Paristamil Navigation Paristamil advert login

கனடா வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ரகசிய சந்திப்பு?

 கனடா வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் ரகசிய சந்திப்பு?

12 ஐப்பசி 2023 வியாழன் 08:55 | பார்வைகள் : 2206


இந்தியா, கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலேனி ஜோலி சமீபத்தில் ரகசியமாக சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வட அமெரிக்க நாடான கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில், இந்திய ஏஜன்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக,  அந்த நாட்டு பார்லிமென்டில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இரு தரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பிட்ட சில அதிகாரிகளை திரும்பப் பெறும்படி இரு நாடுகளும் பரஸ்பரம் கூறின. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் அதிகமாக இருக்கும், 41 துாதரக அதிகாரிகளை திரும்பப் பெறும்படி, கனடாவுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், கனடாவைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதும் நிறுத்தப் பட்டது.

இந்த விவகாரத்தில், கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவருடைய நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, 'இந்தியாவுடனான நட்பு தொடர விரும்புகிறோம்' என, ட்ரூடோ சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

அப்போது கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலேனி ஜோலி அவரை ரகசியமாக சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் சமரசமாக செயல்படுவதற்கு கனடாவின் விருப்பத்தை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்