Paristamil Navigation Paristamil advert login

"நான் தமிழனும் இல்லை; சிங்களவனும் இல்லை; நான் ஒரு கிரிக்கட்டர்...!"

14 ஐப்பசி 2023 சனி 09:38 | பார்வைகள் : 2215


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்  நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையாமாகக்கொண்டு தயாரிக்கப்பட்ட ‘800’ திரைப்படம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வெளிவருவதற்கு முன்பும் அதற்குப்பின்னரும் முரளியை மையமாகக் கொண்ட சர்ச்சைகள் தொடர்கின்றன.  

இதற்கு முன்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான கபில்தேவ், மொகமட் அசாருதீன், டோனி, பெண்கள் கிரிக்கட் அணித் தலைவர் மிட்டாலி ராஜ், ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக்கொண்டும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அந்த திரைப்படங்கள் ஏற்படுத்தாத சர்ச்சைகளை முரளியின் '800' ஏற்படுத்தி வருகின்றது. 

இதற்கு பிரதான காரணமாக இருப்பது முரளியின் சர்ச்சைக்குரிய கருத்துகளாகும். ஆரம்பத்தில் இத்திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. எனினும் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது முரளிதரன் அரசாங்கத்தின் சார்பாக தெரிவித்த கருத்துகள் காரணமாக இலங்கை தமிழர்கள் அவர் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்றதை முரளி ஒரு சந்தர்ப்பத்தில் தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் என்று கூறியிருந்தார். மேலும் இலங்கையில் எந்த சந்தர்ப்பத்திலும் அவர் ஊடகங்களிலும் ஏனையோர் மத்தியிலும் தமிழில் கதைப்பதை தவிர்த்தே வந்தார். கூடுதலாக அவர் சிங்கள மக்கள் மத்தியிலேயே வலம் வந்து கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரது வேடத்தில் தென்னிந்திய சினிமா கலைஞர்களில் தமிழர்கள் எவரும் நடிக்கக் கூடாது என எதிர்ப்புகள் கிளம்பியதால் விஜய் சேதுபதி அதிலிருந்து விலகினார்.

பின்னர் மதூர் மிட்டல் அவரது வேடத்தை ஏற்று நடிக்க திரைப்படமானது கடந்த 6 ஆம் திகதி வெளியானது. எனினும் அதற்கு முன்பதாக வெளிவந்த முன்னோட்ட காட்சியில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகம் இடம்பெறுவது சுட்டிக்காட்டப்பட்டு மீண்டும் முரளி மீது கண்டனங்கள் கிளம்பின. பிறகு அதை மாற்றுவதாக படக்குழு அறிவித்தது.

திரைப்பட முன்னோட்ட நிகழ்வுகள் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற போது முரளிதரனுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு ஆதரவாக அதில் கலந்து கொண்டிருந்தனர். எனினும் நிகழ்வுகளில் ஊடகங்கள் முரளிதரனிடம் பல கேள்விகளை முன்வைத்த போது அதில் பலவற்றிற்கு பதில் கூற அவர் விரும்பியிருக்கவில்லை. பல கேள்விகளை அவர் தவிர்த்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி அவரிடம் தமிழக ஊடகங்கள் கேள்வியெழுப்பியபோது அதை அரசியல்வாதிகளிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் அரசியல் செய்யவில்லையே நான் ஒரு கிரிக்கட்டர் என்றார். 

யுத்த காலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களைப் பற்றி கேட்டபோது  அனைத்துத் தரப்பினரும் யுத்தத்தால் பாதிக்கப்பட்டனர் என்று கூறிய அவர் எனக்கு ஒரு பிரச்சினை வந்த போது அனைவருமே எனக்காக குரல் கொடுத்தனர். ஆகையால் நான் இலங்கையில் யாரையும் சார்ந்து இருக்கவில்லை. நான் அனைவருக்குமான கிரிக்கட்டர் என்று சமாளித்தார்.

அடுத்தடுத்த இடம்பெற்ற நிகழ்வுகளில் அரசியலைப் பற்றி கேள்விகள் கேட்க வேண்டாம் என்றார். நீங்கள் யாருக்கு ஆதரவாக இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு அவர் நான் தமிழனும் இல்லை சிங்களவனும் இல்லை நான் ஒரு கிரிக்கெட்டர்… நான் ஒரு விளையாட்டு வீரன். என்னை அப்படியே விட்டு விடுங்கள் என்று கூறி முடித்து விட்டார். இந்த பதில் இப்போது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

முரளிதரன் பிறப்பால் ஒரு தமிழனாக இருந்தாலும் ஏன் தனது அடையாளத்தை மறைத்து செயற்படுகின்றார் என்பது பலரினதும் கேள்வியாக உள்ளது. அவர் யாருக்கு பயப்படுகின்றார் என்பதும் புரியவில்லை. மேலும் தனது வாழ்க்கையை கூறும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் அதில் பல கேள்விகளுக்கு விடைகள் உள்ளன என்றும் அவர் கூறி வருகின்றார்.

முரளியின் இந்த சமாளிப்புகள் மற்றும் தனது படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்ற கருத்துகள்  குறித்து இலங்கை வாழ் தமிழ் மக்கள்  தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமூக ஊடகங்களில் அவரின் மீது பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். அவர் எப்போதும் சிங்கள மக்களை திருப்திபடுத்தும் ஒருவர் என்பதே அனைவரினதும் வாதமாக உள்ளது. அதே வேளை தான் எப்போதும் அரசியல் செய்யவில்லையென தெரிவித்த அவர் மலையக அரசியல் குறித்து தெரிவித்த கருத்தும் இப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

தான் கடந்த பல  வருடங்களாக நற்குண அமைப்பு என்ற பெயரில், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரக் கூடிய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி வருவதாகவும் ஆனால் அதற்கு மலைய அரசியல்வாதிகள் தடையாக இருப்பதாகவும் அவர் தலைநகரில் இடம்பெற்ற ஒரு ஊடகவியலாளர்கள்  சந்திப்பில் கருத்துத் தெரிவித்திருந்தார். அதாவது மலையக மக்களுக்கு உதவ அரசியல்வாதிகள் முன்வராத அதே வேளை அவர்களுக்கு வேறு எவராவது உதவ வந்தாலும் விடுவதில்லை. 

மலையகப் பிரதேசங்களில் உள்ள ஏதாவதொரு பொது இடத்தில் நிகழ்வுகளை முன்னெடுக்க அதற்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அனுமதி வழங்குவதில்லை. ஏனென்றால் அவர்கள் மலையகத்தின் ஏதாவதொரு அரசியல் கட்சியின் கையாளாக இருக்கின்றனர். உள்ளூராட்சி மன்றங்களின் கீழ் உள்ள ஒரு மைதானத்தைக் கூட அவர்களின் அனுமதியின்றி பெற முடியாது. அனுமதி வழங்க இழுத்தடிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். 

இறுதியாக இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டார். கண்டியைச் சேர்ந்த அவர் ஏன் நுவரெலியாவில் வாக்கு கேட்க வேண்டும் என பல விமர்சனங்கள் அப்போதே கிளம்பின. அவருக்கு ஆதரவாக வாக்கு கேட்க முரளிதரனும் நுவரெலியா வந்தார். ஆனால் அவரது சகோதரர் அத்தேர்தலில் 28 ஆயிரம் வாக்குகளை எடுத்து தோல்வியுற்றார். இதன் காரணமாக சில ஆயிரம் வாக்குகளால் மலையகத்தின் பிரதான கட்சியொன்றின் வேட்பாளர் எம்.பியாவதற்குரிய வாய்ப்பை இழந்தார். இவ்வாறான செயற்பாடுகளே அவர் மீது அரசியல்வாதிகளும் மலையக வாக்காளர்களும் கோபமாக இருப்பதற்குக் காரணம்.

மேலும் முரளிதரன் இலங்கையணியில் இருந்த போது மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்தார். அக்காலங்களில் முரளியின் அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தார். ஆனால் அக்காலகட்டங்களில் அவர் மலையக சமூகத்துக்கு எந்த உதவிகளையும் செய்ய முன்வரவில்லை. தனக்குப்பிறகு எந்த தமிழ் கிரிக்கட் வீரரும் அணியில் இடம்பிடிக்க அவர் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லையென்பது முக்கிய விடயம். 

அவர் கல்வி கற்ற கண்டி புனித அந்தோணியார் கல்லூரியிலும் கூட அவரால் ஒருவரை கிரிக்கெட் வீரராக உருவாவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தவில்லை. அதாவது தனக்குப்பிறகு ஒரு சுழற்பந்து வீச்சாளரை உருவாக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. மாறாக சென்னையில் பயிற்சி அமைப்பொன்றை உருவாக்கி அங்கேயே தங்கி விட்டார். 

இவ்வாறான பல காரணங்களால் முரளிதரன் ஒரு தமிழராக இருந்தாலும் தமிழர்களால் விரும்பப்படாத ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இதன் காரணமாக அவரது வாழ்க்கையை க;றும் 800 படத்தை பார்ப்பதற்கும் பெரிதாக எவரும் ஆர்வம் காட்டவில்லை போன்று தெரிகின்றது. 

நன்றி வீரகேசரி
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்