முழு உலகிற்கும் இலவச Wi-Fi வசதிகள்

26 மாசி 2014 புதன் 18:02 | பார்வைகள் : 13436
அமெரிக்காவைச் சேர்ந்த கம்பனியொன்று இன்டர்நெட்டுக்கு மாற்றாக அவுட்டர்-நெட் வலைப்பின்னலை ஸ்தாபிக்கத் திட்டமிடுகிறது.
இது உலகளாவிய ரீதியில் செய்மதிகளை இணைத்து பூமியில் வாழும் சகல மக்களுக்கும் இணையத் தகவல்களை இலவசமாக வழங்கும் வலைப்பின்னலாகும்.
உலகின் எந்த இடத்தில் இருந்தாலும், எந்த வகையிலான தணிக்கைகள் மற்றும் வடிகட்டல்களைத் தாண்டி சகல மக்களும் இலவசமாக இணைய வசதிகளைப் பெற வழிவகுப்பது நிவ்யோர்க்கை மையமாகக் கொண்ட ஊடக அபிவிருத்தி முதலீட்டு நிதியம் (Media Development Investment Fund – MDIF) என்ற அமைப்பின் கருதுகோளாகும்.
நூற்றுக்கணக்கான செய்மதிகளை உருவாக்கி, ஒரு செய்மதி மண்டலம் போன்றதொரு அமைப்பை வளிமண்டலத்தில் ஸ்தாபிப்பது பற்றி MDIF யோசனை கூறுகிறது. பூமியில் ஸ்தாபிக்கப்படும் நூற்றுக்கணக்கான நிலையங்களில் இருந்து அனுப்பப்படும் இணையத் தரவுகளை கணினிகள் அல்லது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் மக்கள் பெற வழிவகுக்க வேண்டுமென MDIF யோசனை கூறுகிறது.
இன்று உலக சனத்தொகையில் 40 சதவீதமான மக்களுக்கு இணைய வசதிகள் இல்லை. இதற்குக் காரணம், இணையத்தின் மீது கட்டுப்பாடு விதிக்கும் அரசுகள் மாத்திரமல்ல. பின்தங்கிய பிரதேசங்களுக்கு சேவைகளை வழங்குவதில் உள்ள செலவினங்களும் தானென அறிவிக்கப்படுகிறது.
அவுட்டர்-நெட்டின் ஊடாக நிவ்யோர்க் அல்லது ரோக்கியோவில் இருப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய அதே வசதிகள், சைபீரியா முதல் மேற்கு அமெரிக்காவின் பின்தங்கிய தீவுகளில் உள்ள மக்களுக்கும் கிடைக்கும்.
தமது திட்டத்திற்குத் தேவையான நிதியுதவிகள் கிடைத்தவுடன், எங்கிருந்தும் தரவுகளை வழங்கும் ஆற்றலை சேர்ப்பதற்கு திட்டமிடுகிறது.
இத்தகைய வலைப்பின்னலை ஏற்படுத்துவது மிலிவான விடயமாக இருக்காது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்குத் தேவையான செய்மதிகளை உருவாக்கி, அவற்றை செயற்படுத்த 100,000 டொலர் முதல் 300,000 டொலர் வரையான தொகை தேவைப்படக்கூடும்.