Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் எதிர்க்கட்சி எதற்கு இருக்கிறது : சீமான் கேள்வி

 தமிழகத்தில் எதிர்க்கட்சி எதற்கு இருக்கிறது : சீமான் கேள்வி

9 ஐப்பசி 2023 திங்கள் 15:47 | பார்வைகள் : 2625


தமிழக மக்களை காப்பாற்றி விட்டோம், இனி இந்தியாவை காப்பாற்றப் போகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கிளம்பிவிட்டார்" என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் இன்று(அக்.,8) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எதற்காக இருக்கிறது?

அப்போது செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: சிந்து நதியில் இருந்து 80 விழுக்காடு நீரை பாகிஸ்தான் தான் ஒப்பந்த அடிப்படையில் பிரித்துக்கொள்கிறது. பிரம்மபுத்திராவில் இருந்து சீனா, வங்க தேசம், இந்தியா ஆகிய நாடுகள் எந்த சிக்கலும் இன்றி நீரை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், ஒரே நாட்டில் அருகில் இருக்கும் மாநிலத்தில் இருந்து உரிய நீரை பெற முடியவில்லை.

காவிரி என்பது நமக்கு உயிர் ஆறு. காவிரி பிரச்னையில் ஒவ்வொரு முறையும் நீதிமன்றம் சென்று தான் உரிமையை நிலை நாட்டுகிறோம். நீதிமன்றம் சென்றுதான் உரிமையை பெற முடியும் என்றால் பார்லிமென்ட், சட்டசபை எதற்காக இருக்கிறது?.

ஸ்டாலினை சாடிய சீமான்

கர்நாடகாவில் ஆட்சியாளர்கள் தாம் மாநில மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். தமிழக மக்கள் ஓட்டளித்து நம் மாநில முதல்வராக உள்ள ஸ்டாலின், நம் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால் எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை.

தமிழகத்தில் 100 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். தமிழக மக்களை காப்பாற்றி விட்டோம், இனி இந்தியாவை காப்பாற்றப் போகிறோம் என்று முதல்வர் ஸ்டாலின் கிளம்பிவிட்டார். திமுகவின் கூட்டணி கட்சிகளும் இது தொடர்பாக வாய் திறக்கவில்லை.

எதிர்க்கட்சி எதற்கு?

கொடுமையிலும் கொடுமை. எதிர்க்கட்சி என்று ஒன்று இருக்கிறது. அது எதற்கு இருக்கிறது என்று கூட தெரியவில்லை. எதிர்க்கட்சி சுத்தமாக எதையும் பேசுவது கிடையாது. இப்படியே சென்றால் காவிரி என ஒன்று இருந்ததையே மறந்துவிட வேண்டியது தான். பணத்தை சாப்பிட்டு விட்டு படுத்து கொள்ள வேண்டியது தான். காவிரி மேலாண்மை ஆணையத்தின் முடிவுகளில் தலையிட முடியாது என உச்ச நீதிமன்றம் அழகாக தப்பித்துக்கொள்கிறது. ஆக, தமிழர்களை திட்டமிட்டு வஞ்சிக்கும் சூழ்ச்சிகள் நடக்கிறது என்பதுதான் உண்மை.

தோல்வி பயம்

காங்கிரசும் பாஜ.,வும் இந்திய ஒற்றுமை பேசும். ஆனால், கர்நாடகா என்று வரும்போது மாநில கட்சியாக மாறிவிடும். தமிழர்களின் உரிமையை தேர்தலுக்காக பலியிட தயாராக இருக்கின்றனர். உரிய நீரை தமிழகத்திற்கு பகிர்ந்து கொடு என்று சொன்னால் கர்நாடகாவில் காங்கிரஸ் தோற்றுவிடும், அங்கு பாஜ., சொன்னால் பாஜ., தோற்றுவிடும். இவ்வாறு சீமான் கூறினார்.

 

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்