Paristamil Navigation Paristamil advert login

காலிஸ்தான் பயங்கரவாதிகள் பட்டியல் தயார்!...

காலிஸ்தான் பயங்கரவாதிகள் பட்டியல் தயார்!...

25 புரட்டாசி 2023 திங்கள் 16:33 | பார்வைகள் : 3831


வெளிநாடுகளில் இருந்தபடி, நம் நாட்டில் நாச வேலைகளில் ஈடுபடும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர்கள், 19 பேரின் சொத்துக்களை, யு.ஏ.பி.ஏ., சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்ய என்.ஐ.ஏ., நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை பிரித்து காலிஸ்தான் எனும் தனி நாடாக அறிவிக்கக் கோரி, காலிஸ்தான் ஆதரவாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் வன்முறை சம்பவங்களை பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் அரங்கேற்றி வருகின்றன. 

மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த அமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று, அந்நாட்டு குடியுரிமை பெற்று, அங்கு சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றனர்.

வன்முறை

அங்கிருந்தபடி நம் நாட்டில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். 

இது போன்ற காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கான புகலிடங்களில், வட அமெரிக்க நாடான கனடா முதலிடம் வகிக்கிறது. 

பேச்சு சுதந்திரத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறும் அந்த நாட்டில் இருந்தபடி, இவர் கள் நம் நாட்டில் வன்முறைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

அப்படிப்பட்ட பயங்கரவாத அமைப்பான, 'காலிஸ்தான் டைகர் போர்ஸ்' என்ற அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள சர்ரே நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் கடந்த ஜூன் மாதம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த கொலையில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கனடா வில் வசித்து வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் என்பவருக்கு சொந்தமான பஞ்சாபின் சண்டிகரில் உள்ள வீடு, அமிர்தசரசில் உள்ள நிலம் உள்ளிட்டவற்றை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். 

இவர் நடத்தி வரும், 'சீக்ஸ் பார் ஜஸ்டிஸ்' என்ற அமைப்பு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இவர் மீது மூன்று தேச துரோக வழக்குகள் உட்பட, 22 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மிரட்டல்

கனடாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி ஹிந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி இவர் சமீபத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். 

இந்நிலையில், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், துபாய், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கியபடி இந்தியாவுக்கு எதிரான நாச வேலைகளில் ஈடுபட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாத குழு தலைவர்கள், 19 பேரின் பட்டியலை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தயார் செய்து உள்ளனர். 

யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ், இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இந்தியாவில் உள்ள இவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய என்.ஐ.ஏ., நடவடிக்கை எடுத்து வருகிறது.

உளவு சொன்ன அமெரிக்கா!

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது குற்றஞ்சாட்டி உள்ளது குறித்து அமெரிக்காவின், 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த கொலை வழக்கு தொடர்பான சில உளவு தகவல்களை கனடாவுக்கு,  அமெரிக்கா அளித்துள்ளது. மேலும், கனடா சேகரித்த சில உளவு தகவல்கள், இந்திய ஏஜன்ட்களின் பங்களிப்பை உறுதி செய்ததைத் தொடர்ந்து, குற்றச்சாட்டை முன்வைக்க கனடா முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அகற்றம்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் உள்ள குருத்வாராவில், இந்திய துாதர்கள் மூன்று பேரை படுகொலை செய்ய அழைப்பு விடுத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 

இந்த போஸ்டர்களை அகற்றும்படி உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதை அடுத்து, அவை அகற்றப்பட்டுள்ளன. மேலும், குருத்வாராவின் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்புகள் எதையும் செய்யக் கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்