நுட்பத்தை சார்ந்து இருப்பதை அதிகரித்திருக்கிறது என்கிறார் இவர்.
 
"கோவிட் காலத்திற்கு முன்பு நாம் ஆஃப்லைனில் செய்து கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் தற்போது ஆன்லைன் ஆகிவிட்டது. எனவே இம்மாதிரியான டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
 
அதேபோன்று பெரிதாக எந்த வித உடல் சார்ந்த வேலைகளும் இல்லாத காரணத்தால், அந்த நேரத்தையும் நாம் சமூக வலைத்தளங்களில் செலவழிக்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும் என்ற நிலை தற்போது இல்லாத காரணத்தால் இரவு நேரங்களில் தூங்காமல் கண்விழித்து நாம் அலைபேசியை பயன்படுத்துகிறோம்.
 
சிலருக்கு குறிப்பிட்டு ஏதேனும் பணியில் இருந்தாலும் அல்லது அலுவலக பணியில் கவனம் செலுத்தி கொண்டிருந்தாலும் சமூக ஊடகங்களின் பதிவுகளை பார்ப்பது, அதில் வரும் மெசேஜ்களுக்கு பதில் அளிப்பது போன்ற விஷயத்தில் ஈடுபடுபடுவது ஒரு பழக்கமாக மாறியிருக்கும். இது அவர்கள் அன்றாட வேலையை பெரிதும் பாதிக்கும், சில நேரங்களில் இதனால் அவர்கள் தங்களின் பணியை தள்ளிப் போடுவார்கள் அது பணியில் பல பிரச்னைகளை உருவாக்கலாம். இதுவே மாணவர்களுக்கும் பொருந்தும்."
 
இதற்கு காரணம் என்ன?
 
"பிறரோடு இணைந்திருப்பது, அங்கீகாரம் பெறுவது இவை இரண்டும் புற சமூகத்தில் நிறைவேறாத பட்சத்தில் அவர்கள் ஆன்லைனில் அதை தேடுகின்றனர் சமூக ஊடகங்களில் அதிக நண்பர்களையும் பின் தொடர்பாளர்களையும் கொண்டிருப்பது அவர்களுக்கு ஒரு மன திருப்தியை அளிக்கிறது. வீடியோ, பதிவு போன்றவற்றிற்கு உடனடியாக அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது. இதுதான் சமூக வலைதளத்திற்கு அடிமை ஆவதற்கான முக்கிய காரணமாக உள்ளது," என்கிறார் மனநல நிபுணர் மனோஜ் குமார் ஷர்மா.
 
நாம் சமூக வலைத்தளத்திற்கு அடிமையாகிவிட்டோம் என்பதை எவ்வாறு கண்டறிவது?
 
இதனை நாம் மூன்று முறைகளின் மூலம் கண்டறியலாம் என்கிறார் மனோஜ் குமார் ஷர்மா.
 
1.தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். `Zero inbox syndrome` என ஒன்று உள்ளது அப்படியென்றால் இன்பாக்ஸில் வரும் மெசேஜ்கள் அனைத்தையும் படித்துவிட வேண்டும். அதுவே நாளடைவில் நாமே சென்று இன்பாக்ஸை பார்ப்பது, காலப்போக்கில் அதற்கு அடிமையாவது.
 
2.கட்டுப்பாட்டை இழப்பது. நீங்கள் சமூக ஊடகங்களில் இருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்தவர்கள் போல உணருவது.
 
3.உங்கள் பணியில் பாதிப்போ அல்லது தனிநபர் வாழ்க்கையில் பிரச்னை ஏற்பட்டாலும்கூட தொடர்ந்து சமூக ஊடகத்தில் இருக்க வேண்டும் என்று தோன்றினால் அது அடிமைத்தனம். அதாவது சமூக ஊடக பயன்பாடு உங்களுக்கு பிரச்னையை உருவாக்குகிறது என்று தெரிந்தும் தொடர்ந்து அதில் இருப்பது. இவ்வாறு இருந்தால் நிச்சயமாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.
 
இதிலிருந்து எவ்வாறு வெளியே வருவது?
 
எந்த ஒரு பிரச்னையிலிருந்தும் நாம் வெளிவர வேண்டும் என்றால் முதலில் நாம் அந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உணர வேண்டும் என்கிறார் மனோஜ் குமார் ஷர்மா.
 
"ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை. எந்த ஒரு மனிதரும் தான் ஒரு விஷயத்திற்கு அடிமையாகிவிட்டதை உடனடியாக ஒப்புக் கொள்ளமாட்டார்கள். சுற்றியிருப்பவர்கள் அதுகுறித்து பேசினாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதை ஒப்புக் கொள்வது கடினம்.
 
இரண்டாவது, பிரச்னை என்று உணர்ந்தபின் இதுகுறித்து யாரிடமாவது பேச வேண்டும். நண்பர்கள், குடும்பத்தினர் என யாரிடமாவது பேச வேண்டும். அதன்பின் மருத்துவரை நாடலாம்.
 
ஏதாவது உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது போன்ற மாற்று நேர்மறை செய்கைகளில் ஈடுபடுவதும் பயன் தரும். பொதுவாக 60-90 நிமிடங்கள் ஏதேனும் உடல் சார்ந்த பணியில் ஈடுபடுவது நல்லது. முடிந்த அளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தேவையில்லாத தொடர்புகளை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும்," என்கிறார்.
 
அதீத சமூக ஊடக பயன்பாட்டிலிருந்து வெளிவருவது குறித்து பேசும்போது டிஜிட்டல் ஃபாஸ்டிங் என்ற (Digital Fasting) பதத்தை முன்வைக்கிறார் மனோஜ் குமார்.
 
"உண்ணாமல் நோன்பு இருப்பது போல எந்த கருவியையும், சமூக ஊடகத்தையும் பயன்படுத்தாமல் சில நேரங்களை நாம் ஒதுக்க வேண்டும். அந்த நேரத்தை குடும்பத்தினருடன் பேசுவதற்கும், மாற்று நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தலாம்."
 
சமூக ஊடகங்களை பொறுத்தவரை பல நேரங்களில் தேவைக்கு அதிகமான தகவல்களையே நாம் பெருகிறோம். இது பல்வேறு உளவியல் பிரச்னைகளுக்கும் வித்திடுகிறது. அதுமட்டுமல்லாமல் ஒரு கருவியை நாம் தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிந்த அளவிலான சிறிய உடற்பயிற்சிகள் நமது உடல் நலத்திற்கு பயனளிக்கும்.
 
"தொடர்ந்து நீங்கள் 30-40 நிமிடங்களுக்கு ஏதேனும் கருவியை பயன்படுத்தினால் அதிலிருந்து நிச்சயம் 'பிரேக்' எடுக்க வேண்டும். சிறுது நடக்க வேண்டும் இல்லையென்றால் கண் வலி, உடல் வலி போன்ற அனைத்து பிரச்னைகளும் வந்து சேரும்.
 
பொதுவாக கண்களை அடிக்கடி சிமிட்டுவது, தலையை முன்னும் பின்னும் திருப்புவது, இடது மற்றும் வலது புறமாக ஐந்து முறை தலையை திருப்புவது ஆகிய எளிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
 
மேலும் இரவு உறக்கத்திற்கு 30 அல்லது 40 நிமிடங்களுக்கு முன்னதாக மொபைல் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
 
அதேபோன்று சமூக ஊடகங்களில் நாம் பெரும் அதிகப்படியான தகவல்களை எவ்வாறு உள்வாங்கி கொள்கிறோம் என்பதும் தனிநபரின் தன்மையை பொறுத்தது" என்கிறார் மனோஜ் குமார் ஷர்மா.
 
சமூக ஊடகங்களில் ஒரு தகவலை பார்த்தாலும் முடிந்தவரை அதை நாம் நம்பகமிக்க பிற தரவுகள் மூலம் உறுதி செய்வது இதில் உதவும் என்கிறார். மேலும் அனைத்திற்கும் அலைப்பேசியை நம்பி இருக்காமல் அவ்வப்போது அது நமது ஞாபத் திறனையும், அறிவாற்றல் வளர்ச்சியையும் பாதிக்காமல் உள்ளதா என்பதை சோதித்து பார்ப்பதும் அவசியம் என்கிறார் அவர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்