ஒடிசா ரயில் விபத்து: 28 உடல்களை தகனம் செய்ய அரசு முடிவு
10 ஐப்பசி 2023 செவ்வாய் 06:05 | பார்வைகள் : 3071
ஒடிசா ரயில் விபத்து நடந்து நான்கு மாதங்களாகியுள்ள நிலையில், உரிமை கோரப்படாத 28 பேரின் உடல்களை இன்று தகனம் செய்ய, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாநகா பஜார் ரயில் அருகே, கடந்த ஜூன் மாத துவக்கத்தில், மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இதில், 297 பேர் உயிரிழந்தனர். இந்த கோர விபத்தில் உயிரிழந்த 297 பேரில், 162 பேரின் உடல்கள், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
இவற்றில், 134 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்து நடந்து நான்கு மாதங்களாகியும், இதுவரை, 28 பேரின் உடல்கள் அடையாளம் காணப்படாமல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உரிமை கோரப்படாத 28 பேரின் உடல்களை தகனம் செய்ய, புவனேஸ்வர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இது குறித்து, புவனேஸ்வர் மாநகராட்சி மேயர் சுலோச்சனா தாஸ் கூறுகையில், ''உரிமை கோரப்படாத 28 பேரின் உடல்கள், மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்படும். இந்த உடல்களை, இன்று தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.