Paristamil Navigation Paristamil advert login

சத்து மாவு கஞ்சி

சத்து மாவு கஞ்சி

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 10344


 அக்காலத்தில் எல்லாம் தானியங்களைத் தான் அதிகம் சாப்பிடுவார்கள். அதனால் தான் அவர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடிந்தது. நீங்களும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நினைத்தால், தானியங்கள் சேர்த்து செய்யப்படும் சத்து மாவு கஞ்சியை செய்து குடியுங்கள். குறிப்பாக இந்த கஞ்சி வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற ஒன்று. பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

இங்கு சத்து மாவு கஞ்சியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை உங்கள் குழந்தைக்கும், குடும்பத்தினருக்கும் செய்து கொடுத்து, அவர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள்.
 
தேவையான பொருட்கள்:
 
சத்து மாவு - 2 ஸ்பூன்
பால் - 1 டம்ளர்
உப்பு - சிட்டிகை
சர்க்கரை - தேவையான அளவு
 
சத்து மாவிற்கு...
 
கேழ்வரகு - 1 கப்
கம்பு - 1 கப்
சோளம் - 1 கப்
கோதுமை - 1 கப்
புழுங்கல் அரிசி - 1 கப்
பார்லி - 1 கப்
ஜவ்வரிசி - 1 கப்
பச்சை பயறு - 1 கப்
சோயா பீன்ஸ் - 1 கப்
வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
கருப்பு சுண்டல் - 1 கப்
மக்காச்சோளம் - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
முந்திரி - 100 கிராம்
பாதாம் - 100 கிராம்
ஏலக்காய் - 50 கிராம்
 
செய்முறை:
 
சத்து மாவு செய்வதற்கு...
 
முதலில் சத்து மாவிற்கு கொடுத்துள்ள பொருட்களில் கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கருப்பு சுண்டல், மக்கா சோளம் போன்றவற்றை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை நன்கு கழுவி, ஒரு துணியில் போட்டு மூட்டை கட்டி வைக்க வேண்டும்.
 
பின் அதனை ஒரு நாள் முழுவதும் ஒவ்வொரு முறை அது காயும் போது, அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 
பிறகு மறுநாள் அந்த மூட்டையைத் திறந்து பார்த்தால், முளைக்கட்டியிருக்கும். பின் அதனை வெளியே வெயிலில் போட்டு நன்கு உலர வைக்க வேண்டும், அத்துடன் மீதமுள்ள பொருட்களையும் உலர வைக்க வேண்டும்.
 
மறுநாள் அதனை ரைஸ் மில்லில் கொடுத்து நன்கு மென்மையாக அரைத்து, காற்றுப்புகாத டப்பாவில் போட்டுக் கொள்ள வேண்டும்.
 
கஞ்சி செய்வதற்கு...
 
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அத்துடன் உப்பு சேர்த்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
தண்ணீர் கொதிப்பதற்குள், ஈரமில்லாத ஒரு பாத்திரத்தில் சத்து மாவு போட்டு, அத்துடன் பால் சேர்த்து கட்டி சேராதவாறு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
 
அடுப்பில் உள்ள தண்ணீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயை குறைத்து, அதில் கலந்து வைத்துள்ள சத்து மாவை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
 
சத்து மாவில் இருந்து பச்சை வாசனை போய், ஓரளவு கெட்டியாக இருக்கும் போது, அதனை இறக்கி அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலந்தால், சத்து மாவு கஞ்சி ரெடி!!!
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்