Paristamil Navigation Paristamil advert login

சீனப் பயணம் வெற்­றி­க­ர­மா­னதா...?

சீனப் பயணம் வெற்­றி­க­ர­மா­னதா...?

26 ஐப்பசி 2023 வியாழன் 09:38 | பார்வைகள் : 2342


சீனாவின் பெய்­ஜிங்கில் பி.ஆர்.ஐ. எனப்­படும், பட்டையும் பாதையும் திட்­டத்தின் மூன்­றா­வது மாநாட்டில் ஜனா­தி­பதி ரணில் விக்கி­ர­ம­சிங்க பங்­கேற்று விட்டு நாடு திரும்­பி­யி­ருக்­கிறார்.

கடந்த ஆண்டு பெரும் குழப்­பங்­க­ளுக்குள் நாடு சிக்­கி­யி­ருந்த போது, முதலில் பிர­த­ம­ரா­கவும், பின்னர் ஜனா­தி­ப­தி­யா­கவும் பொறுப்­பேற்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா, சிங்­கப்பூர் உள்­ளிட்ட பல நாடு­க­ளுக்குப் பயணம் செய்­தி­ருந்த போதும், சீனா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டது இதுவே முதல்­முறை.

இந்­தி­யா­வுக்கு கூட மூன்று மாதங்­க­ளுக்கு முன்னர் தான், அவ­ரது முதல் பயணம் இடம்­பெற்­றது.

இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு கை கொடுக்கும் முக்­கி­ய­மான இரண்டு நாடுகள் இந்­தி­யாவும் சீனாவும் தான்.

பொரு­ளா­தார நெருக்­க­டியின் போது 4 பில்­லியன் டொலர்­களைக் கொடுத்­தது இந்­தியா.

சீனா, 8 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான கடன்­களைக் கொடுத்­தி­ருக்­கி­றது.

இந்த இரண்டு நாடு­க­ளுடன் இரா­ஜ­தந்­திர ரீதி­யான நெருக்­கத்­தையும், பொரு­ளா­தார உற­வு­க­ளையும் வளர்த்துக் கொள்ள வேண்­டிய அவ­சியம் இலங்­கைக்கு இருக்­கி­றது.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில், இந்­தி­யாவும் சீனாவும் சுற்­றுலாப் பய­ணி­களை அதி­க­ளவில் கொண்டு வரக்­கூ­டிய நாடு­க­ளா­கவும் இருக்­கின்­றன.

அதனால் தான் அண்­மையில் சீனா, இந்­தியா உள்­ளிட்ட ஐந்து நாடு­களின் சுற்­றுலாப் பய­ணி­க­ளுக்கு இலங்கை அர­சாங்கம் விசா கட்­ட­ணங்­களை அற­வி­டு­வ­தில்லை என்று முடிவு செய்­தி­ருக்­கி­றது.

இலங்­கையில் பொரு­ளா­தார வாய்ப்­பு­களைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், இலங்­கைக்கு பொரு­ளா­தார வாய்ப்­பு­களை வழங்­கு­வ­தற்கும் இந்த இரண்டு நாடு­களும் தயா­ராக இருக்­கின்­றன.

ஆனால், இந்தப் பொரு­ளா­தார உத­வி­க­ளையும், ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் பெற்றுக் கொள்­வ­தற்கு இரு நாடு­க­ளுக்கும் இடையில் காணப்­படும் போட்டி தான் தடை­யாக இருக்­கி­றது.

இந்த இரண்டு நாடு­களும் தங்­களை எதிரி நாடு­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­வ­தில்லை.  கடு­மை­யான போட்டி நாடு­க­ளா­கவே அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்­கின்­றன.

ஆனாலும், மறை­மு­க­மாக, இந்­தி­யா­வுக்கும் சீனா­வுக்கும் இடையில் ஒரு பனிப்போர் நடந்து கொண்­டி­ருக்­கி­றது என்­பது தான் உண்மை.

சீனக் கடற்­ப­டையின்  ஆய்வுக் கப்­ப­லான ஷி யான் 6 ஐ இலங்­கைக்குள் வர அனு­ம­திப்­பது தொடர்­பான விவ­கா­ரத்தில் காணப்­ப­டு­கின்ற இழு­பறி ஒன்றே, இந்த இரண்டு நாடு­க­ளுக்கும் இடையில் உள்ள முரண்­பா­டுகள், மோதல்­களை வெளிப்­ப­டுத்த போது­மா­னது.

இந்த இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான மோதல் அல்­லது முரண்­பா­டு­களைத் தாண்­டியே பொரு­ளா­தா­ரத்தை வளர்த்துக் கொள்ள வேண்­டிய நிலையில் இலங்கை இருக்­கி­றது.

இலங்­கையின் புவிசார் அமை­விடம் தான் இந்த சிக்­க­லுக்குக் காரணம். இலங்­கையின் அமை­வி­டத்தை தங்­க­ளுக்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்காக, அல்­லது தங்­களின் பாது­காப்­புக்­காக பயன்­ப­டுத்திக் கொள்­வ­தற்­காக, அல்­லது தங்­க­ளுக்கு எதி­ராக வேறெ­வரும் பயன்­ப­டுத்தி விடக்கூடாது என்­ப­தற்­காகத் தான், இந்­தி­யாவும் சீனாவும் இந்தப் போட்­டியில் ஈடு­ப­டு­கின்­றன.

இந்த புவிசார் அமை­விட முக்­கி­யத்­து­வத்­தினால், இந்­தி­யா­வி­னதோ, சீனா­வி­னதோ சிற­குக்குள் மாத்­திரம் இருந்து விட முடி­யாத சிக்கல் நிலையும் இலங்­கைக்கு இருக்­கி­றது.

இந்தச் சிக்­கலைத் தீர்ப்­ப­தற்கு- கொழும்பு தன்னை ஒரு அணி­சேரா நாடு என்று காண்­பிக்­கவே முயற்­சித்து வந்­தி­ருக்­கி­றது.

ஆனால், அதற்கு இது­வரை மேற்­கொண்ட எந்த முயற்­சி­களும், முழு­மை­யான பலனைக் கொடுத்­தி­ருக்­க­வில்லை.

சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்­கேற்ப, பிரச்­சி­னை­களின் தன்­மைக்கு ஏற்ப அவ்­வப்­போது இந்த சம­நி­லைக்­கான போராட்டம் இருந்து கொண்டு தான் இருக்­கி­றது.

இத்­த­கைய போராட்டம் தீவி­ர­மாக இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் சூழலில் தான், சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புக்­கான மூன்­றா­வது பி.ஆர்.ஐ. மாநாட்­டுக்­காக பெய்ஜிங் சென்­றி­ருந்தார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

இந்த மாநாட்­டுக்­கான அழைப்பைக் கருத்தில் கொண்டு அவ­ரது பயணம் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தாலும், சீனா­விடம் அதி­க­ளவு பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புகள், முத­லீ­டு­களை பெற்றுக் கொள்­வதும், கடன் மறு­சீ­ர­மைப்பு உத்­த­ர­வா­தங்­களை பெற்றுக் கொள்­வதும் தான் அந்தப் பய­ணத்தின் நோக்­க­மாகும்.

இந்தப் பயண நோக்­கத்தை ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் அடைய முடிந்­தி­ருக்­கி­றதா என்­பது தான் இப்­போ­துள்ள முக்­கி­ய­மான கேள்வி.

சர்­வ­தேச ஒத்­து­ழைப்­புக்­கான மூன்­றா­வது பி.ஆர்.ஐ. மாநாட்டில் சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

அதன்­படி, அடுத்த 10 ஆண்­டு­களில் சீனா 100 பில்­லியன் டொலர்­க­ளுக்கும் அதி­க­மாக பி.ஆர்.ஐ. திட்­டத்தில் முத­லீடு செய்யப் போகி­றது.

இது இந்த திட்­டத்தில் பங்­கா­ளி­க­ளாக இணைந்து கொள்­ளு­கின்ற நாடு­களின், குறிப்­பாக வளரும் நாடு­களின் பொரு­ளா­தா­ரங்­களில் முத­லீடு செய்­யப்­படும் அல்­லது கட­னாக வழங்­கப்­படும்.

இந்த முத­லீடு அல்­லது கடன் அடுத்த 10 ஆண்­டு­களில் இந்த திட்­டத்­துடன் இணைந்­தி­ருக்கும் நாடு­க­ளுக்கு கிடைக்கப் போகும் பெரு வாய்ப்­பாக இருக்கும்.

அதே­வேளை இந்தத் திட்­டத்தில்

இணைந்து கொள்ளும் பங்­காளி நாடு­க­ளுக்கு சீனாவின் மிகப்­பெ­ரிய சந்­தையைத் திறந்து விடு­வ­தற்கும் தயா­ராக இருப்­ப­தாக சீன ஜனா­தி­பதி ஸி ஜின்பிங் அறி­வித்­தி­ருக்­கிறார்.

இந்த இரண்டு அறி­விப்­பு­களும் இலங்கை உள்­ளிட்ட பி.ஆர்.ஐ. பங்­காளி நாடு­க­ளுக்கும், சீனா தனது ஆதிக்­கத்தை விரி­வாக்­கு­வ­தற்கு குறி வைத்­தி­ருக்கும் நாடு­க­ளுக்கும் மிகப்­பெ­ரிய வரப்­பி­ர­சா­த­மாக அமையும்.

இந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில், இலங்­கைக்கு சீனா முன்­னு­ரிமை கொடுக்­கி­றது.  இந்­தி­யா­வுக்கு மிக அரு­காக இருக்கும் இலங்கை தீவில் அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை 99 வருட குத்­த­கைக்குப் பெற்­றி­ருக்­கி­றது.

கொழும்பு துறை­மு­கத்தில் ஒரு கொள்­கலன் முனை­யத்தை கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருக்­கி­றது.

கொழும்பு துறை­முக நக­ரத்தை நிர்­மா­ணித்துக் கொண்­டி­ருக்­கி­றது.

ஆக, இலங்­கையின் அபி­வி­ருத்­தியில் ஒரு பங்­கா­ளி­யாக மாத்­திரம் சீனா இணைந்­தி­ருக்­க­வில்லை.  இலங்­கையைத் தனது எதிர்­கால பாது­காப்புத் தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்தக் கூடிய இட­மா­கவும் அடை­யாளம் கண்­டி­ருக்­கி­றது சீனா.

இலங்­கையை சீனா தனது பாது­காப்பு நலன்கள், தேவை­க­ளுக்குப் பயன்­ப­டுத்திக் கொள்ள முடி­யுமா, இல்­லையா என்ற கேள்வி இங்கு முக்­கி­ய­மில்லை.

அது நடை­முறைச் சாத்­தி­ய­மா­கவோ, சாத்­தி­ய­மற்­ற­தா­கவோ இருக்­கலாம்.

அவ்­வா­றான எதிர்­பார்ப்பைக் கொண்­டி­ருக்கும் இடங்­களில் ஒன்­றாக இலங்­கையை சீனா  அடை­யா­ளப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது என்­பதே கவ­னிக்க வேண்­டி­யது.

அவ்­வா­றான இடங்­களில் சீனாவின் செல்­வாக்கை அதி­க­ரிப்­பது முக்­கி­ய­மான தேவைப்­பா­டாக இருக்­கி­றது.

அந்த இலக்கின் ஊடாகப் பார்த்தால், அடுத்த 10 ஆண்­டு­களில் சீனா பி.ஆர்.ஐ. திட்­டத்தில் செய்யப் போகும் 100 பில்­லியன் டொல­ருக்கும் அதி­க­மான நிதியில் ஒரு குறிப்­பிட்­ட­ளவு இலங்­கைக்கு கிடைக்கும் சாத்­தி­யங்கள் அதி­க­மா­கவே உள்­ளன.

இலங்­கையின் அபி­வி­ருத்தித் திட்­டங்­க­ளிலோ, அல்­லது உட்­கட்­ட­மைப்புத் திட்­டங்­க­ளிலோ சீனா அந்த முத­லீட்டைச் செய்­யு­மாயின், அது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பய­ணத்­துக்கு கிடைக்­கின்ற மிகப் பெரிய வெற்­றி­யாக அமையும்.

சீனாவின் நிதி­ய­மைச்சர் லியூ குன் மற்றும் சீனாவின் உதவிப் பிர­தமர் டிங் சியோ­சியாங் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் நடத்­திய பேச்­சுக்­களின் போது, இலங்­கையில் முத­லீட்டை அதி­க­ரிப்­பது குறித்து பேசி­யி­ருக்­கிறார் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க.

இதன்­போது, இரு நாடு­க­ளுக்கும் பய­ன­ளிக்கும் வகையில், நீண்­ட­கால, இடைக்­கால கடன் திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு சீனத் தரப்பி்ல் இணக்கம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அம்­பாந்­தோட்டை துறை­முக அபி­வி­ருத்தி மற்றும் கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்­திக்கு சீனா உதவும் என்று சீனாவின் உதவிப் பிர­தமர் உறுதி அளித்திருக்கிறார்.

எவ்வாறாயினும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான சீனாவின் 100 பில்லியன் டொலர் திட்டம் மட்டுமே இப்போது அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர, அது எவ்வாறு எந்தெந்த நாடுகளுக்கு பகிரப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவில்லை.

அது அடுத்த கட்டம். அந்தக் கட்டத்தில் தான் இலங்கை எந்தளவுக்கு நன்மையைப் பெற முடியும் என்ற கேள்விக்குப் பதில் கிடைக்கும்.

சீனாவின் முதலீட்டை எதிர்பார்க்கும் இலங்கை கடன்களை எதிர்பார்க்கவில்லை. ஏற்கெனவே சீனாவின் கடன்களால் தான் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

இலங்கை அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளாவிடினும், புதிய கடன்களைப் பெற்றுக் கொள்வதில் உள்ள ஆபத்தை ரணில் விக்கிரமசிங்கவினால் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.

அதனால் தான் அவர் கடன்களை பெறுவதை விட முதலீடுகளை அடைவதில் அதிக ஆர்வத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நன்றி வீரகேசரி

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்