Seine-et-Marne : இளம் பெண் சுட்டுக்கொலை! - நால்வர் கைது!

16 ஐப்பசி 2023 திங்கள் 13:24 | பார்வைகள் : 7717
இளம் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை காலை இச்சம்பவம் Croissy-Beaubourg ( Seine-et-Marne ) நகரில் இடம்பெற்றுள்ளது.
24 வயதுடைய பெண் ஒருவர் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து சடலத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். குறித்த பெண் அவரது நண்பர்களுடன் ஒரே வீட்டில் வசித்த நிலையில், சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு அவர் சுடப்பட்டுள்ளார். காவல்துறையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், அங்கு இருந்த நால்வரை முதல்கட்டமாக கைது செய்துள்ளனர்.
பின்னர் அன்று மாலை அவர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டனர். நான்காவது நபர் தொடர்ந்தும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளார்.
குறித்த நண்பர்கள் போதைப்பொருள் பழக்கம் உடையவர்கள் எனவும், அதற்குரிய தடயங்களை வீட்டில் இருந்து கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.