Paristamil Navigation Paristamil advert login

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்.,கள் சந்திப்பு...

நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.எல்.ஏக்.,கள் சந்திப்பு...

3 ஐப்பசி 2023 செவ்வாய் 18:50 | பார்வைகள் : 2379


கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க., எம். எல்.ஏ.,க்கள் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர். ‛‛அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி நீடிக்கும். பேச்சுவார்த்தை நடக்கிறது‛‛ என பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார். இதனால் பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க., இணைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.   

முறிவு

சமீபத்தில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. அதிமுக.,வின் முடிவை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வி.சி.க., தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். 

பா.ஜ.,வால் இனிமேல் தமிழகத்தில் காலூன்ற முடியாது எனவும் சில அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்து இருந்தனர். பாஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிவு என்பது வெறும் நாடகம் என முதல்வர் ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் மேடை மேடையாக ஏறி பேசினர்.

ரிப்போர்டில் என்ன இருக்கு?

ஆனால் இனிமேல் பாஜ.,வுடன் அதிமுக கூட்டணி கிடையாது என அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி நிருபர்கள் சந்திப்பில் உறுதிப்பட தெரிவித்தார். 

இதற்கிடையே, தமிழகத்தில் கூட்டணி நிலவரம் குறித்து, நிர்வாகிகள் தெரிவித்த கருத்துக்கள் அடிப்படையிலான, 'ரிப்போர்ட்' ஒன்றை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பா.ஜ., மேலிடத்திற்கு அனுப்பி உள்ளதாக செய்தி வெளியானது. இது தொடர்பாக விவாதிப்பதற்காக, டில்லிக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சென்றுள்ளார். இதனால் கூட்டணி விவகாரத்தில் திருப்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணி நீடிக்கும்

இதற்கிடையே, இன்று (அக்.,3) சென்னையில் தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை இல்லாமல் அக்கட்சி நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணி நீடிக்கும் என்றும், அதற்காக தான் பேச்சுவார்த்தை நடக்கிறது எனவும் பா.ஜ., துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார். அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி தேசிய தலைமை முடிவெடுக்கும் என பா.ஜ., மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.

சந்திப்பு

இப்படியான சூழலில் கோவைக்கு பல்வேறு நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அதிமுக எம். எல்.ஏ.,க்கள் அமுல் கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் சந்தித்துள்ளனர். அப்போது பா.ஜ., எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உடன் இருந்தார். கூட்டணி முறிவு என அதிமுக கூறிவந்த நிலையில் இந்த சந்திப்பால் பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க., இணைகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.  

அரசியல் பேசவில்லை

சந்திப்பிற்கு பிறகு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியில், ''இந்த சந்திப்பின்போது அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை. தேங்காய், கொப்பரை உள்ளிட்டவை குறித்த கோரிக்கை மனுவை அளித்தோம். அதிமுக எம்எல்ஏ செல்வராஜூம் அவர் தொகுதி பிரச்னை தொடர்பாக மனு அளித்தார். கூட்டணி குறித்து பழனிசாமி முடிவெடுப்பார்; நாங்கள் அது குறித்து எதுவும் பேசவில்லை.'' என்றார்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்